Sunday, 6 October 2013


முள்றியின் டைரி 19 : வீழ்வேனென்று நினைத்தாயோ 



எனக்கு மழைன்னா ரொம்பப் பிடிக்கும்ங்க. மழைன்னா யாருக்குத்தான் பிடிக்காது ராசான்றீங்களா?...கரெக்ட். ஆனா, என்னோட 'பிடிக்கும்ங்க' வுக்குப் பின்னால  ஒரு  Flash Back  இருக்கே. இப்ப புரிஞ்சிருக்குமே, இந்த டைரி எதை பற்றின்னு.  Very Good.

தேவகோட்டை என்னும் ஊர், திருச்சி  - ராமேஸ்வரம் ஹைவேயில் உள்ளது. என்னுடைய பள்ளிப்பருவம் முழுவதும் கழிந்தது இந்த ஊரில்தான். அப்போது நாங்கள் விளையாடும் விளையாட்டுக்கள் சீஸனுக்கு சீஸன் மாறும். கிட்டிப்புல், பம்பரம், கோலி, கம்பாத்தா (இது ஒரு சூப்பர் டூப்பர் விளையாட்டு . இது பற்றி விரிவாக பிறகு எழுதுகிறேன். சரியா? ), ஹாக்கி, பூப்பந்து, எறிபந்து , கால்பந்து, ட்ரையாங்கோ (  I Spy  மாதிரி. ஆனால் விதி முறைகள் வேறு). இந்தியனாகப் பிறந்து விட்டு கிரிக்கெட் விளையாவிட்டால் எப்படி....கிரிக்கெட்டில்தான் நாங்கள் வீதி வீட்டு வீதி , ஊர் விட்டு ஊர் மேட்ச் எல்லாம் நடத்தி வெற்றிக் கொடி நாட்டுவோம். அப்படி ஒரு முறை விளையாட்டாக  விளையாடப் போய் , அது ஒரு பெரிய மானப் பிரச்சினையாகப் போய் விட்டது.

அப்போது நான் 7 - வது படித்துக் கொண்டிருந்தேன். ஒரு நாள் டவுனில், ஆர்ச்சுக்கு  அருகில் ஏதோ ஒரு வேலையாகப் போய்க் கொண்டிருந்தேன்.  "ஏ ...பாலமுரளி கோலமுரளி" என்று யாரோ என்னை அழைத்த மாதிரி இருந்தது. இவ்வளவு செல்லமாக யாரடா நம்மை  அழைப்பது என்று திரும்பினேன். பார்த்தால், இருதய ராஜ், ராமதுரை மற்றும் சரவணன் என்னை நோக்கி ஒடி வந்து கொண்டிருந்தார்கள். "என்னடா... நக்கலா" என்று சத்தமாகக் கேட்டுக் கொண்டே என் நடையை வேகமாக்கினேன். ( இந்த இருதய ராஜ், ராமதுரை, சரவணன்  மூவரும் எங்கள் ஊருக்கு 4 கி.மீ. தொலைவில் உள்ள ராம நகர் கிரிக்கெட் டீமின்  Players. ஒரு மாதத்திற்கு முன்னால்தான்  அவர்களை ஒரு மேட்சில் தோற்கடித்திருந்தோம். அத்தோடு வந்திருந்தால் பிரச்சினை வந்திருக்காது. நாங்கள் ஜெயிச்ச திமிரில் அவர்களை ஏகத்துக்கும்  நக்கல் பண்ணி அனுப்பி விட்டோம். இன்று நான் மட்டும் அவர்களிடம் வசமாக மாட்டிக் கொண்டேன் ) .


என் நடையின் வேகத்தைக் கவனித்த பிசாசுகள், எங்கே,  விட்டால் நான் ஒடி விடுவேனோ என்ற பயத்தில் வேகமாக ஒடி வந்து என்னை வளைத்து விட்டார்கள் ( எப்படித்தான் Mind Reading பண்ணுவாய்ங்கெளோ ) . சரி ..சரண்டர் ஆகி விடலாமென்று, என்னடா வேணும் உங்களுக்கு என்றேன் - கொஞ்சம் உதார் டோனில் ( உள்ளே  இருகின்ற உதறலை வெளியே காண்பிக்காமலேயே ).டேய்..போன மேட்சில்தான் ஏதோ லக்குல ஜெயிச்சுட்டீங்க .....இன்னொரு மேட்ச் விளையாடலாம், வர்றீங்களாடா என்றான் இருதயராஜ். ( ப்பூ ...இவ்வளவுதானா ???? நான் கூட என்னவோ ஏதோன்னு நெனச்சுட்டேன். நம்ம வடிவேலு இருந்திருந்தா " நல்லா பீதியக் கெளப்புறாய்ங்கெடான்னு" சொல்லியிருப்பார்.  அதுசரி ..."நம்ம லக்குல ஜெயிச்சது இந்த Dogs - க்கு எப்படி தெரிஞ்சது" ன்னு எனக்கு ஒரே ஆச்சரியம்).

(வழக்கம்போல )  அதை வெளியே காட்டிக் கொள்ளாமல், என்ன லக்குலையா? என்னங்கடா ... ...நாங்க அடிச்ச நாலு ஆறெல்லாம் மறந்து போச்சா என்றேன் . நான் அதைச் சொன்னதும் அவெய்ங்கெ அப்படியே டெர்ரர் ஆயிடுவாய்ங்கென்லாம் நான் பேராசைப் படவில்லை. ஏதோ அந்த இடத்தை விட்டு நகர்ந்தால் போதும் என்ற மன நிலையில் மட்டுமே இருந்தேன். அவர்கள் அதை சர்வ சாதாரணமாக எதிர்கொண்டார்கள். " நாலு , ஆறா  ????? டேய் இவென் அடிக்கிற ஜோக்கைப் பாருங்கடா....அந்த கேவலமான  De Britto  பிட்சுல  யாரு வேண்டுமானாலும் ஜெயிக்கலாம்டா " என்றான் சரவணன். " அப்புறம் ஏண்டா நீங்க ஜெயிக்கலை" என்றேன் ( புடிச்சமா ....பாயிண்டை...). " சரி விடுடா....இந்த வாரம் மேட்சுக்கு வர முடியுமா முடியாதா " என்றான் ராமதுரை. " மத்த பசங்களை கேட்டு விட்டுத்தான் சொல்ல முடியும் " என்றேன் ( நல்ல வேளை... நிலைமை  நான் நெனச்ச அளவுக்கு மோசமாக இல்லை)." சரி, வாங்கடா அவன்தான் பயப்படுறான்ல " என்றான் இருதய ராஜ். அவன் என்னை உசுப்பி விடுவது புரியாமலேயே நான் " பயமா, எனக்கா....???? " என்று லேசாக ஒரு ஆச்சரியம் காட்டி விட்டு " சரிடா....வர்ற ஞாயிறு  N.S.M.V.P.S Ground - இல் 9 மணிக்கு மேட்சுடா " என்று கமிட் பண்ணி விட்டேன். நகரத்தார் ஸ்ரீ மீனாட்சி வித்யாஸாலய பரிபாலன சங்கம் ஹையர் செகண்டரி ஸ்கூல் என்ற  N.S.M.V.P.S  எங்கள் வீட்டுக்கு மிக அருகில் உள்ள பள்ளி. பெரிய  Ground . 

அவர்கள்  வந்த நோக்கம் நிறைவேறியதில் சந்தோஷமாகப் போய் விட்டார்கள். அவர்கள் போன பிறகுதான் " ஆகா ...கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு விட்டு விட்டோமோ" என்று எனக்குத்  தோன்றியது ( அப்பவே லேட் Thinking தான் ).  சரி வருவது வரட்டும் என்று நகர்ந்து விட்டேன். நீங்க சொன்னா நம்ப மாட்டிங்கங்க ...வீட்டுக்கு வந்ததும் " எங்கேடா ஊர் சுற்றி விட்டு வருகிறாய் " என்று எங்க அப்பா போட்ட சத்தத்தில்  நான் நெஜம்மாலுமே அந்த நிகழ்ச்சியை மறந்து விட்டேன். சமர்த்தாக படிக்க உட்கார்ந்து விட்டேன்.

அந்த பொல்லாத  Black Sunday"  யும் வந்தது. நான் குளித்து முடித்து, சாப்பிட்டு விட்டு எங்க அம்மாவிற்கு ஏதோ உதவி செய்து கொண்டிருந்தேன். வெளியே பார்த்தா " பாலமுரளி , கோலமுரளி , பயந்தாங்கொள்ளி, கொயந்தாங்கொள்ளி என்று ( செல்லமாகக் ) கத்திக் கொண்டிருந்தார்கள்". எனக்கு ஒரு நொடியில் பொறி தட்டியது. ஆ....ஹா.....இந்த ஏழரைகளை மேட்சுக்குக் கூப்பிட்டிருந்தோமெயென்று. தட தடவென்று ஒடி வந்தேன். ( நல்லவேளை வீட்டில் எங்க அப்பா  இல்லை. இருந்தால் பிறந்தநாள் கொண்டாடியிருப்பார் பிறந்தநாள் ).

ரொம்ப கேஷுவலாக .." ஏண்டா இங்க வந்து கத்துறீங்க ? " என்றேன் - எதுவுமே நடக்காதது போல. " ஏண்டா 9 மணிக்கு வரச் சொல்லி விட்டு , என்ன கிண்டலா ?" என்றான் இருதயராஜ். " 9 மணிக்கா ...???? என்ன வெளையாடுறீங்களா ....நான் 10 மணிக்குன்னுல சொல்லியிருந்தேன்..." என்றேன் ரொம்ப கூலாக ( முரளி ...உனக்குத்தான் பொய் சொல்லத் தெரியாதேடா.....எப்படி இது ?????) . அவர்களிடம் ஒரு சிறிய குழப்பம் தெரிந்தது. நம்மதான் ஒரு புள்ளி வெச்சா , கோடு போட்டு ரோடு போட்டு பஸ் விட்ருவோமே. நான் ரொம்ப  Confident - ஆக ஒரு லுக் விட்டேன். அதில் ஒரு கொழுந்து, " ஆமாண்டா அவன் 10 மணிக்குன்னுதான்  சொன்னான்" என்றது ( அவனுக்கு அவெய்ங்கெகிட்ட என்ன காட்டமோ ....) . தில்லானா மோகனாம்பா படத்தில் பத்மினி " நலந்தானா " என்று கண்ணாலேயே கேட்பாரே , அது போல நானும் அவனுக்கு கண்ணாலேயே " நன்றி நண்பா " என்றேன்.

 என்ன தோன்றியதோ, அவர்களும், " சரி ஒழுங்கா 10 மணிக்கு வந்து சேருங்க " , (இல்லாட்டா பிச்சுப்பிட்டோம் பிச்சு) என்று (சொல்லாமல்) சொல்லி விட்டுச்  சென்றார்கள். அவர்கள் அந்தப் பக்கம் போனதுதான் தாமதம் , எங்க அப்பா சைக்கிளை ( திருட்டுத்தனமாக) எடுத்துக் கொண்டு  குரங்குப் பெடலைப் போட்டுக் கொண்டு எங்க டீமில் உள்ள அனைவரின் வீடுகளுக்கும் சென்றேன். என் நேரம்....பாதிப் பேர் வர முடியாது என்று சொல்லி விட்டார்கள். " எங்க அப்பா விட மாட்டார்டா" " படிக்கணும்டா" " எங்க மாமா ஊரில் இருந்து வந்திருக்கார்டா" " எங்க அம்மாவோட சந்தைக்குப் போகணும்டா" என்று ஆளாளுக்கு ஒரு காரணம். தேறியவர்கள் மொத்தம் ஐந்தே ஐந்து பேர்தான். நல்லவேளை எங்க டீம் கேப்டன் ரவியும் அதில்  ஒருத்தன்.அவன்தான் அந்த ஐடியாவை முதலில் சொன்னான். " ஏண்டா... நம்ம மேட்சுகளில் எல்லாம் பந்து பொறுக்கிப் போடுவார்களே  சுட்டிக் குமார், குட்டை வெங்கடேசு,  முனீசு, மணி ..அவெய்ங்கெளெயும் சேர்த்துக்கிட்டா என்னடா ? " என்றான்.  " என்னடா சீரியஸாத்தான் சொல்றீயா ?" என்றேன். "ஆமாண்டா....வா கூப்பிடுவோம் " என்றான். மேற்சொன்ன பொடியனுகளுக்கு நம்பவே முடியலை. உற்சாகமாகக் கிளம்பினார்கள். 


