Wednesday 28 August 2013

முள்றியின் டைரி 18: என் ICU அனுபவங்கள்:


முள்றியின் டைரி 18:
என் ICU  அனுபவங்கள்:

துன்பம் வரும் வேளையிலே சிரிங்க
என்று சொல்லி வெச்சார் வள்ளுவரு சரிங்க...
பாம்பு வந்து கடிக்கையில்
பாழும் உடல் துடிக்கையில்
யார் முகத்தில் பொங்கி வரும் சிரிப்பு....

என்ற கண்ணதாசனின் பாட்டு ஒன்று உண்டு. ரொம்ப கரெக்ட்.  நமக்கு ஏதாவது ஒரு இக்கட்டான சூழ்நிலை வரும்போது, உட்கார்ந்து கெக்கே பிக்கே என்று சிரித்துக் கொண்டிருக்க முடியாது. அப்படியே சிரித்தாலும்,  நம்மை வேறு ஒரு லிஸ்ட்டில் சேர்த்து விடுவார்கள். ஆனால், அதேசமயம், அந்தப்  பிரச்சினை முடிந்து கொஞ்ச நாள் கழித்து அந்த சம்பவத்தை நினைத்துப் பார்த்தால், விழுந்து விழுந்து சிரிக்க முடியாவிட்டாலும் கூட ஒரு சின்ன புன்னகையாவது நம் முகத்தில் தோன்றுவதைத் தவிர்க்க முடியாது. அது போன்ற ஒரு நிகழ்ச்சியை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த டைரி.

2007 – எனக்கு ஒரு கேவலமான வருடம். ஒரு நாள், அலுவலகம் முடிந்து வீட்டிற்கு சென்று கொண்டிருந்தேன். நெஞ்சில் சுருக்கென்று ஒரு வலி. நாம் இன்று ஏதாவது வாய்வு ஏற்படுத்தும் சாப்பாடு ஏதேனும் சாப்பிட்டோமா என்று ஒரு நிமிடம் யோசித்தேன். வாழைக்காய் பொறியல் சாப்பிட்ட ஞாபகம் வந்தவுடன் என்னை நானே சமாதானப் படுத்திக் கொண்டு காரை நிறுத்தாமல் சென்று கொண்டிருந்தேன் ( நான்தான் முன்னயே சொல்லியிருக்கேன்ல, நாங்கல்லாம் ரொம்ப   ப்ரைட்டுன்னு). ஆனால் வலி வேறு மாதிரி இருந்தது. நண்பர்கள் சிலரின் யோசனையால் நேரே Nairobi Hospital சென்றேன். நம்ம ஊர் Apollo Hospital மாதிரி இங்கு Nairobi Hospital. இந்த நாட்டு President, Vice President, Prime Minister, பாலமுரளி போன்ற பெரிய மக்கள் போகின்ற Hospital ( ஹி…ஹி... ஹி...ச்சும்மா  டமாசு…..).

நான் போய்ப்  பார்த்த டாக்டர், பரேஷ் பட்டேல் என்னும் ஒரு இந்திய வம்சாவளி டாக்டர். ஏகப்பட்ட டெஸ்ட்டுகள் எடுத்து விட்டு, உங்களுக்கு கண்டிப்பாக இதயத்தில் அடைப்பு உள்ளது. அதன் Severity தெரியாதலால் உடனே ஆஞ்சியோ எடுத்துப் பார்த்து விட வேண்டும் என்று சொல்லி ஆஸ்பத்திரியில் அட்மிட் பண்ண வைத்து விட்டார் ( நான் ரொம்ப  ப்ரைட்டுன்னு முன்னால் சொன்னதை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன்).  மறுநாள் காலை ஆபரேஷன் தியேட்டருக்கு கூட்டிப் போய் விட்டார்கள்.

சும்மா சொல்லக் கூடாது, ஆபரேஷன் தியேட்டர், அழகு என்றால் அப்படி ஒரு அழகு. ரொம்ப கலை ரசனையுடைய ஒரு பணக்காரரின் Reading Room போல அமர்க்களமாக இருந்தது ( Don’t judge a book by its cover என்று என் பெண் அடிக்கடி சொல்லும் பழமொழி ஏனோ அன்று எனக்கு ஞாபகத்திற்கு வரவில்லை). அசந்து விட்டேன் ( நான் ஏன் இவ்வளவு ரசித்து சொல்கிறேன் என்பது பின்னால் உங்களுக்குப் புரியும்). நாங்கள் என்ன செய்யப் போகிறோம் என்று Procedure – ஐ விளக்கினார்கள் ( இங்கு அது ஒரு பொதுவான Practice . சில சமயம் கொஞ்சம் டூ மச்சாக விளக்கி நம்மை பயமுறுத்தியும் விடுவார்கள்).