இப்படை தோற்கின் எப்படை வெல்லும் என்று நாங்களும் ( சோர்வாக)  Ground -  க்குள் நுழைந்தோம். Ground - இல் நுழைந்ததுதான் தாமதம், ராமநகர் டீமின் அனைவரும் எங்களைப் பார்த்து கெக்கலி போட்டு சிரிக்க ஆரம்பித்து விட்டார்கள் ( எங்களுக்கே சிரிப்பாகத்தான் இருந்தது). " டேய் ...முரளி...என்னடா பால்குடி மறக்காத பச்ச புள்ளைங்களையெல்லாம் கூட்டிட்டு வந்திருக்க ? நம்ம விளையாடப் போறது கார்க் பால்லடா , லப்பர் பால்ல இல்ல , தெரியும்ல ???" என்று கொக்கரித்தார்கள் ( எங்க ஊர்ல ரப்பரை லப்பர் என்றுதான் ஸ்டைலாக ( ????) அழைப்போம். லப்பர் பால், அழி லப்பர்.....). தெரியும்டா....சின்ன மொளகாய்க்குத் தான் காரம் ஜாஸ்தின்ற மாதிரி ஏதோ சொல்லிச் சமாளித்த ஞாபகம். 


விளையாட்டு ஆரம்பித்தது. டாஸில் அவர்கள் ஜெயிக்க, பேட்டிங் பண்ண முடிவு செய்தார்கள். அவர்கள் விளையாண்டு முடிக்கும்போது கிட்டத்தட்ட 75 ரன்கள் எடுத்திருந்தார்கள். எங்கள்  ஊரில் உள்ள  மர அறுவை மில்லில் செய்த அந்த கனமான பேட்டையும் , கல்லு போல இருக்கும் அந்த கார்க் Ball -  ஐயும் வைத்து 75 ரன்கள் எடுப்பது என்பது ஒரு பெரிய சாதனைதான். அந்த நிமிடமே எங்கள் தோல்வி எங்கள் கண்களுக்குத் மிகவும் தெளிவாகத்  தெரிய ஆரம்பித்து விட்டது. இப்போது எங்க  Turn. வழக்கமாக ஆடும் Opening Batsman  அன்று இல்லாதலால், ரவி என்னைப் போய் விளையாடச் சொன்னான். ( நீதான எல்லாத்துக்கும் காரணம். போடா ...போய் விளையாடு). போறேன் எனக்கென்ன பயமா.....என்னோட கெட்ட நேரத்துக்கு , நம்ம  Sri Lanka  மலிங்கா  போன்ற ஒரு கெரகம் கன்னாபின்னா என்று ஒரு  Fast Bowl  போட தலைவன் முதல் பந்திலேயே அவுட். எங்கள் டீமில் நான் ஒன்றும்  Star Palyer  எல்லாம் கிடையாது. இருந்தாலும் எங்கள் டீமில் உள்ள அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து விட்டார்கள். சில சமயம், நம் ஒட்டு மொத்த இந்தியாவே சச்சின் டெண்டுல்கரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கும்போது , அவர் போன வேகத்தில் ஒரு ரன் கூட எடுக்காமல் திரும்பிவருவாரே, அப்போது நம் மக்களோட முகத்தில் தெரியும் அதே அதிர்ச்சி, அதே இயலாமை, அதே ஏமாற்றம், எங்கள் டீமிலும் ( என்ன்ன ....சச்சினா ??????? டேய் ...வாணாம்........).

பெவிலியனுக்குத் திரும்பிய என்னிடம் யாரும் ஒரு வார்த்தை கூட பேசவில்லை. " நான் ரெடியாவதற்குள் போட்டுட்டாய்ங்கெடா" என்றேன் , ஏதாவது பேச வேண்டுமேயென்று. அதற்கு யாரும் பதில் சொல்லவில்லை. "ம்க்கும்" என்று மட்டும் ஒரு சப்தம் வந்தது, யாரிடமிருந்தோ. 

வேறென்ன...ஒரு 25 ரன் எடுப்பதற்குள்  5 விக்கெட் போயிருந்தன.  எல்லா மக்களையும் அழைத்து ஒரு சின்ன டிஸ்கஷன் பண்ணினோம்....அதைப் பார்த்த ராமநகர் டீம் லேசாகக் கலவரமானார்கள் . எங்கள்  டிஸ்கஷனில் " தோல்வியை ஒத்துக் கொள்வோம்டா "    என்ற பேச்சே பிரதானமாக இருந்தது. எனக்கும் ரவிக்கும் மட்டும் அது மானப் பிரச்சினை. வேண்டாம்டா விளையாடிப் பார்ப்போம் என்றோம். எங்கள் டிஸ்கஷன் நீள்வதைப் பார்த்த இருதயராஜூம் , சரவணனும் , எங்கே,  விட்டால் வெறியோட ( ???) வந்து விளாசித் தள்ளி ஜெயித்து விடுவார்களோ ( ???) என்று பயந்து " என்னடா வரப் போறிங்களா இல்லையாடா....மழை வர்ற மாதிரி இருக்கு " என்று எங்களை விரட்டத் தொடங்கினான். 


அடுத்து  ரவி  களமிறங்கினான். இருதயராஜின் வாய் முகூர்த்தம், ரவி இரண்டு ரன் எடுப்பதற்குள் லேசாகத் தூறல் போட ஆரம்பித்தது.  அதைப் பற்றி நாங்கள் ஒன்றும் பெரிதாகக் கவலைப் படவில்லை. மழையே வந்தாலும் ஒரு 5 நிமிடத்தில் எங்கள் வீட்டுக்குப் போய் விட முடியும். ஆனால் அவர்கள் பாடுதான் திண்டாட்டம். தேவகோட்டையில் இருந்து ராமநகர் போகும் வழி ஒரு காட்டுப்பாதை. சொல்லிக் கொள்ளும்படி ஒரு கட்டிடமும் கிடையாது. ஒரே மரங்களும் பொட்டல் காடும்தான். மழை நேரத்தில், அதில் குரங்குப் பெடலும், டபுள் பெடலும் போட்டு வீடு போய்ச் சேருவதற்குள் விடிந்து விடும். ராமதுரைதான் முதலில் சமாதானத்திற்கு வந்தது. முடிச்சுக்குவோம்டா. விளையாட்டு ட்ரா என்றான். என்ன்ன்ன்னது ட்ராவா? சான்ஸே இல்லை. இனிமேதான் எங்க மெயினான ப்ளேயேர்ஸ் எல்லாம் விளையாடணும் என்றேன் ( யாரு.....சுட்டிக் குமாரு, குட்டை வெங்கடேசு, மணி மற்றும் முனீசு). அவர்கள் ரொம்ப இறங்கி வந்து, டேய் டேய்...மழை வருதுடா ...கொஞ்சம் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்கடா என்று கெஞ்ச ஆரம்பித்து விட்டார்கள். நான் ஒரே பிடியாக மறுத்து விட்டேன். அப்போதுதான் நான் தற்செயலாக எங்க பசங்களைப் பார்க்க, அவர்கள் அனைவரும் என்னை ஒரு கொலை வெறியோடு வெறித்துக் கொண்டிருந்தார்கள். மவனே...அவர்கள் மட்டும் ஒத்துக் கொண்டு தொடர்ந்து விளையாடட்டும் , நீ செத்தடா என்று கண்ணாலேயே கவிதை பாடிக் கொண்டிருந்தார்கள்.

 நான் உடனே சுதாரித்துக் கொண்டேன். சரிடா...நீங்க இவ்வளவு தூரம் கெஞ்சுறதால கேமை முடிச்சுக்குவோம். ஆனால், திரும்ப திரும்ப நீங்க வந்து வம்பு பண்ண மாட்டீங்கன்னு என்ன நிச்சயம் என்றேன் – என்னோட சேஃப்டிக்கு. நாங்க வேணா சத்தியம் பண்ணித் தாறோம் என்றார்கள். எனக்கு அந்த Proposal  பிடித்திருந்தது. World Cup, 20 -20 மேட்சுகளெல்லாம் முடிந்தவுடன் இரண்டு டீம்களும் எதிர் எதிர் திசைகளில் வந்து கை குலுக்கிக் கொண்டே செல்வார்களே , அதே போல, ஆனால் இங்கு ராமநகர் டீமில் ஒவ்வொருவரும் எங்கள் அணியில் உள்ள ஒவ்வொருவரிடமும் சத்தியம் பண்ணிக் கொண்டு சென்றார்கள். சுட்டிக் குமார்தான் அந்த பிட்டைப் போட்டான், அண்ணே...சத்தியம் பண்ணியிருக்கீங்க. நீங்க மட்டும் மாறுனீங்க, நாங்க காசு வெட்டிப் போட்டுடுவோம் பார்த்துக்குங்க என்றான் ( எனக்கு, அன்றும் சரி இன்றும் சரி, காசு வெட்டிப் போடுவது என்றால் என்ன என்றே புரிந்ததில்லை). அப்படி எல்லாம் பண்ண மாட்டோம்டா என்று சொல்லி விட்டு அவர்கள் ஓடியே போய் விட்டார்கள் ( அவர்கள் அவசரம் அவர்களுக்கு). பின்னால் அவர்கள் எங்கள் வழியில் குறுக்கிடவேயில்லை.

பந்து பொறுக்கிப் போடும் பொடியனுங்களுக்குத்தான் ஒரே வருத்தம் – ஒரு நல்ல சான்ஸ் போயிடுச்சேன்னு. அவர்களை ரொம்ப புலம்ப விடாமல் கூட்டி வந்து விட்டோம்.

இப்பப் புரியுதாங்க எனக்கு மழைன்னா ஏன் ரொம்பப் புடிக்குதுன்னு.


வெ. பாலமுரளி.


பி.கு: இந்த டைரிக்கு  “வீழ்வேனென்று நினைத்தாயோ” தலைப்பை எடுத்ததற்கு பாரதியார் மன்னிக்க வேண்டும். 

Wednesday, 28 August 2013

முள்றியின் டைரி 18: என் ICU அனுபவங்கள்:


முள்றியின் டைரி 18:
என் ICU  அனுபவங்கள்:

துன்பம் வரும் வேளையிலே சிரிங்க
என்று சொல்லி வெச்சார் வள்ளுவரு சரிங்க...
பாம்பு வந்து கடிக்கையில்
பாழும் உடல் துடிக்கையில்
யார் முகத்தில் பொங்கி வரும் சிரிப்பு....

என்ற கண்ணதாசனின் பாட்டு ஒன்று உண்டு. ரொம்ப கரெக்ட்.  நமக்கு ஏதாவது ஒரு இக்கட்டான சூழ்நிலை வரும்போது, உட்கார்ந்து கெக்கே பிக்கே என்று சிரித்துக் கொண்டிருக்க முடியாது. அப்படியே சிரித்தாலும்,  நம்மை வேறு ஒரு லிஸ்ட்டில் சேர்த்து விடுவார்கள். ஆனால், அதேசமயம், அந்தப்  பிரச்சினை முடிந்து கொஞ்ச நாள் கழித்து அந்த சம்பவத்தை நினைத்துப் பார்த்தால், விழுந்து விழுந்து சிரிக்க முடியாவிட்டாலும் கூட ஒரு சின்ன புன்னகையாவது நம் முகத்தில் தோன்றுவதைத் தவிர்க்க முடியாது. அது போன்ற ஒரு நிகழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த டைரி.

2007 – எனக்கு ஒரு கேவலமான வருடம். ஒரு நாள், அலுவலகம் முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தேன். நெஞ்சில் சுருக்கென்று ஒரு வலி. நாம் இன்று ஏதாவது வாய்வு ஏற்படுத்தும் சாப்பாடு ஏதேனும் சாப்பிட்டோமா என்று ஒரு நிமிடம் யோசித்தேன். வாழைக்காய் பொறியல் சாப்பிட்ட ஞாபகம் வந்தவுடன் என்னை நானே சமாதானப் படுத்திக் கொண்டு காரை நிறுத்தாமல் சென்று கொண்டிருந்தேன் ( நான்தான் முன்னயே சொல்லியிருக்கேன்ல, நாங்கல்லாம் ரொம்ப   ப்ரைட்டுன்னு). ஆனால் வலி வேறு மாதிரி இருந்தது. நண்பர்கள் சிலரின் யோசனையால் நேரே Nairobi Hospital சென்றேன். நம்ம ஊர் Apollo Hospital மாதிரி இங்கு Nairobi Hospital. இந்த நாட்டு President, Vice President, Prime Minister, பாலமுரளி போன்ற பெரிய மக்கள் போகின்ற Hospital ( ஹி…ஹி... ஹி...ச்சும்மா  டமாசு…..).

நான் போய்ப்  பார்த்த டாக்டர், பரேஷ் பட்டேல் என்னும் ஒரு இந்திய வம்சாவளி டாக்டர். ஏகப்பட்ட டெஸ்ட்டுகள் எடுத்து விட்டு, உங்களுக்கு கண்டிப்பாக இதயத்தில் அடைப்பு உள்ளது. அதன் Severity தெரியாதலால் உடனே ஆஞ்சியோ எடுத்துப் பார்த்து விட வேண்டும் என்று சொல்லி ஆஸ்பத்திரியில் அட்மிட் பண்ண வைத்து விட்டார் ( நான் ரொம்ப  ப்ரைட்டுன்னு முன்னால் சொன்னதை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன்).  மறுநாள் காலை ஆபரேஷன் தியேட்டருக்கு கூட்டிப் போய் விட்டார்கள்.

சும்மா சொல்லக் கூடாது, ஆபரேஷன் தியேட்டர், அழகு என்றால் அப்படி ஒரு அழகு. ரொம்ப கலை ரசனையுடைய ஒரு பணக்காரரின் Reading Room போல அமர்க்களமாக இருந்தது ( Don’t judge a book by its cover என்று என் பெண் அடிக்கடி சொல்லும் பழமொழி ஏனோ அன்று எனக்கு ஞாபகத்திற்கு வரவில்லை). அசந்து விட்டேன் ( நான் ஏன் இவ்வளவு ரசித்து சொல்கிறேன் என்பது பின்னால் உங்களுக்குப் புரியும்). நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்று Procedure – ஐ விளக்கினார்கள் ( இங்கு அது ஒரு பொதுவான Practice . சில சமயம் கொஞ்சம் டூ மச்சாக விளக்கி நம்மை பயமுறுத்தியும் விடுவார்கள்).

கொஞ்ச நேரத்தில் தொடையில் ஒரு ட்யூபை சொருகி ஒரு டையை செலுத்தினார்கள். அந்த ‘டை’ இதயத்தில் உள்ள அடைப்புகளை எல்லாம் தனிப்படுத்திக் காட்டிவிடும் என்று எனக்குச் சொல்லியிருந்தார். ஏனோ என் கேஸில் அது வேலை செய்யவில்லை. அவருக்கோ பயங்கர ஷாக். உடனே டாக்டர். கரியூக்கி என்பவருக்கு ஃபோன் பண்ணி அழைத்தார். டாக்டர் கரியூக்கி ரொம்ப சீனியர் போலிருக்கு. வந்த ஒரிரு நிமிடத்திலேயே விஷயம் என்ன என்று கண்டு பிடித்து விட்டார்.  இது Blood Clot. அதை க்ளியர் பண்ணாமல் Blockage – ஐப் பார்க்க முடியாது என்று ஒரு புத்தகத்தை எடுத்து அவருக்கு க்ளாஸ் எடுக்க ஆரம்பித்து விட்டார் ( Yes…எனக்கு தொண்டையில் மீன் முள் சிக்கிய போது ஏற்பட்ட அதே அனுபவம்). இது போல விஷயங்கள் எனக்கு மட்டும்தான் நடக்குமா, இல்லை ரொம்பப் பேருக்கு நடக்குமா என்ற குழப்பத்தில் நான் கண்ணை மூடிப் படுத்திருந்தேன்.  அதைக் கரைக்காமல் ஒண்ணும் பண்ண முடியாது என்பதால் “ பேக் அப்” ( ???) என்று சொல்லி என்னை ICU – விற்கு அனுப்பி விட்டார்கள்.

அதைக் கரைப்பதற்காக மருந்து கொடுத்து விட்டு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை ஆபரேஷன் தியேட்டருக்குக் கூட்டிக் கொண்டு போய் Blood Clot கரைந்து விட்டதா என்று செக் பண்ணினார்கள். கரையவில்லை என்றதும் திரும்ப ICU –விற்குக் கூட்டி வந்து விடுவார்கள்.  ஒவ்வொரு முறையும் அதே  Procedures…எனக்கு வாழ்க்கையே வெறுத்து விட்டது....சில சமயம் நானே கூட அவர்களை ஞாபகப் படுத்தியதும் உண்டு – என்ன இன்னைக்கு ஆபரேஷன் தியேட்டருக்குக் கூட்டிப் போகவில்லையா என்று. கிட்டத்தட்ட 10, 15 நாட்களுக்குப் பிறகு அவர்களுக்கே இந்த நாடகம் போரடித்துப் போய் விட்டது என்று நினைக்கிறேன். பொத்தாம் பொதுவாக Ballooning என்னும் ஒரு ப்ராசஸ் மட்டும் பண்ணி விட்டு என்னை Discharge செய்து விட்டார்கள். மறுபடியும் வலி வந்தால் உடனே வந்து விடுமாறும், இன்னும் ஒரு வாரத்திற்கு எங்கேயும் ட்ராவல் பண்ண வேண்டாமென்றும் அட்வைஸ். நான் துண்டைக் காணோம் துணியைக் காணோமென்று ஒரே ஓட்டமாக ஓடி வந்து விட்டேன்.
உடனே ஆளாளுக்கு “ நான்தான் அப்பவே சொன்னேன்ல இந்தியா போகச் சொல்லி” என்று அட்வைஸ் மழை. நாமாகப் போகாவிட்டால் இவெய்ங்கெளே நம்மை பார்சல் பண்ணி அனுப்பி விட்ருவாய்ங்கென்னு நானும் உடனே கிளம்பி விட்டேன். இந்தியாவுக்குப் போய்ப் பார்த்தாத்தான் தெரியுது, நைரோபியே தேவலை என்று. அவ்வளவு கேலிக் கூத்துகள்.

இந்தியாவில் நான் போய் இறங்கிய இடம் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவ மனை. அந்தக் காலத்தில் வாரச் சந்தை என்று ஒன்று நடக்கும். இப்ப உள்ள  Generation அதையெல்லாம் பார்த்திருப்பார்களா என்று தெரியவில்லை. அப்படி யாரேனும் பார்த்ததில்லை என்று வருத்தப் பட்டால், உடனே மதுரை மீனாட்சி  மிஷனைப் போய் பாருங்கள். வாரச் சந்தை என்றால் என்ன என்று புரிந்து விடும். அப்புறம் எதுக்கு ராசா அங்க போன என்கிறீர்களா? சில தவறான கணக்குகள்தான்....வேறென்ன. வீட்டிற்குப் பக்கத்தில் உள்ளது. அங்கு உள்ள Senior Cardiologist  எங்கள் உறவினர். So, Special Treatment கிடைக்குமே என்ற ஒரு நப்பாசை.

அவர், நான் நைரோபியிலிருந்து கொண்டு போன மெடிக்கல் ரிப்போர்ட்டை எல்லாம் பார்த்து விட்டு, உடனே ஆபரேஷன் தியேட்டருக்குக் கூட்டிப் போய் விட்டார். நான் இந்த இடத்தில் அந்த ஆபரேஷன் தியேட்டரைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். சென்னையில் ஒரு தெரு முழுக்கக் காயலான் கடைகளாகவே இருக்குமே – அது என்ன பெயர், கண்ணம்மா பேட்டையா சௌகார்பேட்டையா? எனக்கு அது போல ஒரு தெருவுக்குள் நுழைந்த மாதிரியே ஒரு ஃபீலிங். ஏதோ, முரளி வர்றாரு, முரளி வர்றாரு இடத்தைக் கொஞ்சம் க்ளீன் பண்ணுங்க என்று யாரோ
சொன்னாற்போல கொஞ்சூண்டு இடத்தை மட்டும் ஒதுக்கி ஒரு ஆபரேஷன் டேபிளைப் போட்டு வைத்திருந்தார்கள். இந்த ( அவ) லட்சணத்தில் ஏ.ஸி. வேற. எனக்கு லேசாக உதறல் எடுப்பதைத் தவிர்க்க முடியவில்லை. கோழி குருடாயிருந்தா என்ன, நமக்கு குழம்புதானே முக்கியம் என்று என்ன நானே சமாதானப் படுத்திக் கொண்டேன். நைரோபியில் ஆஸ்பத்திரி சூப்பர், ஆனால் வைத்தியமோ.... ???? நம்ம இந்தியாவில் எதிர்மறை போலிருக்கு என்று நினைத்து என்னைத் தேற்றிக் கொண்டேன்.

வழக்கமான ( ????) Procedures. டையை செலுத்திய சில வினாடிக்குள்ளாகவே, இதயத்தில் உள்ள அடைப்புகள் எல்லாம் “உள்ளங்கை நெல்லிக்கனி” போல தெள்ளந் தெளிவாகத் தெரிய ஆரம்பித்து விட்டது ( கொஞ்சம் டூ மச் செந்தமிழோ? ). நம்ம தமிழ்ப் படங்களில் எல்லாம் “ Congratulations !!  நீங்க அப்பாவாயிட்டீங்க “ என்று ஒரு டாக்டர் சந்தோஷமாகச் சொல்லுவாரே, கிட்டத்தட்ட அதே டோனில், “ Very Good. உங்களுக்கு 4 Blockages இருக்கு “ என்றார் (ஏண்டா Blockages – க்கெல்லாம் இந்த டோன் கொஞ்சம் ஓவர்னு உங்களுக்கே தெரியலை? ). சரி டாக்டர்.... என்ன செய்யலாம் என்றேன் ( கேக் வெட்டச் சொல்லுவாரோ?). நான் என்னவோ ரொம்ப கவலைப்படுகிற மாதிரி, “ இதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லைங்க முரளி. ஸ்டெண்ட் வைத்து சரி பண்ணி விடலாம்” என்றார். இந்த இடத்தில்தாங்க என் ரியல் கிரகம் வேலை செய்ய ஆராம்பித்தது.