கொஞ்ச நேரத்தில் தொடையில் ஒரு ட்யூபை சொருகி ஒரு டையை செலுத்தினார்கள். அந்த ‘டை’ இதயத்தில் உள்ள அடைப்புகளை எல்லாம் தனிப்படுத்திக் காட்டிவிடும் என்று எனக்குச் சொல்லியிருந்தார். ஏனோ என் கேஸில் அது வேலை செய்யவில்லை. அவருக்கோ பயங்கர ஷாக். உடனே டாக்டர். கரியூக்கி என்பவருக்கு ஃபோன் பண்ணி அழைத்தார். டாக்டர் கரியூக்கி ரொம்ப சீனியர் போலிருக்கு. வந்த ஒரிரு நிமிடத்திலேயே விஷயம் என்ன என்று கண்டு பிடித்து விட்டார்.  இது Blood Clot. அதை க்ளியர் பண்ணாமல் Blockage – ஐப் பார்க்க முடியாது என்று ஒரு புத்தகத்தை எடுத்து அவருக்கு க்ளாஸ் எடுக்க ஆரம்பித்து விட்டார் ( Yes…எனக்கு தொண்டையில் மீன் முள் சிக்கிய போது ஏற்பட்ட அதே அனுபவம்). இது போல விஷயங்கள் எனக்கு மட்டும்தான் நடக்குமா, இல்லை ரொம்பப் பேருக்கு நடக்குமா என்ற குழப்பத்தில் நான் கண்ணை மூடிப் படுத்திருந்தேன்.  அதைக் கரைக்காமல் ஒண்ணும் பண்ண முடியாது என்பதால் “ பேக் அப்” ( ???) என்று சொல்லி என்னை ICU – விற்கு அனுப்பி விட்டார்கள்.

அதைக் கரைப்பதற்காக மருந்து கொடுத்து விட்டு இரண்டு நாட்களுக்கு ஒரு முறை ஆபரேஷன் தியேட்டருக்குக் கூட்டிக் கொண்டு போய் Blood Clot கரைந்து விட்டதா என்று செக் பண்ணினார்கள். கரையவில்லை என்றதும் திரும்ப ICU –விற்குக் கூட்டி வந்து விடுவார்கள்.  ஒவ்வொரு முறையும் அதே  Procedures…எனக்கு வாழ்க்கையே வெறுத்து விட்டது....சில சமயம் நானே கூட அவர்களை ஞாபகப் படுத்தியதும் உண்டு – என்ன இன்னைக்கு ஆபரேஷன் தியேட்டருக்குக் கூட்டிப் போகவில்லையா என்று. கிட்டத்தட்ட 10, 15 நாட்களுக்குப் பிறகு அவர்களுக்கே இந்த நாடகம் போரடித்துப் போய் விட்டது என்று நினைக்கிறேன். பொத்தாம் பொதுவாக Ballooning என்னும் ஒரு ப்ராசஸ் மட்டும் பண்ணி விட்டு என்னை Discharge செய்து விட்டார்கள். மறுபடியும் வலி வந்தால் உடனே வந்து விடுமாறும், இன்னும் ஒரு வாரத்திற்கு எங்கேயும் ட்ராவல் பண்ண வேண்டாமென்றும் அட்வைஸ். நான் துண்டைக் காணோம் துணியைக் காணோமென்று ஒரே ஓட்டமாக ஓடி வந்து விட்டேன்.
உடனே ஆளாளுக்கு “ நான்தான் அப்பவே சொன்னேன்ல இந்தியா போகச் சொல்லி” என்று அட்வைஸ் மழை. நாமாகப் போகாவிட்டால் இவெய்ங்கெளே நம்மை பார்சல் பண்ணி அனுப்பி விட்ருவாய்ங்கென்னு நானும் உடனே கிளம்பி விட்டேன். இந்தியாவுக்குப் போய்ப் பார்த்தாத்தான் தெரியுது, நைரோபியே தேவலை என்று. அவ்வளவு கேலிக் கூத்துகள்.

இந்தியாவில் நான் போய் இறங்கிய இடம் மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவ மனை. அந்தக் காலத்தில் வாரச் சந்தை என்று ஒன்று நடக்கும். இப்ப உள்ள  Generation அதையெல்லாம் பார்த்திருப்பார்களா என்று தெரியவில்லை. அப்படி யாரேனும் பார்த்ததில்லை என்று வருத்தப் பட்டால், உடனே மதுரை மீனாட்சி  மிஷனைப் போய் பாருங்கள். வாரச் சந்தை என்றால் என்ன என்று புரிந்து விடும். அப்புறம் எதுக்கு ராசா அங்க போன என்கிறீர்களா? சில தவறான கணக்குகள்தான்....வேறென்ன. வீட்டிற்குப் பக்கத்தில் உள்ளது. அங்கு உள்ள Senior Cardiologist  எங்கள் உறவினர். So, Special Treatment கிடைக்குமே என்ற ஒரு நப்பாசை.