பக்கத்தில் உள்ள ஒரு நர்ஸை அழைத்து, “ கௌரி, நம்பர் 2, 5, 6 , 7 ஸ்டெண்ட் எடுத்திட்டு வாம்மா” என்றார். அந்த கௌரியோ நகர்வது போலத் தெரியவில்லை. அவர் திரும்ப ஒரு முறை “ போம்மா போய் எடுத்திடு வா” என்றார், இந்த முறை கொஞ்சம் சூடாக. அந்த கௌரி ரொம்ப மெதுவாக “ ஸ்டெண்ட் டெலிவரி எடுக்கப் போன நம்ம தாமு இன்னும் வரலை சார்” என்றது. என்ன தா.......மு.....வரலையா ? என்றார் அதிர்ச்சியாக – நான் அருகில் இருப்பதை மறந்து போய். ஃபோனைக் கொண்டு வா என்றார். திடீரென்று என்ன நினைத்தாரோ, இந்தா வந்துர்றேன் முரளி என்று சொல்லி விட்டு, பக்கத்து அறைக்குச் சென்றார். அவர் அங்கிருந்து பேசுவது எனக்கு மிகவும் தெளிவாகக் கேட்டது ( இதுக்கு ஒழுங்கா ஆபரேஷன் தியேட்டரில் இருந்தே பேசியிருக்கலாம்). ஃபோனில் தாமு என்ன சொன்னார் என்பது தெரியவில்லை. ஆனால், நம்ம S.Ve. சேகர் நாடகத்தில் வருவது போல மறு பக்கத்தில் பேசுவதை இவர் திரும்ப ஒரு முறை சொல்லி சரி பார்த்து விட்டுத் திட்டிக் கொண்டிருந்தார். “ எங்கடா இருக்க?” “ என்ன டீக்கடையில இருக்கியா ?” “ ஏண்டா பன்னு திண்ணு காப்பி குடிக்கிற நேரமாடா இது” “ சரி, வர்றதுக்கு எவ்வளவு நேரமாகும்?” “ என்ன அரை மணி நேரமாகுமா?” “ ஏண்டா , இங்க நான் ஒரு உயிரோட போராடிக்கிட்டிருக்கேன், உனக்கு அங்கே பன்னும் காப்பியும் கேட்குதா ( ???????) ?” . எனக்கு அந்த ஏ.ஸி.யிலும் வியர்த்து ஊற்றுவதைத் தடுக்க முடியவில்லை. அவர் அத்தோடு நிற்கவில்லை. “ என் பேஷண்டுக்கு மட்டும் ஏதாவது ஓண்ணு ஆச்சு, மவனே உன்னை நடு ரோட்டுல வச்சு வெட்டியே கொன்னுடுவேண்டா “ என்றார் உச்சஸ்தாயில். எனக்கு வியர்வையோடு கை காலும் லேசாக நடுங்க ஆரம்பித்தது. உடனே என் அறைக்குள் வந்தவர் “ இது வேற ஒரு பிரச்சினைங்க   முரளி” என்றார்  ( கேட்கிறவன் கேனையன் என்றால் எருமை மாடு ஏரோப்ளேன் ஓட்டுமாம்னு எங்க ஊர்ல ஒரு பழமொழி சொல்லுவாய்ங்கெ). பிறகு  அவரே நேராக ஸ்டோருக்குப் போய் ஸ்டாக்கில் இருக்கிற ஸ்டெண்டை எடுத்து வந்தார் ( 7 ம் நம்பர் இல்லாவிட்டால் என்ன, அதான் நம்மகிட்ட  10 – ம் நம்பர் ஸ்டாக்ல  இருக்குல்ல ...). அந்தக் குளறுபடியில, ½ மணியில முடிகிற ஆப்ரேஷன் கிட்டத்தட்ட 4 மணி நேரம் நடந்தது. ஒரு வழியாக என்னை CICU – வில் கொண்டு போய் வைத்தார்கள். என்னைத் தவிர அங்கு இருந்தவர்கள் எல்லோருமே ரொம்ப வயதானவர்கள். கிட்டத்தட்ட எல்லோருக்குமே பை பாஸ் பண்ணியிருந்தார்கள். கிராமத்தில் இருந்து வந்திருப்பார்கள் போலிருக்கு.  ஆனால், சர்வ சாதாரணமாக லோ ஷூகர், ஹை ஷுகர், LDL, HDL என்று  பேசிக் கொண்டிருந்தார்கள் ( இப்பல்லாம் கிராமங்களில் ரொம்ப முன்னேற்றம் போலிருக்கு என்று நினைத்துக் கொண்டேன்).

எனக்கு நிஜமாகவே நெஞ்சு வலித்ததா இல்லை ஆபரேஷன் தியேட்டரில் நடந்த ட்ராமாவினால் நெஞ்சு வலி போன்ற ஒரு பிரமையா என்று இனம் பிரிக்க முடியவில்லை. ஆனால் அந்த இரவு முழுவதும் ஒரு மூச்சுத் திணறலும், வலியும் இருந்து கொண்டே இருந்தன. உடனே டாக்டரைப் பார்த்து என் பிரச்சினையைச் சொல்ல வேண்டும் எனத் துடித்துக் கொண்டிருந்தேன். ஏனோ அங்கிருந்த Sisters  யாரும் அந்த நேரத்தில் டாக்டரை அழைக்க மறுத்து விட்டார்கள் ( திட்டுவார் சார்...). காலில் ஒரு பெரிய Bandage போட்டிருந்தலால் , காலை கொஞ்சம் கூட அசைக்கக் கூடாது என்று வேறு கண்டிசனாகச் சொல்லி விட்டார்கள். அதுதான் உள்ளதிலேயே ரொம்பக் கொடுமையாக இருந்தது. இரவு முழுவதும் அந்த அவஸ்தையில் இருந்து விட்டு, நான் எப்போது தூங்கினேன் என்று எனக்கே தெரியவியல்லை. கண் விழித்துப் பார்க்கும்போது காலை 7 மணியாகி இருந்தது. இன்னும் சிறிது நேரத்தில் டாக்டர் வந்து விடுவார் என்று ராஜாவிற்கு பராக் சொல்வது போலச்  சொன்னார்கள். என்னால் அவரைப் பார்க்கப் போகும் பரபரப்பை ( ?????) கன்ட்ரோல் பண்ண முடியவில்லை.

எங்க மதுரைப் பக்கம், டாக்டர்களும் நோயாளிகளும் பேசிக் கொள்வதைப் பார்க்க வேண்டும். ஏதோ குடும்ப மெம்பர்கள் பேசிக்கொள்வது போலவே ரொம்ப தமாஷா இருக்கும். நான் இதற்கு முன்பே சில முறை அதைப் பார்த்திருந்தாலும், இந்த முறைதான் அதை பொறுமையாக ரசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
டாக்டர் வந்ததும் நேரே ஒரு முதியவரிடம் போனார். “ என்ன பெரிசு...எப்படி இருக்கு” என்றார் பொத்தாம் பொதுவாக. அதற்கு அந்தப் பெரியவர் “ எதக் கேக்குற ?” என்றார் கொஞ்சம் விட்டேத்தியாக. டாக்டருக்கு சுர்ரென்று ஏறி விட்டது “ ம்ம்ம்ம்ம்...உங்கிட்ட நான் என்ன பொண்ணா கேட்கப் போறேன். நேத்து பைபாஸ் பண்ணோம்ல. அதுதான் எப்படி இருக்கு என்று கேட்கிறேன்” என்றார். அந்த இடம் லேசாகச் சூடேறியது. பெரியவர் ரொம்ப அஸால்ட்டாக “ ஒரு வித்தியாசமும் இல்ல. அப்படியேதான் இருக்கு” என்றார். டாக்டருக்கு ரொம்ப கோபமாகி விட்டது” ஏன் பெரிசு...விழுந்து விழுந்து ( ??????) பை பாஸ் பண்ணியிருக்கோம் கொஞ்சம்கூட வித்தியாசம் தெரியலேன்ற? “ என்று ஒரு எரிச்சலோடு சொல்லி விட்டு, அடுத்து ஒரு பாட்டியிடம் சென்றார். “ என்ன பாட்டி, எப்படி இருக்கீங்க ?” என்றார். அந்தப் பாட்டி கொஞ்சம் கூட யோசிக்காமல் “ சொன்னா நம்ப மாட்ட,  அந்தப் பெரியவருக்கு மாதிரிதான், எனக்கும் ஒரு வித்தியாசமும் தெரியல” என்றது. அவரு ரொம்ப டென்ஷனாகிட்டாருங்க. “ என்ன எல்லோரும் சொல்லி வச்சுட்டு வந்திருக்கீங்களா” என்று எகிறினார். சொல்லி விட்டு அவரும் விடல. “ அது சரி, இப்ப இருக்கிற உன் உடல் நிலைக்கு 10 மார்க் போடச் சொன்னா எத்தனை மார்க் போடுவ பாட்டி என்றார் ?”. நான் நோயாளிகளிடம் இந்த மாதிரி யாரும் ஒரு Assessment Report கேட்டுப் பார்த்ததில்லை. So, நான் என் வலியை மறந்து அதைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன். அந்தப் பாட்டி இந்தக் கேள்வியைக் கொஞ்சம் எதிர்பார்த்திருக்கும் போல. உடனே, “ 8 மார்க் போடுவேன்” என்றது. டாக்டரோடு சேர்ந்து எனக்கும் ஆச்சரியமாக இருந்தது. டாக்டர் அசந்து விட்டார். “ அடேங்கப்பா 80%. இதுக்கு மேல என்ன வேணும்” என்று கேஷுவலாகச் சொல்லி விட்டு நகர்ந்து விட்டார்.

அந்த நேரம் பார்த்து அவருக்கு ஒரு ஃபோன் வந்தது ( ICU – வில் மொபைல் ஃபோன், லேப்டாப் எல்லாம் அனுமதியில்லை என்று அங்கிருந்த போர்டு, நோயாளிகளுக்கு மட்டும்தான் போலிருக்கு). தான் ICU – வில் இருக்கிறோம் என்ற எண்ணம் கொஞ்சம் கூட இல்லாமல், ரொம்ப சத்தமாக பேச ஆரம்பித்தார். “ ம்ம்ம்.....சொல்லுங்க சிவா” என்றார். “ என்ன ..மல்ட்டி விட்டமினா?” “ COBADEX  போடுங்க... நல்லது “ என்றார். அவர் சொன்னது சிவாவுக்குக் கேட்கலை போலிருக்கு. COBADEX –ஐ இரண்டு மூன்று முறை திரும்பத் திரும்பச் சொன்னார். அப்படியும் சிவாவுக்கு சரியாகக் கேட்கலை. “ C for Cake, O for Orange, B for Ball, A for Africa, D for Donkey E for Elephant, X for X Ray”  என்றார்.
சிவா, மாத்திரை பெயர் ரொம்ப நீளமாக இருக்கே என்று சொல்லியிருக்க வேண்டும். “ என்ன மாத்திரை பேர் நீளமா ???? என்னய்யா எழுதினே” என்றார் பயங்கர கோபத்துடன். “ என்ன  Cake orange Ball Africa…வா ??? மூதேவி மூதேவி....நான் சொன்ன வார்த்தையில் எல்லாம் இருக்க முதல் எழுத்தை மட்டும் எழுதச் சொன்னேன்யா. நீயெல்லாம் என்னத்தைய்யா படிச்சிருக்க. வைய்யா ஃபோனை” என்று Literally கத்தினார் உச்சஸ்தாயில். “ இன்னிக்கு என்னமோ தெரியல... எல்லாம் ஒரே கெரகமா வந்திருக்கு” என்று புலம்பிக் கொண்டே என்னிடம் வந்தார். “ சொல்லுங்க முரளி உங்களுக்கு எப்படியிருக்கு” என்றார் ஒரு விரக்தியும் எரிச்சலும் கலந்த டோனில்.