அவர், நான் நைரோபியிலிருந்து கொண்டு போன மெடிக்கல் ரிப்போர்ட்டை எல்லாம் பார்த்து விட்டு, உடனே ஆபரேஷன் தியேட்டருக்குக் கூட்டிப் போய் விட்டார். நான் இந்த இடத்தில் அந்த ஆபரேஷன் தியேட்டரைப் பற்றிச் சொல்லியே ஆக வேண்டும். சென்னையில் ஒரு தெரு முழுக்கக் காயலான் கடைகளாகவே இருக்குமே – அது என்ன பெயர், கண்ணம்மா பேட்டையா சௌகார்பேட்டையா? எனக்கு அது போல ஒரு தெருவுக்குள் நுழைந்த மாதிரியே ஒரு ஃபீலிங். ஏதோ, முரளி வர்றாரு, முரளி வர்றாரு இடத்தைக் கொஞ்சம் க்ளீன் பண்ணுங்க என்று யாரோ
சொன்னாற்போல கொஞ்சூண்டு இடத்தை மட்டும் ஒதுக்கி ஒரு ஆபரேஷன் டேபிளைப் போட்டு வைத்திருந்தார்கள். இந்த ( அவ) லட்சணத்தில் ஏ.ஸி. வேற. எனக்கு லேசாக உதறல் எடுப்பதைத் தவிர்க்க முடியவில்லை. கோழி குருடாயிருந்தா என்ன, நமக்கு குழம்புதானே முக்கியம் என்று என்ன நானே சமாதானப் படுத்திக் கொண்டேன். நைரோபியில் ஆஸ்பத்திரி சூப்பர், ஆனால் வைத்தியமோ.... ???? நம்ம இந்தியாவில் எதிர்மறை போலிருக்கு என்று நினைத்து என்னைத் தேற்றிக் கொண்டேன்.

வழக்கமான ( ????) Procedures. டையை செலுத்திய சில வினாடிக்குள்ளாகவே, இதயத்தில் உள்ள அடைப்புகள் எல்லாம் “உள்ளங்கை நெல்லிக்கனி” போல தெள்ளந் தெளிவாகத் தெரிய ஆரம்பித்து விட்டது ( கொஞ்சம் டூ மச் செந்தமிழோ? ). நம்ம தமிழ்ப் படங்களில் எல்லாம் “ Congratulations !!  நீங்க அப்பாவாயிட்டீங்க “ என்று ஒரு டாக்டர் சந்தோஷமாகச் சொல்லுவாரே, கிட்டத்தட்ட அதே டோனில், “ Very Good. உங்களுக்கு 4 Blockages இருக்கு “ என்றார் (ஏண்டா Blockages – க்கெல்லாம் இந்த டோன் கொஞ்சம் ஓவர்னு உங்களுக்கே தெரியலை? ). சரி டாக்டர்.... என்ன செய்யலாம் என்றேன் ( கேக் வெட்டச் சொல்லுவாரோ?). நான் என்னவோ ரொம்ப கவலைப்படுகிற மாதிரி, “ இதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்லைங்க முரளி. ஸ்டெண்ட் வைத்து சரி பண்ணி விடலாம்” என்றார். இந்த இடத்தில்தாங்க என் ரியல் கிரகம் வேலை செய்ய ஆராம்பித்தது.