நான் இங்க வர்றதுக்கு முதல் நாள் வரைக்கும் நல்லாத்தான் இருந்தேன் சார் என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டு “ சூப்பர் சார். செம Improvement” என்றேன். (அவருக்கு இருந்த கடுப்பில், நான் மட்டும் உண்மையைச் சொல்லியிருந்தால், பளார் என்று ஒரு அறை விட்டிருப்பார் ). அவருக்கு உடனே வாயெல்லாம் பல்.

“ I Know …I know…நான்தான் சொன்னேன்ல, ஸ்டெண்ட் வச்சா எல்லாம் சரியாயிரும்னு. இன்னும் இரண்டு நாளில் Discharge ஆயிடலாம். ஆனால் ஒரு 2 வாரம் ரெஸ்ட் எடுத்து விட்டு , பிறகு கென்யா செல்லுங்கள், சரியா ?” என்றார். சரி சார்...என்று பூம்பூம் மாடு போலத் தலையை ஆட்டினேன்.

இனி எந்த ஹாஸ்பிட்டலுக்குப் போவது என்று யோசித்துக் கொண்டே மீனாட்சி மிஷனை விட்டு Discharge  ஆனேன்.

வெ.பாலமுரளி.

பி.கு. " இவனுக்கு ஜாதகத்தில்தான் ஏதோ கோளாறு" என்று நீங்கள் முணு முணுப்பது கேட்கிறது.

Sunday, 25 August 2013












முள்றியின் டைரி 17: சில கனவுகள்.....


என்னுடைய சென்ற டைரியில் “ கனவுகளே கனவுகளே காலெமெல்லாம் வாரீரோ...” என்ற பாடலைக் குறிப்பிட்டு என்னுடைய சில இனிய நினைவுகளைப் பற்றி எழுதிருந்தேன். ஆனால் கனவுகளைப் பற்றி ஒன்றுமே குறிப்பிடவில்லை. ஞாபகம் இருக்கா ? அந்த கோடிட்ட இடங்களை நிரப்பவே இந்த டைரி.

எனக்கு 2 கனவுகள் அடிக்கடி வரும்.

முதல் கனவு, கொஞ்சம் வயலன்ட். நம்ம ராஜபாளையம் நாய் போல ஒரு ஆக்ரோஷமான அல்சேஷன் நாய் அடிக்கடி என் கனவில் வரும். அதற்கு நான் செல்லமாக ( ????) ரத்தினம் என்று பெயர் வைத்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் ரத்தினம் என்னை கன்னா பின்னா என்று துரத்தும். அப்போது நான் ஓடும் ஓட்டத்தை நீங்கள் பார்க்க வேண்டும்... உசேன் போல்ட்டெல்லாம் என்னங்க ஓடுறாரு. பிஸ்கோத்து ஓட்டம். நான் அவரு மாதிரி 10 மடங்கு ஸ்பீடில் ஓடுவேன். ஆனா நம்ம ரத்தினம் இருக்கு பாருங்க, அது என்னை விட ரொம்ப ஸ்பீடு. ரொம்ப அலட்சியமாக என்னைத் தாண்டி வந்து என் குரல் வளையைக் கடித்து விடும். டமாலென்று தூக்கி வாரிப் போட்டு எழுந்து விடுவேன். இந்த நைரோபி குளிரிலும் வியர்த்து ஊற்றியிருக்கும். (உடனே ஒரு சேஃப்டிக்காக என் குரல் வளையைத் தடவிப் பார்த்துக் கொள்வேன்). இந்த மார்ச் மாதம் மதுரைக்குப் போயிருக்கும் போது, என் மைத்துனர் வீட்டில் இருக்கும் ரோஸி என்ற நாயை செல்லமாகத் தடவிக் கொடுக்கப் போய், அது என் புறங்கையை நன்றாக ஆழமாகக் கடித்து விட்டது. ஏனோ தெரியவில்லை, அதிலிருந்து நம்ம ரத்தினம் என் கனவில் வருவதேயில்லை.

கனவு நம்பர் 2. இது கொஞ்சம் கேவலமான கனவு. என்னை போலிஸ்காரர்கள் சுற்றி வளைத்துக் கைது செய்து சிறையிலடைப்பது போல ஒரு கனவு. இது ரொம்ப காலமாக வந்து கொண்டிருந்தது. கனவில் வரும் போலிஸ்காரர்கள் எல்லோரும் என்னை மாதிரியே ரொம்ப கலராக இருப்பதால், அவர்கள் இந்தியர்களா இல்லை ஆப்பிரிக்கர்களா என்று என்னால் கண்டு பிடிக்க முடிந்ததில்லை. அவர்கள் எந்த ஒரு முறையும் எனக்குக் காரணமே சொன்னதில்லையாதலால், எதற்காக என்னை கைது செய்கிறார்கள் என்றும் எனக்கு எப்போதும் புரிந்ததேயில்லை.

கடந்த ஏப்ரல் மாதம், ஒரு பிஸினஸ் மீட்டிங்கிற்காக மோலோ என்னும் ஊரிற்குச் செல்ல வேண்டியிருந்தது. என்னுடைய டிரைவருக்கு உடல் நலம் சரியில்லாதலால் காரை நானே ஓட்டிச் செல்லலாம் என்று முடிவெடுத்து ( எல்லாம் கெரகம்தான்...வேறென்ன ....), CD –யில் TMS – ன் சிவாஜி ஹிட்ஸ் கேட்டுக் கொண்டே ஜாலியாகப் போய்க் கொண்டிருந்தேன். லிமுரு வியூ பாயிண்ட் முடிந்து கார் மலை இறக்கத்தில் இறங்கிக் கொண்டிருந்தது. நான் TMS – ன் வெண்கலக் குரலில் லயித்திருந்தலால், கார், ஸ்பீட் லிமிட்டான 100 – ஐத் தாண்டி 130 KM- இல் போய்க் கொண்டிருந்ததைக் கவனிக்கவில்லை.

நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத நேரத்தில், ஏதோ தாவூத் இப்ராஹிமைப் பிடிப்பது போல என்னை (ரேடார்) பொறி வைத்து ஒரு போலிஸ் கூட்டம் சுற்றி வளைத்துப் பிடித்து விட்டது ( இங்கு இப்படித்தான். மலை இறக்கத்தில் போகும்போதுதான் ஓவர் ஸ்பீடுக்காகப் பிடிப்பார்கள்). அதில் ஒரு போலிஸ் ஆஃபிஸர் நம்ம P.S. வீரப்பா போல ஒரு கர்ண கடூரமாக சிரிப்பு சிரித்துக் கொண்டே என்னை நெருங்கினார். முதலில் நான் அவரை அவ்வளவு சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. அவர்களை ஏதோ காமெடிப் போலிஸ் போல நினைத்து ரொம்ப கேஷுவலாகப் பேசிக் கொண்டிருந்தேன். அவர்கள் என்னை விடுவதாக இல்லை. ஆனால் ஓரிரு நிமிடங்களிலேயே விஷயம் வேறு மாதிரிப் போய்க் கொண்டிருந்ததை உணர்ந்து, நம்ம இந்தியர்கள் ஸ்டைலில் பேசிப் பார்த்தேன். வந்திருந்தவர் Mr. கடமை கண்ணாயிரம் போலிருக்கு. “யேஏஏஏஏஏஏஏய்......யாரைப் பார்த்து ????? ” என்று நம்ம ஊர் தாதா மாதிரி ஒரு சவுண்டைக் கொடுத்தார். “சரி.....நடத்துங்கடா “ என்று மனதில் நினைத்துக் கொண்டே, சரி சார், கேஸ் புக் பண்ணுங்கள் என்றேன். நான் ஏதோ சார்ஜ் ஷீட்டைக் கையில் கொடுத்து என்னை வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள் என்று நினைத்தேன். பார்த்தால், போலிஸ் ஸ்டேஷனுக்குக் கூட்டிக் கொண்டு போய்  கேஸ் புக் பண்ணி, மாட்டுக் கொட்டடி மாதிரி ஒரு இடத்தில் என்னை மாதிரி ஒரு 10 பேரை அடைத்து வைத்து விட்டார்கள். கிட்டத்தட்ட ½ நாள் வைத்திருந்து விட்டு, கோர்ட்டுக்குக் கூட்டிக் கொண்டு போய் “யுவர் ஆனர்” என்றெல்லாம் சொல்ல வைத்து ஒரு 3500 ஷில்லிங்  ஃபைன் கட்ட வைத்துத்தான் விட்டார்கள்.

சொல்லக் கூடாது – Touch Wood, அதற்குப் பிறகு எனக்கு அந்த போலிஸ் கனவு வருவது கிடையாது. 

மனோதத்துவ ஆராய்ச்சியாளர் சிக்மன் ஃப்ராய்ட், கனவைப் பற்றிச் சொல்லும் போது, உங்கள் ஆழ் மனதில் புதைந்திருக்கும் சில விஷயங்களே உங்களுக்கு கனவு வடிவத்தில் வெளி வருகின்றன என்கிறார். அப்படிப் பார்த்தால் நம்ம ரத்தினமும், இந்த ஊர் போலிஸ்காரர்களும் எப்படி என் ஆழ் மனதில் புகுந்தார்கள் என்று தெரியவில்லை.

இப்ப நீங்கள் சொல்லுங்கள் நண்பர்களே, நான் எப்படி, “ கனவுகளே கனவுகளே காலமெல்லாம் வாரீரோ” என்று பாட முடியும்?

வெ.பாலமுரளி.

முள்றியின் டைரி 16:சில நினைவுகள் II :


நான் நேற்று “ Inner Engineering – Introductory Speech by Isha Foundation”  சென்றிருந்தேன். ஒரு நிமிடம் கண்ணை மூடி நீங்கள் எப்படிப் பட்டவர் என்று கண்டறிய முயற்சி பண்ணுங்கள் என்றார்கள். கண்ணை மூடியதுதான் தாமதம், டமாலென்று இரண்டு நிகழ்ச்சிகள் வந்து என் நினைவில் ஊசலாட ஆரம்பித்து விட்டன.  


நிகழ்ச்சி No: 1.  