பக்கத்தில் உள்ள ஒரு நர்ஸை அழைத்து, “ கௌரி, நம்பர் 2, 5, 6 , 7 ஸ்டெண்ட் எடுத்திட்டு வாம்மா” என்றார். அந்த கௌரியோ நகர்வது போலத் தெரியவில்லை. அவர் திரும்ப ஒரு முறை “ போம்மா போய் எடுத்திடு வா” என்றார், இந்த முறை கொஞ்சம் சூடாக. அந்த கௌரி ரொம்ப மெதுவாக “ ஸ்டெண்ட் டெலிவரி எடுக்கப் போன நம்ம தாமு இன்னும் வரலை சார்” என்றது. என்ன தா.......மு.....வரலையா ? என்றார் அதிர்ச்சியாக – நான் அருகில் இருப்பதை மறந்து போய். ஃபோனைக் கொண்டு வா என்றார். திடீரென்று என்ன நினைத்தாரோ, இந்தா வந்துர்றேன் முரளி என்று சொல்லி விட்டு, பக்கத்து அறைக்குச் சென்றார். அவர் அங்கிருந்து பேசுவது எனக்கு மிகவும் தெளிவாகக் கேட்டது ( இதுக்கு ஒழுங்கா ஆபரேஷன் தியேட்டரில் இருந்தே பேசியிருக்கலாம்). ஃபோனில் தாமு என்ன சொன்னார் என்பது தெரியவில்லை. ஆனால், நம்ம S.Ve. சேகர் நாடகத்தில் வருவது போல மறு பக்கத்தில் பேசுவதை இவர் திரும்ப ஒரு முறை சொல்லி சரி பார்த்து விட்டுத் திட்டிக் கொண்டிருந்தார். “ எங்கடா இருக்க?” “ என்ன டீக்கடையில இருக்கியா ?” “ ஏண்டா பன்னு திண்ணு காப்பி குடிக்கிற நேரமாடா இது” “ சரி, வர்றதுக்கு எவ்வளவு நேரமாகும்?” “ என்ன அரை மணி நேரமாகுமா?” “ ஏண்டா , இங்க நான் ஒரு உயிரோட போராடிக்கிட்டிருக்கேன், உனக்கு அங்கே பன்னும் காப்பியும் கேட்குதா ( ???????) ?” . எனக்கு அந்த ஏ.ஸி.யிலும் வியர்த்து ஊற்றுவதைத் தடுக்க முடியவில்லை. அவர் அத்தோடு நிற்கவில்லை. “ என் பேஷண்டுக்கு மட்டும் ஏதாவது ஓண்ணு ஆச்சு, மவனே உன்னை நடு ரோட்டுல வச்சு வெட்டியே கொன்னுடுவேண்டா “ என்றார் உச்சஸ்தாயில். எனக்கு வியர்வையோடு கை காலும் லேசாக நடுங்க ஆரம்பித்தது. உடனே என் அறைக்குள் வந்தவர் “ இது வேற ஒரு பிரச்சினைங்க   முரளி” என்றார்  ( கேட்கிறவன் கேனையன் என்றால் எருமை மாடு ஏரோப்ளேன் ஓட்டுமாம்னு எங்க ஊர்ல ஒரு பழமொழி சொல்லுவாய்ங்கெ). பிறகு  அவரே நேராக ஸ்டோருக்குப் போய் ஸ்டாக்கில் இருக்கிற ஸ்டெண்டை எடுத்து வந்தார் ( 7 ம் நம்பர் இல்லாவிட்டால் என்ன, அதான் நம்மகிட்ட  10 – ம் நம்பர் ஸ்டாக்ல  இருக்குல்ல ...). அந்தக் குளறுபடியில, ½ மணியில முடிகிற ஆப்ரேஷன் கிட்டத்தட்ட 4 மணி நேரம் நடந்தது. ஒரு வழியாக என்னை CICU – வில் கொண்டு போய் வைத்தார்கள். என்னைத் தவிர அங்கு இருந்தவர்கள் எல்லோருமே ரொம்ப வயதானவர்கள். கிட்டத்தட்ட எல்லோருக்குமே பை பாஸ் பண்ணியிருந்தார்கள். கிராமத்தில் இருந்து வந்திருப்பார்கள் போலிருக்கு.  ஆனால், சர்வ சாதாரணமாக லோ ஷூகர், ஹை ஷுகர், LDL, HDL என்று  பேசிக் கொண்டிருந்தார்கள் ( இப்பல்லாம் கிராமங்களில் ரொம்ப முன்னேற்றம் போலிருக்கு என்று நினைத்துக் கொண்டேன்).

எனக்கு நிஜமாகவே நெஞ்சு வலித்ததா இல்லை ஆபரேஷன் தியேட்டரில் நடந்த ட்ராமாவினால் நெஞ்சு வலி போன்ற ஒரு பிரமையா என்று இனம் பிரிக்க முடியவில்லை. ஆனால் அந்த இரவு முழுவதும் ஒரு மூச்சுத் திணறலும், வலியும் இருந்து கொண்டே இருந்தன. உடனே டாக்டரைப் பார்த்து என் பிரச்சினையைச் சொல்ல வேண்டும் எனத் துடித்துக் கொண்டிருந்தேன். ஏனோ அங்கிருந்த Sisters  யாரும் அந்த நேரத்தில் டாக்டரை அழைக்க மறுத்து விட்டார்கள் ( திட்டுவார் சார்...). காலில் ஒரு பெரிய Bandage போட்டிருந்தலால் , காலை கொஞ்சம் கூட அசைக்கக் கூடாது என்று வேறு கண்டிசனாகச் சொல்லி விட்டார்கள். அதுதான் உள்ளதிலேயே ரொம்பக் கொடுமையாக இருந்தது. இரவு முழுவதும் அந்த அவஸ்தையில் இருந்து விட்டு, நான் எப்போது தூங்கினேன் என்று எனக்கே தெரியவியல்லை. கண் விழித்துப் பார்க்கும்போது காலை 7 மணியாகி இருந்தது. இன்னும் சிறிது நேரத்தில் டாக்டர் வந்து விடுவார் என்று ராஜாவிற்கு பராக் சொல்வது போலச்  சொன்னார்கள். என்னால் அவரைப் பார்க்கப் போகும் பரபரப்பை ( ?????) கன்ட்ரோல் பண்ண முடியவில்லை.

எங்க மதுரைப் பக்கம், டாக்டர்களும் நோயாளிகளும் பேசிக் கொள்வதைப் பார்க்க வேண்டும். ஏதோ குடும்ப மெம்பர்கள் பேசிக்கொள்வது போலவே ரொம்ப தமாஷா இருக்கும். நான் இதற்கு முன்பே சில முறை அதைப் பார்த்திருந்தாலும், இந்த முறைதான் அதை பொறுமையாக ரசிக்கும் வாய்ப்பு கிடைத்தது.
டாக்டர் வந்ததும் நேரே ஒரு முதியவரிடம் போனார். “ என்ன பெரிசு...எப்படி இருக்கு” என்றார் பொத்தாம் பொதுவாக. அதற்கு அந்தப் பெரியவர் “ எதக் கேக்குற ?” என்றார் கொஞ்சம் விட்டேத்தியாக. டாக்டருக்கு சுர்ரென்று ஏறி விட்டது “ ம்ம்ம்ம்ம்...உங்கிட்ட நான் என்ன பொண்ணா கேட்கப் போறேன். நேத்து பைபாஸ் பண்ணோம்ல. அதுதான் எப்படி இருக்கு என்று கேட்கிறேன்” என்றார். அந்த இடம் லேசாகச் சூடேறியது. பெரியவர் ரொம்ப அஸால்ட்டாக “ ஒரு வித்தியாசமும் இல்ல. அப்படியேதான் இருக்கு” என்றார். டாக்டருக்கு ரொம்ப கோபமாகி விட்டது” ஏன் பெரிசு...விழுந்து விழுந்து ( ??????) பை பாஸ் பண்ணியிருக்கோம் கொஞ்சம்கூட வித்தியாசம் தெரியலேன்ற? “ என்று ஒரு எரிச்சலோடு சொல்லி விட்டு, அடுத்து ஒரு பாட்டியிடம் சென்றார். “ என்ன பாட்டி, எப்படி இருக்கீங்க ?” என்றார். அந்தப் பாட்டி கொஞ்சம் கூட யோசிக்காமல் “ சொன்னா நம்ப மாட்ட,  அந்தப் பெரியவருக்கு மாதிரிதான், எனக்கும் ஒரு வித்தியாசமும் தெரியல” என்றது. அவரு ரொம்ப டென்ஷனாகிட்டாருங்க. “ என்ன எல்லோரும் சொல்லி வச்சுட்டு வந்திருக்கீங்களா” என்று எகிறினார். சொல்லி விட்டு அவரும் விடல. “ அது சரி, இப்ப இருக்கிற உன் உடல் நிலைக்கு 10 மார்க் போடச் சொன்னா எத்தனை மார்க் போடுவ பாட்டி என்றார் ?”. நான் நோயாளிகளிடம் இந்த மாதிரி யாரும் ஒரு Assessment Report கேட்டுப் பார்த்ததில்லை. So, நான் என் வலியை மறந்து அதைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்தேன். அந்தப் பாட்டி இந்தக் கேள்வியைக் கொஞ்சம் எதிர்பார்த்திருக்கும் போல. உடனே, “ 8 மார்க் போடுவேன்” என்றது. டாக்டரோடு சேர்ந்து எனக்கும் ஆச்சரியமாக இருந்தது. டாக்டர் அசந்து விட்டார். “ அடேங்கப்பா 80%. இதுக்கு மேல என்ன வேணும்” என்று கேஷுவலாகச் சொல்லி விட்டு நகர்ந்து விட்டார்.