என் அப்பா என்னைப் பற்றி அடிக்கும் காமெண்ட்.எங்கள் வீட்டில் நாங்கள் அண்ணன் தம்பி 3 பேர்.  No  அக்கா தங்கைஸ்.அதில் நானும் என் சின்ன அண்ணனும் சரியான 15 ( அதாங்க 7 ½ + 7 ½). எங்கள் குண நலன்களை ( ????)  விவரிக்க எங்க அப்பா அடிக்கடி ஒரு கதை சொல்வார். ஒரு வீட்டில் ஒரு பெற்றோருக்கு 3 பசங்க இருந்தார்களாம். தங்கள் பசங்க ரொம்ப அடாவடியாகவும், அட்டூழியம் பண்ணுகிறவர்களாகவும் இருப்பதாக எல்லோரிடமும் சொல்லி புலம்புவராம். அப்போது ஒரு நண்பர் “ அது எப்படி சார் 3 பசங்களும் மோசமாக இருக்க முடியும். அதில் ஒருத்தன் கூடவா நல்லவன் கிடையாது” என்று ஆச்சரியமாகக் கேட்டாராம். " இருக்கான் சார். வெளியே போய்ப் பாருங்க. எங்க வீட்டின் கூரை மேலே ஒரு பையன் தீ வைத்துக் கொண்டிருப்பான் பாருங்க. அவன்தான் உள்ளதிலேயே கொஞ்சம் நல்லவன்" என்றாராம். சொல்லி விட்டு, முரளி, நீ ரொம்ம்ம்ம்ம்ப நல்லவண்டா என்பார்.


நிகழ்ச்சி No: 2


போன டிசம்பரில், 5 வருடம் ரஷ்யாவில் என்னுடன் நெருங்கிப் பழகி என் அண்ணன் ஸ்தானத்தில் இருந்த என் நெருங்கிய நண்பர் ஒருவரைச் சந்தித்தேன். என்னுடன் என் மனைவியும் என் பெண்ணும் இருந்தனர். அவர் என் மனைவியை அப்போதுதான் முதல் முறையாக பார்க்கிறார். நீதான், அர்ச்சனாவாம்மா, முதலில் உன் கையைக் கொடு என்று சொல்லி விட்டு அவள் கையைப் பிடித்து ஒரு 5 நிமிடம் குலுக்கினார். என் மனைவிக்கோ ஒன்றும் புரியவில்லை. குழப்பத்துடன் “ நான் என்னங்க சாதித்து விட்டேன், என்னை எதற்கு இப்படிப் பாராட்டுகிறீர்கள்” என்றாள் தன்னடக்கத்துடன். ஏம்மா, இவனைக் கல்யாணம் பண்ணி Already 15 வருடம் குடும்பத்தை நடத்தி இருக்கிறாயே, அதுவே ஒரு பெரிய சாதனை இல்லையாம்மா என்றார் ( எனக்கு இப்படி பல்பு கொடுக்க ஒரு பெரிய கோஷ்டியே காத்துக் கொண்டிருக்கு).


Flash Back over…


கண் விழித்துப் பார்த்த எனக்கு மகாக் குழப்பம்- நான் நல்லவனா கெட்டவனா என்று.


நீங்க சொல்லுங்க மக்காஸ்  - நான் நல்லவனா கெட்டவனா? 


(சொந்தச் செலவுல சூன்யம் வெச்சுக்கிறது என்பது இதுதானோ?)



வெ.பாலமுரளி

Saturday, 3 August 2013

முள்றியின் டைரி 15: சில நினைவுகள்......


கனவுகளே கனவுகளே காலமெல்லாம் வாரீரோ...
நினைவுகளே நினைவுகளே நின்று போக மாட்டீரோ ....
நிம்மதியைத் தாரீரோ....


என்று கண்ணதாசனின் ஒரு பாடல் உண்டு - உத்தமன் படத்தில். எனக்கு  அந்த வரிகளோடு உடன்பாடில்லை. என்னைப் பொறுத்த வரையில் எல்லா கனவுகளுமே சுகமாக இருப்பதுமில்லை, எல்லா நினைவுகளுமே சுமையாக இருப்பதுமில்லை. அது சரி...நம்மில் எத்தனை பேர் பழைய நினைவுகளை அடிக்கடி அசை போடுகின்றோம் ? என்னைக் கேட்டால் , நம்மில் பல பேர் நம் நினைவுகளையே  ரசிப்பதில்லை. ஏதோ ஒரு விரக்தி, ஒரு சலிப்பு... நம்ம என்னத்த கண்ணையா  போல...


எனக்கு மனச்சோர்வு ஏற்படும்போதெல்லாம் , சில இனிய ( அல்லது Interesting) நினைவுகளை நினைத்துப் பார்க்க ஆரம்பித்து  விடுவேன். சில நிமிடத்துக்குள்ளேயே மனசு உற்சாகமடைந்து விடும். அதிலும், சில இடங்களுடன்  சில பாடல்களும் அல்லது சில இடங்களுடன்  சில நினைவுகளும் கை கோர்த்து வரும் பாருங்கள். சுகமாக இருக்கும்.  அந்த மாதிரி சில இனிய நினைவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த டைரி.


1985 ம் வருடம் நண்பர்களுடன் வைகை அணைக்கு சென்றிருந்தேன். சூரிய அஸ்தமனத்தை புகைப்படம் எடுக்க நான் மட்டும் மேலேயே நிற்க, என்னுடன் வந்த அனைவரும் கீழே சென்று விட்டார்கள். தனிமை என்றால் அப்ப்ப்ப்ப்ப்ப்படி  ஒரு தனிமை. அப்போதுதான் இதயக்கோயில் படம் வந்த புதிது. அதில் வரும் "வானுயர்ந்த சோலையிலே" பாடலை கீழே ஒரு ஸ்பீக்கர்  செட்டில் போட, நான்  என்னை மறந்து கேட்டுக் கொண்டிருந்தேன். நான் மட்டுமே அணையின் மேலே நின்றிருந்தேன். மிகச் சரியாக சூரியனும் அதே நேரத்தில் மறைய....Believe me...Just an amazing experience. அதில் இருந்து எப்போது நான் அந்தப் பாட்டைக் கேட்டாலும் என் மனசு இறக்கை கட்டி வைகை அணைக்குப் பறந்து விடும் - என் கேமராவுடன்.


2005 என்று ஞாபகம். எஸ். ராமகிருஷ்ணனின் "தேசாந்திரி" படித்து விட்டு கங்கை கொண்ட சோழபுரம் செல்ல முடிவெடுத்தேன். போறதுதான் போறோம், ஒரு வித்தியாசமான முறையில் போவோமே  என்று முடிவெடுத்தேன்.


கையில் கொஞ்சூண்டு பணம் மட்டும் எடுத்துக் கொண்டு என் கேமரா மற்றும் Tripod  சகிதம் கிளம்பிவிட்டேன். எந்தக் காரணம் கொண்டும் காரில் செல்வதோ, நல்ல ஒரு ஹோட்டலில் தங்குவதோ ,  பெரிய உணவகங்களில் சாப்பிடுவதோ கூடாது என்று முடிவெடுத்தேன். ஒரு Typical நாடோடி போல சென்று வருவதே என் பயணத்தின்  நோக்கம். 


அங்கு செல்வதற்கு முதல் நாள் வரை கங்கை கொண்ட சோழபுரம் எங்கு இருக்கிறது என்று ஐடியாவே இல்லை. என் சகோதரி Dr அகிலாவின்  உதவியால், மதுரையில் இருந்து திருச்சி சென்று, திருச்சியில் இருந்து ஜெயங்கொண்டம் போய் அங்கிருந்து சிதம்பரம் பஸ்ஸில் ஏறினால் க.கொ. சோ. புரம் போய் விடலாம் என்று தெரிந்து கொண்டேன். மதுரையில் பஸ்ஸில் ஏறிய முதலே நல்ல மழை. காலை 7 மணிக்கு கிளம்பிய நான், க.கொ.சோ.புரம் பொய் இறங்கிய போது மணி மதியம் 4. சிலு சிலுவென்று மழை தூறிக் கொண்டிருந்தது.  கோயிலுக்கு  எதிரில்  4 டீக்கடைகள் மட்டுமே  இருந்தன. க.கொ.சோ.புரம் கிராமம் 4 கி.மீ. தள்ளி உள்ளே இருக்கிறது.  எனக்கோ செம பசி.. அதில் ஒரு கடையில்  ஏறி சாப்பிட எதாவது உள்ளதா என்றேன். அவர் கடையில் இது போல யாருமே கேட்டது இல்லை போலிருக்கிறது. என்னை ஒரு மாதிரி வித்தியாசமாக பார்த்து விட்டு டீ, காப்பி மட்டும்தான் சார் இருக்கு என்றார். நான் ரொம்ப சோர்வாக , சரி ஒரு டீ போடுங்கள் என்றேன். அவருக்கு என்ன தோன்றியதோ , சார்,  வீட்டில் எங்களுக்காக பண்ணிய லெமன் ரைஸ் இருக்கு சாபிடுவீர்களா  என்றார். என் கண்ணில் 1000 வாட்ஸ் பல்பின் வெளிச்சம். சரி என்றேன். அந்த மழை நேரத்தில், அந்தக் காட்டுக் கோயிலைப் பார்த்துக் கொண்டே , அந்த சிறிய டீக்கடையில் லெமன் ரைஸ் சாப்பிட்ட அனுபவம் இருக்கிறதே,ஆஹா.... அது எந்த ஒரு  5 நட்சத்திர ஹோட்டலிலும் கிடைக்காத ஒரு சுகானுபவம். 


அன்று சும்மா சுற்றி  மட்டும் பார்த்து விட்டு களைப்பின் மிகுதியால், அருகில் இருந்த ஜெயங்கொண்டம் கிளம்பி விட்டேன். அங்கும் சரியான மழை. அங்கிருந்த ஒரு ஆட்டோக்காரரிடம் தங்குவதற்கு ஏதேனும் ஹோட்டல் இருக்கிறதா என விசாரித்தேன். அவர் ஒரு லாட்ஜின் பெயரைச் சொல்லி ( கிருஷ்ணவேணி என்று ஞாபகம்) அந்த லாட்ஜ்தான்  சார் இந்த ஊரிலேயே சூப்பராக இருக்கும் என்றார். அந்த அடை மழையில் எனக்கு பெரிதாக சாய்ஸ் ஒன்றும் இருப்பதாகத் தோன்றவில்லை. சரி என்று அந்த லாட்ஜூக்கே  சென்றேன்.  பாடாவதி என்றால் அதரப் பாடாவதி (இதற்குத்தான் ஆசைப்பட்டாயா பாலமுரளி?). சரி...நம் பயணத்தின் நோக்கமே அதுதானே என்று பொறுத்துக் கொண்டு அங்கிருந்த  ஒருவரிடம் போய் ஒரு ரூம் கிடைக்குமா என்றேன். எப்படிப்பட்ட ரூம் வேண்டும்? ஆர்டினரியா, டீலக்ஸா இல்லை சூப்பர் டீலக்ஸா என்றார். நான் ஒரு நிமிடம் ஆடிப் போய் விட்டேன்.


என்னங்க வித்தியாசம் என்றேன் அப்பாவியாக. ஆர்டினரி என்றால் ஸ்டீல் கட்டிலும் ஃபேனும்  மட்டும் இருக்கும் (அதில் ஸ்டீல் கட்டில் என்று சொல்லும்போது அவர் மூஞ்சியில் அப்படி ஒரு பெருமிதம். எல்லாம் நேரம்லேய்  என்று நினைத்துக் கொண்டேன்) , டீலக்ஸில் கொசுவர்த்திச் சுருளும் குளிப்பதற்கு வென்னீரும் வைத்துக் கொடுப்போம் என்றார். என்னால் ஆவலை அடக்க முடியாமல், அப்ப சூப்பர் டீலக்ஸ்? என்றேன். சூப்பர் டீலக்ஸில் டிவி யும்  இருக்கும் என்றார். அடக் கெரகமே என்று நினைத்துக் கொண்டு , சரி சூப்பர் டீலக்ஸே கொடுங்கள் என்றேன். கொஞ்சம் காஸ்ட்லியாக இருக்கும் பரவாயில்லையா என்றார் ( என்னை விட மாட்டாய்ங்கெ போலிருக்கே). எவ்வளவு என்றேன். நூத்தி நாற்பது ரூபாய் ஆகும் பரவாயில்லையா என்றார் ( நான் இருந்த கோலத்திற்கு , இவனால் 140 ரூபாயெல்லாம் கொடுக்க முடியாது என்று அவருக்கு தோணியிருக்க வேண்டும்). அதுசரி..சூப்பர் டீலக்ஸ் 140 என்றால் மத்த ரூமெல்லாம்   எவ்வளவு என்றேன். 100 மற்றும் 120 என்றார். (இனி  அந்த லாட்ஜின்  தரத்தை உங்களின் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்)....இந்த லட்சணத்தில் ரூம் சர்வீஸ் வேறு...அவ்வப்போது வந்து டீ வேண்டுமா காப்பி வேண்டுமா என்று. என் வாழ்க்கையில் அந்த இரவை மறக்கவே முடியாது.....அதிலிருந்து எப்போது மழை பெய்தாலும் எனக்கு கங்கை கொண்ட சோழபுரம், அங்கு சாப்பிட்ட லெமன் ரைஸ், கிருஷ்ணவேணி லாட்ஜ் மூன்றும் ஞாபகத்திற்கு  வந்து விடும்.


அதேபோல் 2012 டிசம்பரில் திரும்ப ஒரு முறை க.கொ.சோ.புரம் சென்றிருந்தேன். இந்த முறை குடும்பத்தோடு. அன்று இரவு அபிஷேகத்திற்குச் சொல்லியிருந்தோம். நம் முதல்வர்(களின்) புண்ணியத்தால் கரண்ட்டும் இல்லை. அவ்வளவு பிரமாண்டமான கோயிலில் நாங்கள் மொத்தமே 8 பேர்தான் ( நாங்கள் 4 பேர் + 2 குருக்கள் + 2 வாத்தியக்காரர்கள் - நாதஸ்வரம் + மேளம்). மிகக் குறைவான வெளிச்சத்தில் அந்தப் பிரமாண்டமான லிங்கத்திற்கு அபிஷேகம் நடக்க, வாத்தியக்காரர்கள் " ஆயிரம் கண் போதாது வண்ணக் கிளியே ..." பாடலை நாதஸ்வரத்தில் வாசிக்க , அது அந்தக் கோயிலின் எல்லா திசையிலும் எதிரொலித்து ஒரு ஸ்பெஷல் எஃபெக்ட் கொடுத்தது பாருங்கள் ....செம த்ரில்லிங். இந்தியாவில் இருந்த மிச்ச சொச்ச  நாட்களில் ஒவ்வொரு முறை கரண்ட் போகும்போதும், எனக்கு க.கொ.சோ.புரத்தில் பார்த்த அபிஷேகமும் , ஆயிரம் கண் போதாது வண்ணக் கிளியே பாட்டும் ஞாபகத்துக்கு வந்து விடும்.


அதேபோல் என்னுடைய முதல் சென்னை விசிட். 1983 - இல் 10 -ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிந்து 2 மாத விடுமுறையில் இருந்தேன். என் அப்பாவிடம்  சண்டை போட்டு சென்னையில் இருக்கும் என் மாமா வீட்டிற்குச்  செல்ல அனுமதி வாங்கி விட்டேன்.முதல் முறையாக கடல் கடந்து ( ????????!!!!!!!!!) சென்னை செல்லப் போகிறோம் என்று ஒரே பர பரப்பு. என்னை விட என் அப்பாவிற்கு பயங்கர டென்ஷன். பையனை எப்படி தனியே அனுப்புவது என்று. நான் சென்ற பஸ்ஸில் தன் நண்பர் ஒருவரைப் பிடித்து விட்டார். என் அப்பாவின் முகத்தில் அப்படி ஒரு சந்தோசம். யோவ் கிருஷ்ணா, என் பையன் இப்போதான்யா  முதன் முதலாக மெட்ராஸ்  போகிறான். பார்த்துக்கய்யா. ...காலையில் எக்மோரில் வந்து இவன் மாமா இவனை அழைத்துக் கொண்டு போய் விடுவார் என்றார். கவலையே  படாதீங்க  சார். இவன் மாமா வரும்வரை நான் இவன் கூடவே இருந்து பார்த்துக் கொள்கிறேன் என்று அவர் 10 முறை Assurity கொடுத்த பிறகே என் அப்பா அந்த இடத்தை விட்டு நகன்றார். நான் ஏகப்பட்ட கனவுகளுடன் கொஞ்சம் கூட துங்காமல் கொட்ட கொட்ட முழித்துக் கொண்டே பயணம் செய்தேன். கிட்டத்தட்ட 4 மணியளவில் எக்மோரில் ரயில்வே ஸ்டேஷனுக்கு எதிரில் வந்து இறங்கினோம்.  


அது ரயில்வே ஸ்டேஷன் என்று தெரியாமல் ரொம்ப ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். அது என்ன கட்டிடம் என்று அவரிடம் கேட்க ஆசை. ஆனாலும் எதோ ஒரு கூச்சம் வந்து தடுத்தது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்து " அண்ணே அது என்ன கட்டடம்ணே " என்றேன். அவர் ஒரு நிமிடம் யோசிப்பது போலத்  தெரிந்தது. பிறகு நிமிர்ந்து ஒரு முறை அந்தக் கட்டடத்தைப் பார்த்து விட்டு இதுதான் கவர்னர் பில்டிங் என்றார். எனக்கோ சந்தோஷத்தில் தலைகால் புரியவில்லை. பின்னே ...வந்து இறங்கிய சில நிமிடத்துக்குள்ளேயே கவர்னர் பில்டிங்கைப் பார்ப்பதென்றால் சும்மாவா. இருந்தாலும் ஒரு சந்தேகம் " ஏண்ணே, இந்த அதிகாலையிலேயே  இவ்வளவு மக்கள் உள்ளே போய்க்கொண்டும் வந்து கொண்டும் இருக்கிறார்கள்" என்றேன் அப்பாவியாக. அவர் சத்தியமாக அந்தக் கேள்வியை ரசிக்கவில்லை என்பது அவர் முகத்திலேயே தெரிந்தது. அவர் சற்று எரிச்சலுடன் " பின்ன ....கவர்னர்னா என்ன சாதாரணமான ஆளா  " என்றார். நானும் அவர் சொல்வது கரெக்ட்தானே என்று  சமாதானமாகி விட்டேன். அப்போதுதான் நான் தற்செயலாக நிமிர்ந்து அந்த கட்டடத்தின் மேலே மாட்டியிருந்த விளம்பரப்  பலகையைக் கவனித்தேன். " கவ்னர் பீடிகள்" என்று போட்டிருந்தது. சட்டென்று பொறி தட்டியது. "கவ்னர் பீடிகள்" பலகையைப் பார்த்து விட்டுத்தான் தலைவர் கவர்னர் பில்டிங் என்று என்னிடம் கதை விட்டிருக்கிறார் என்று புரிந்தது. அதையும் அவரிடமே கேட்டு விட்டேன். உடனே அவர் சுதாரித்துக் கொண்டு " ஹி...ஹி...ஹி...நானும் மெட்ராசுக்கு இப்போதுதான் முதல் முறையாக வருகிறேன்" என்றார். அதிலிருந்து நான் எப்போது சென்னைக்குப் போனாலும் கவர்னர் பில்டிங்கை  நினைக்காமல் இருந்ததில்லை.  


நான் ஜெர்மனி செல்லும் ஒவ்வொரு முறையும் ஹிட்லரின்  Cencentration Camp  சென்று வர வேண்டும் என நினைப்பேன். ஆனால் எதாவது ஒரு வேலை வந்து முடியாமல் போய் விடும். சென்ற  வருடம் ஏப்ரலில் ஒரு வாய்ப்பு வந்தது. இந்த முறை விட்டு விடக் கூடாது என்று முன்னாலேயே பிளான் பண்ணி அதற்கேற்றார்போல டிக்கெட்டும் புக் பண்ணி விட்டு கிளம்பினேன். நான் தங்கியிருந்தது கொலோன்  என்னும் நகரில். Concentration Camp  இருந்தது Buchenwald என்னும் ஊரில். அதை ப்யூஹன் வால்ட் என்றுதான்  உச்சரிக்கிறார்கள். கிட்டத்தட்ட 8 மணி நேரப் பயணம், ட்ரெயின் , பஸ் , கார் என்று மாறி மாறிப் பயணம் செல்ல வேண்டியிருந்தது. நான் அங்கு போய் இறங்கும்போது  மதியம் 2 மணியாகி விட்டது. குளிர் காற்றோடு தூறல் வேறு போட்டுக் கொண்டிருந்தது. ப்யூஹன் வால்ட் ஒரு மிக பிரமாண்டமான சிறைச்சாலை. இங்கு வைத்து ஏராளமான யூதர்களை சித்திரவதை செய்ததோடு, விஷ வாயு அறைகளில் ( Gas Chambers) வைத்து ஏராளமானோரை படுகொலையும்  செய்திருக்கிறார்கள். இதை ஹிட்லரே நேரில் வந்து அடிக்கடி பார்வையிடுவதும் உண்டு. அதில் பெரும்பாலான இடங்களை எந்த மாறுதலும் செய்யாமல் அப்படியே வைத்திருக்கிறார்கள். அப்போது நடந்த நிகழ்ச்சிகளின் புகைப்படங்களை காட்சிக்கு வைத்திருக்கிறார்கள்.   ஒரு நல்ல புகைப்பட  கலைஞனுக்கு அழகு அவன் எடுக்கும் இடங்களோடு அல்லது மக்களோடு  Detached ஆக இருப்பது. நான் ஒரு நல்ல புகைப்பட கலைஞனில்லை என்பது திரும்ப ஒரு முறை அங்கு  நிரூபணமாகியது.  அங்குள்ள குறுகலான அறைகளையும்,  விஷ வாயு அறைகளையும் புகைப்படம் எடுப்பதற்காக Tripod ஐ செட் பண்ணி விட்டு புகைப்படம் எடுக்க முடியாமல் திணறினேன். அங்கு நடந்திருந்த நிகழ்ச்சிகள் முகத்தில் அறைவது போல இருந்தன. அங்கு நின்றிருந்த வெள்ளைக்காரர் ஒருவர் என் நிலையைப் பார்த்து விட்டு என் முதுகில் ஆதரவாகத்  தடவிச் சென்றார். அதன் பிறகே நான் என் நிலை உணர்ந்து  சில படங்கள் மட்டும் எடுத்து விட்டு வெளியேறினேன். நான் கொலோன்   திரும்பும்போது நடு இரவு 2 ஆகி விட்டது. அதிலிருந்து நான் கலைஞர் டி.வி. யில்  சரித்திரம் தொடர் பார்க்கும்போதெல்லாம் என் மனம் ப்யூஹன்வால்ட் பறந்துவிடும்.


இது போன்ற ஏராளமான நிகழ்ச்சிகள் என் வாழ்வில். அதற்காக எனக்குப் பிரச்சினைகளே இல்லை என்று அர்த்தமில்லை. எனக்கும் 1008 தலைவலிகள் உண்டு. ஆனால் அது வேறு இது வேறு என்று பிரித்து விடுவேன். 