அந்த நேரம் பார்த்து அவருக்கு ஒரு ஃபோன் வந்தது ( ICU – வில் மொபைல் ஃபோன், லேப்டாப் எல்லாம் அனுமதியில்லை என்று அங்கிருந்த போர்டு, நோயாளிகளுக்கு மட்டும்தான் போலிருக்கு). தான் ICU – வில் இருக்கிறோம் என்ற எண்ணம் கொஞ்சம் கூட இல்லாமல், ரொம்ப சத்தமாக பேச ஆரம்பித்தார். “ ம்ம்ம்.....சொல்லுங்க சிவா” என்றார். “ என்ன ..மல்ட்டி விட்டமினா?” “ COBADEX  போடுங்க... நல்லது “ என்றார். அவர் சொன்னது சிவாவுக்குக் கேட்கலை போலிருக்கு. COBADEX –ஐ இரண்டு மூன்று முறை திரும்பத் திரும்பச் சொன்னார். அப்படியும் சிவாவுக்கு சரியாகக் கேட்கலை. “ C for Cake, O for Orange, B for Ball, A for Africa, D for Donkey E for Elephant, X for X Ray”  என்றார்.
சிவா, மாத்திரை பெயர் ரொம்ப நீளமாக இருக்கே என்று சொல்லியிருக்க வேண்டும். “ என்ன மாத்திரை பேர் நீளமா ???? என்னய்யா எழுதினே” என்றார் பயங்கர கோபத்துடன். “ என்ன  Cake orange Ball Africa…வா ??? மூதேவி மூதேவி....நான் சொன்ன வார்த்தையில் எல்லாம் இருக்க முதல் எழுத்தை மட்டும் எழுதச் சொன்னேன்யா. நீயெல்லாம் என்னத்தைய்யா படிச்சிருக்க. வைய்யா ஃபோனை” என்று Literally கத்தினார் உச்சஸ்தாயில். “ இன்னிக்கு என்னமோ தெரியல... எல்லாம் ஒரே கெரகமா வந்திருக்கு” என்று புலம்பிக் கொண்டே என்னிடம் வந்தார். “ சொல்லுங்க முரளி உங்களுக்கு எப்படியிருக்கு” என்றார் ஒரு விரக்தியும் எரிச்சலும் கலந்த டோனில்.

நான் இங்க வர்றதுக்கு முதல் நாள் வரைக்கும் நல்லாத்தான் இருந்தேன் சார் என்று மனசுக்குள் நினைத்துக் கொண்டு “ சூப்பர் சார். செம Improvement” என்றேன். (அவருக்கு இருந்த கடுப்பில், நான் மட்டும் உண்மையைச் சொல்லியிருந்தால், பளார் என்று ஒரு அறை விட்டிருப்பார் ). அவருக்கு உடனே வாயெல்லாம் பல்.

“ I Know …I know…நான்தான் சொன்னேன்ல, ஸ்டெண்ட் வச்சா எல்லாம் சரியாயிரும்னு. இன்னும் இரண்டு நாளில் Discharge ஆயிடலாம். ஆனால் ஒரு 2 வாரம் ரெஸ்ட் எடுத்து விட்டு , பிறகு கென்யா செல்லுங்கள், சரியா ?” என்றார். சரி சார்...என்று பூம்பூம் மாடு போலத் தலையை ஆட்டினேன்.

இனி எந்த ஹாஸ்பிட்டலுக்குப் போவது என்று யோசித்துக் கொண்டே மீனாட்சி மிஷனை விட்டு Discharge  ஆனேன்.

வெ.பாலமுரளி.

பி.கு. " இவனுக்கு ஜாதகத்தில்தான் ஏதோ கோளாறு" என்று நீங்கள் முணு முணுப்பது கேட்கிறது.

Sunday 25 August 2013












முள்றியின் டைரி 17: சில கனவுகள்.....


என்னுடைய சென்ற டைரியில் “ கனவுகளே கனவுகளே காலெமெல்லாம் வாரீரோ...” என்ற பாடலைக் குறிப்பிட்டு என்னுடைய சில இனிய நினைவுகளைப் பற்றி எழுதிருந்தேன். ஆனால் கனவுகளைப் பற்றி ஒன்றுமே குறிப்பிடவில்லை. ஞாபகம் இருக்கா ? அந்த கோடிட்ட இடங்களை நிரப்பவே இந்த டைரி.

எனக்கு 2 கனவுகள் அடிக்கடி வரும்.