கண்ணதாசனின் கதை ஒன்று உண்டு. கானகத்தில் புலிக்குப் பயந்து ஓடிய ஒருவன் ஒரு பாழுங்கிணற்றில் விழுந்து விட்டான். கீழே விழுவதற்குள் அங்கு தொங்கிக் கொண்டிருந்த ஒரு விழுதினைப் பற்றிக் கொண்டான். மேலே புலி அவனுக்காக காத்துக் கொண்டிருந்தது கீழேயோ விஷ நாகங்கள் நெளிந்து கொண்டிருந்தன. பத்தாததற்கு அவன் பிடித்திருந்த விழுதை வேறு ஒரு எலி கருமிக் கொண்டிருந்தது. அப்போது அங்கிருந்த மரத்தில் இருந்த தேன் அடை ஒன்று உடைந்து அங்கிருந்த தேன் அவன் வாயில் வந்து விழுந்ததாம். அப்போது அவன் சொன்னானாம் “ ஆகா..தேன் என்ன சுவை” என்று. எப்பேற்பட்ட உண்மை.... என்னதான் பிரச்சினை என்றாலும் தேன் என்ன கசக்கவா செய்யும்?   


நம் வாழ்வில் நடக்கும் சின்ன சின்ன நிகழ்ச்சிகளையும் ரசிப்பதுதானே வாழ்க்கை, இல்லையா?


நண்பர்களே...இப்போது ஒரு சின்ன Request. எனக்காக ஒரு ஐந்தே ஐந்து நிமிடம் கண்ணை மூடி யோசித்துப் பாருங்கள். நீங்களே அதிசயப்படும் அளவிற்கு உங்கள் வாழ்வில் அவ்வளவு இனிமையான  சம்பவங்கள் நடந்திருக்கும் – I bet.அதை அடிக்கடி நினைவு கூர்ந்து சந்தோஷப் படுங்கள்....வாழ்வு இனிக்கும்.


வெ. பாலமுரளி.


பி.கு: தான் உயிரோடு இருக்கும் வரை என் எழுத்திற்கு முதல் ரசிகையாயிருந்து என்னை ஊக்குவித்த என் அம்மாவிற்கு இந்த டைரிக் குறிப்பை காணிக்கையாக்குகிறேன்.  

Monday, 28 January 2013

13. நான் சென்ற விமானத்தில் வெடிகுண்டு….




நான் இதுவரை எத்தனையோ முறை விமானத்தில் பயணத்திருந்தபோதும், கடந்த ( 2011 ) டிசம்பரில்,  சென்னை – மதுரை Spice Jet - ல் பயணித்தது வாழ்க்கையில் மறக்கமுடியாத ஒரு ஜில்லிட்ட அனுபவமாகப் போய் விட்டது.

விமானத்தில் இருந்து சூரிய அஸ்தமனத்தை புகைப்படம் எடுக்க வேண்டுமென்பது என்னுடைய நீண்ட நாள் கனவு. அன்று அது நிறைவேறப் போகிறதென்று என் பட்சி சொன்னதால் மிகவும் ஆவலோடு Spice Jet Counter –ஐ அணுகினேன். என் Bad Luck, எல்லா ஜன்னல் சீட்டும் Already Occupied என்று சொல்லி விட்டாள் அந்த அழகி மீனாள். ஒரு நிமிடம் சோர்ந்து விட்டேன்.

அவளே, நீங்கள் அருகில் உள்ளவரைக் கேட்டு மாறிக் கொள்ளுங்கள் சார் என்றாள். எனக்குத் திடீரென்று ஒரு யோசனை தோன்றியது. என்னுடைய கேமராவை வெளியில் எடுத்து என்னுடைய பெரிய லென்ஸை Fix பண்ணி ஒரு பெரிய Professional Photographer போல ஒரு போஸ் கொடுத்தால் உடனே ஜன்னல் சீட்டை கொடுத்து விடுவார்கள் என்று முடிவு பண்ணி உள்ளே நுழைந்தேன் ( அடச்சீ…..இவன் இவ்வளவு அல்பையா என்று நீங்கள் நினைப்பது தெரிகிறது…சரி..சரி..கண்டு கொள்ளாதீர்கள்).

என் சீட்டுக்கு அருகில் ஒரு வட இந்திய இளம் தம்பதியினர் உட்கார்ந்திருந்தனர். பார்ப்பதற்கு காஷ்மீர் அல்லது பாகிஸ்தானி மக்கள் போலத் தெரிந்தது. நான் ஜன்னலில் உட்கார வேண்டுமென கேட்டுக்கொண்டவுடன் எதற்கு என்று கூடக் கேட்காமல் உடனே நகர்ந்து உட்கார்ந்து கொண்டார்கள். இருவருமே என் கேமராவைக் கண்டு கொள்ளவேயில்லை (என் மூஞ்சியைத் துடைத்துக் கொண்டேன் - வழக்கம் போல். பல்பு வாங்கி வாங்கி இப்போவெல்லாம் பழகிப் போச்சுங்க).

விமானம் கிளம்ப சிறிது நேரம் ஆகும் போலத் தெரிந்தது. சும்மா பேச்சுக் கொடுப்போமே என்று, எங்கிருந்து வருகிறீர்கள் என்றேன். திடீரென்று கேட்டதால், இருவருமே இந்தக் கேள்வியை எதிர்பார்க்காமல், கணவன், பாம்பே என்றும், மனைவி காஷ்மீர் என்றும் அவசரத்துடன் சொல்லி விட்டு ஒருவர் மூஞ்சியை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். காரணமே இல்லாமல் ஏன் இருவரும் இந்த அளவுக்கு டென்ஷன் ஆகிறார்கள் என்று புரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்து விட்டேன். Something Wrong என்று என் உள் மனது சொல்லியது. சரி, நம் தொழிலைக் கவனிப்போமென்று, என் கேமராவை செட் பண்ண ஆரம்பித்தேன். அதேசமயம் அவர்களை ஓரக் கண்ணால் கவனிப்பதையும் என்னால் தவிர்க்க முடியவில்லை. கணவன், மனைவி இருவருமே ஏதோ காரணத்தால் அந்த ஃபிளைட்டையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்கள்.

ஃபிளைட் கிளம்ப ஆரம்பித்ததும், கணவன் கண்ணால் ஏதோ சைகை செய்ய, இருவரும் ஒருவர் கையை ஒருவர் இறுக்கப் பிடித்துக் கொண்டு கண்ணை மூடிப் பிரார்த்தனை செய்ய ஆரம்பித்து விட்டார்கள். அவர்கள் கையிலும் முகத்திலும் தெரிந்த இறுக்கம் அவர்களின் நோக்கத்தை எனக்கு மிகத் தெளிவாகப் புரிய வைத்தது. ஃபிளைட்டில் குண்டை வெச்சிட்டாய்ங்கெய்யா…குண்டை வெச்சிட்டாய்ங்கெ….மொழி படத்தில் வருவது போல என் காதுக்கருகில் சங்குச் சத்தமும் செகண்டிச் சத்தமும் மிகத் தெளிவாகக் கேட்டது. அந்த AC குளிரிலும் எனக்கு வியர்த்து ஊற்றியது.

என்ன செய்யலாம்? எனக்கு ரொம்ப ஒண்ணும் Options இருக்கவில்லை. ஒன்று, சத்தம் போட்டு ஊரைக் கூட்டுவது ( ஊரை என்ன ஊரை….அந்த ஃபிளைட்டில் இருந்த 100 பேரை Alert பண்ணலாம்). இரண்டு, கையில் உள்ள கேமராவை வைத்து சகட்டு மேனிக்கு ஷூட்டித் தள்ளுவது ( ஒருவேளை என் படங்கள் தப்பித்து விட்டால், ஒரு மாபெரும் கலைஞனின் ( ஹி…ஹி…ஹி..என்னைத்தான்) கடைசித் தருணங்கள் என்று என் படங்களுக்குத் தலைப்பு வைத்து யாரேனும் ஒரு Article எழுதலாம். உயிரோடு இருக்கும்போதுதான் இந்தப் பாழாய்ப் போன உலகம் நம்மை கண்டு கொள்ளவில்லை. (ச்சே..இப்படி புலம்ப வெச்சுட்டாய்ங்கெளே…..).

முதல் Option இல் பெரிதாய் ஒன்றும் சாதிக்கப் போவதில்லை என்று தோன்றியதால், Option No. 2 – வை டிக் செய்தேன் ( ஆமா….இவரு பெரிய அமிதாப். நீங்களும் கோடிஸ்வரராகலாம் ப்ரோகிராம் நடத்துறாரு…..). பெரிதாக யோசித்து நேரத்தை வீணாக்காமல், ஃபிளைட்டையும் அதில் உள்ளவர்களையும் தட தடவென்று க்ளிக்கித் தள்ளினேன். அந்தக் காஷ்மீர் தம்பதி, கொஞ்சம் கூட இறுக்கம் தளராமல் பிரார்த்தனை செய்வதிலேயே குறியாக இருந்தார்கள். ஒரு Evidence – க்கு இருக்கட்டுமே என்று என் காலுக்கு அருகில் கேமராவை வைத்து அவர்களையும் ஒரு Close Up Shot எடுத்தேன். இப்போ ஒரு சின்ன சந்தேகம். ஃபிளைட்டே வெடிக்கும்போது என் கேமரா மட்டும் எப்படித் தப்பிக்கும்? டமாலென்று ஒரு யோசனை. என் கேமராவில் உள்ள மெமரி கார்டைத் தனியேப் பிரித்தெடுத்து என் ஷூவுக்குள் அடியில் பாதத்தில் தள்ளினேன் (ராஜிவ் காந்தி சம்பவத்தின் போது அவருடைய Lotto Shoe மட்டும் தப்பித்ததாக ஞாபகம்).

இனி செய்வதற்கு ஒன்றும் இல்லை என்பதால், என் பதட்டத்தைக் குறைத்துக் கொண்டு அந்தக் காஷ்மீரித் தம்பதியையே கவனிக்க ஆரம்பித்தேன். இந்த இடைப் பட்ட நேரத்தில் ஃபிளைட்டும் ஒரு நல்ல உயரத்தை எட்ட ஆரம்பித்திருந்தது. அங்கு உள்ள ஏர் ஹோஸ்டஸ்,  குடிக்க ஏதேனும் ஜூஸ் வேண்டுமா என்று கேட்டு அருகில் வந்தாள் ( ஆமா….இப்ப ஜூஸ் ரொம்ம்ம்ம்ம்ப முக்கியம்). அந்த சத்தத்தால் கொஞ்சம் கவனம் சிதறி அந்த தம்பதி இருவரும் கண்ணைத் திறந்தார்கள். நான் அவர்களையே பார்ப்பதை அறிந்து அவர்கள் இருவரும் ஒரு மாதிரி கூச்சத்தோடு என்னைப் பார்த்து சிரித்து விட்டு “ ஹி..ஹி…எங்கள் இருவருக்கும் ஃபிளைட் பயணம் என்றால் ரொம்பப் பயம். அதுதான் கண்ணை மூடி Prayer பண்ணினோம்” என்றார்கள்.

 பாலச்சந்தர் படத்தில் வருவதுபோல என் முகம் சுக்கல் சுக்கலா கிழிந்தது. வேதம் புதிது ஸ்டைலில் என்னை யாரோ திரும்பத் திரும்ப கன்னத்தில் அறைந்தார்கள். ஆக…இந்த முறையும் பல்புதானா?????? இந்தக் களபரேத்தில் அழகான Sunset - ம் போய்விட்டது. நம்ம பொழப்பே இந்த மாதிரி நாறப் பொழப்பாப் போச்சே என்று என்னை நானே நொந்து கொண்டு காலில் இருந்த மெமரி கார்டை எடுத்துத் திரும்ப கேமராவில் போட்டேன்..

வெ.பாலமுரளி….