முதல் கனவு, கொஞ்சம் வயலன்ட். நம்ம ராஜபாளையம் நாய் போல ஒரு ஆக்ரோஷமான அல்சேஷன் நாய் அடிக்கடி என் கனவில் வரும். அதற்கு நான் செல்லமாக ( ????) ரத்தினம் என்று பெயர் வைத்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் ரத்தினம் என்னை கன்னா பின்னா என்று துரத்தும். அப்போது நான் ஓடும் ஓட்டத்தை நீங்கள் பார்க்க வேண்டும்... உசேன் போல்ட்டெல்லாம் என்னங்க ஓடுறாரு. பிஸ்கோத்து ஓட்டம். நான் அவரு மாதிரி 10 மடங்கு ஸ்பீடில் ஓடுவேன். ஆனா நம்ம ரத்தினம் இருக்கு பாருங்க, அது என்னை விட ரொம்ப ஸ்பீடு. ரொம்ப அலட்சியமாக என்னைத் தாண்டி வந்து என் குரல் வளையைக் கடித்து விடும். டமாலென்று தூக்கி வாரிப் போட்டு எழுந்து விடுவேன். இந்த நைரோபி குளிரிலும் வியர்த்து ஊற்றியிருக்கும். (உடனே ஒரு சேஃப்டிக்காக என் குரல் வளையைத் தடவிப் பார்த்துக் கொள்வேன்). இந்த மார்ச் மாதம் மதுரைக்குப் போயிருக்கும் போது, என் மைத்துனர் வீட்டில் இருக்கும் ரோஸி என்ற நாயை செல்லமாகத் தடவிக் கொடுக்கப் போய், அது என் புறங்கையை நன்றாக ஆழமாகக் கடித்து விட்டது. ஏனோ தெரியவில்லை, அதிலிருந்து நம்ம ரத்தினம் என் கனவில் வருவதேயில்லை.

கனவு நம்பர் 2. இது கொஞ்சம் கேவலமான கனவு. என்னை போலிஸ்காரர்கள் சுற்றி வளைத்துக் கைது செய்து சிறையிலடைப்பது போல ஒரு கனவு. இது ரொம்ப காலமாக வந்து கொண்டிருந்தது. கனவில் வரும் போலிஸ்காரர்கள் எல்லோரும் என்னை மாதிரியே ரொம்ப கலராக இருப்பதால், அவர்கள் இந்தியர்களா இல்லை ஆப்பிரிக்கர்களா என்று என்னால் கண்டு பிடிக்க முடிந்ததில்லை. அவர்கள் எந்த ஒரு முறையும் எனக்குக் காரணமே சொன்னதில்லையாதலால், எதற்காக என்னை கைது செய்கிறார்கள் என்றும் எனக்கு எப்போதும் புரிந்ததேயில்லை.

கடந்த ஏப்ரல் மாதம், ஒரு பிஸினஸ் மீட்டிங்கிற்காக மோலோ என்னும் ஊரிற்குச் செல்ல வேண்டியிருந்தது. என்னுடைய டிரைவருக்கு உடல் நலம் சரியில்லாதலால் காரை நானே ஓட்டிச் செல்லலாம் என்று முடிவெடுத்து ( எல்லாம் கெரகம்தான்...வேறென்ன ....), CD –யில் TMS – ன் சிவாஜி ஹிட்ஸ் கேட்டுக் கொண்டே ஜாலியாகப் போய்க் கொண்டிருந்தேன். லிமுரு வியூ பாயிண்ட் முடிந்து கார் மலை இறக்கத்தில் இறங்கிக் கொண்டிருந்தது. நான் TMS – ன் வெண்கலக் குரலில் லயித்திருந்தலால், கார், ஸ்பீட் லிமிட்டான 100 – ஐத் தாண்டி 130 KM- இல் போய்க் கொண்டிருந்ததைக் கவனிக்கவில்லை.

நான் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத நேரத்தில், ஏதோ தாவூத் இப்ராஹிமைப் பிடிப்பது போல என்னை (ரேடார்) பொறி வைத்து ஒரு போலிஸ் கூட்டம் சுற்றி வளைத்துப் பிடித்து விட்டது ( இங்கு இப்படித்தான். மலை இறக்கத்தில் போகும்போதுதான் ஓவர் ஸ்பீடுக்காகப் பிடிப்பார்கள்). அதில் ஒரு போலிஸ் ஆஃபிஸர் நம்ம P.S. வீரப்பா போல ஒரு கர்ண கடூரமாக சிரிப்பு சிரித்துக் கொண்டே என்னை நெருங்கினார். முதலில் நான் அவரை அவ்வளவு சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. அவர்களை ஏதோ காமெடிப் போலிஸ் போல நினைத்து ரொம்ப கேஷுவலாகப் பேசிக் கொண்டிருந்தேன். அவர்கள் என்னை விடுவதாக இல்லை. ஆனால் ஓரிரு நிமிடங்களிலேயே விஷயம் வேறு மாதிரிப் போய்க் கொண்டிருந்ததை உணர்ந்து, நம்ம இந்தியர்கள் ஸ்டைலில் பேசிப் பார்த்தேன். வந்திருந்தவர் Mr. கடமை கண்ணாயிரம் போலிருக்கு. “யேஏஏஏஏஏஏஏய்......யாரைப் பார்த்து ????? ” என்று நம்ம ஊர் தாதா மாதிரி ஒரு சவுண்டைக் கொடுத்தார். “சரி.....நடத்துங்கடா “ என்று மனதில் நினைத்துக் கொண்டே, சரி சார், கேஸ் புக் பண்ணுங்கள் என்றேன். நான் ஏதோ சார்ஜ் ஷீட்டைக் கையில் கொடுத்து என்னை வீட்டுக்கு அனுப்பி விடுவார்கள் என்று நினைத்தேன். பார்த்தால், போலிஸ் ஸ்டேஷனுக்குக் கூட்டிக் கொண்டு போய்  கேஸ் புக் பண்ணி, மாட்டுக் கொட்டடி மாதிரி ஒரு இடத்தில் என்னை மாதிரி ஒரு 10 பேரை அடைத்து வைத்து விட்டார்கள். கிட்டத்தட்ட ½ நாள் வைத்திருந்து விட்டு, கோர்ட்டுக்குக் கூட்டிக் கொண்டு போய் “யுவர் ஆனர்” என்றெல்லாம் சொல்ல வைத்து ஒரு 3500 ஷில்லிங்  ஃபைன் கட்ட வைத்துத்தான் விட்டார்கள்.

சொல்லக் கூடாது – Touch Wood, அதற்குப் பிறகு எனக்கு அந்த போலிஸ் கனவு வருவது கிடையாது. 

மனோதத்துவ ஆராய்ச்சியாளர் சிக்மன் ஃப்ராய்ட், கனவைப் பற்றிச் சொல்லும் போது, உங்கள் ஆழ் மனதில் புதைந்திருக்கும் சில விஷயங்களே உங்களுக்கு கனவு வடிவத்தில் வெளி வருகின்றன என்கிறார். அப்படிப் பார்த்தால் நம்ம ரத்தினமும், இந்த ஊர் போலிஸ்காரர்களும் எப்படி என் ஆழ் மனதில் புகுந்தார்கள் என்று தெரியவில்லை.

இப்ப நீங்கள் சொல்லுங்கள் நண்பர்களே, நான் எப்படி, “ கனவுகளே கனவுகளே காலமெல்லாம் வாரீரோ” என்று பாட முடியும்?

வெ.பாலமுரளி.

முள்றியின் டைரி 16:சில நினைவுகள் II :


நான் நேற்று “ Inner Engineering – Introductory Speech by Isha Foundation”  சென்றிருந்தேன். ஒரு நிமிடம் கண்ணை மூடி நீங்கள் எப்படிப் பட்டவர் என்று கண்டறிய முயற்சி பண்ணுங்கள் என்றார்கள். கண்ணை மூடியதுதான் தாமதம், டமாலென்று இரண்டு நிகழ்ச்சிகள் வந்து என் நினைவில் ஊசலாட ஆரம்பித்து விட்டன.  


நிகழ்ச்சி No: 1.  


என் அப்பா என்னைப் பற்றி அடிக்கும் காமெண்ட்.எங்கள் வீட்டில் நாங்கள் அண்ணன் தம்பி 3 பேர்.  No  அக்கா தங்கைஸ்.அதில் நானும் என் சின்ன அண்ணனும் சரியான 15 ( அதாங்க 7 ½ + 7 ½). எங்கள் குண நலன்களை ( ????)  விவரிக்க எங்க அப்பா அடிக்கடி ஒரு கதை சொல்வார். ஒரு வீட்டில் ஒரு பெற்றோருக்கு 3 பசங்க இருந்தார்களாம். தங்கள் பசங்க ரொம்ப அடாவடியாகவும், அட்டூழியம் பண்ணுகிறவர்களாகவும் இருப்பதாக எல்லோரிடமும் சொல்லி புலம்புவராம். அப்போது ஒரு நண்பர் “ அது எப்படி சார் 3 பசங்களும் மோசமாக இருக்க முடியும். அதில் ஒருத்தன் கூடவா நல்லவன் கிடையாது” என்று ஆச்சரியமாகக் கேட்டாராம். " இருக்கான் சார். வெளியே போய்ப் பாருங்க. எங்க வீட்டின் கூரை மேலே ஒரு பையன் தீ வைத்துக் கொண்டிருப்பான் பாருங்க. அவன்தான் உள்ளதிலேயே கொஞ்சம் நல்லவன்" என்றாராம். சொல்லி விட்டு, முரளி, நீ ரொம்ம்ம்ம்ம்ப நல்லவண்டா என்பார்.


நிகழ்ச்சி No: 2


போன டிசம்பரில், 5 வருடம் ரஷ்யாவில் என்னுடன் நெருங்கிப் பழகி என் அண்ணன் ஸ்தானத்தில் இருந்த என் நெருங்கிய நண்பர் ஒருவரைச் சந்தித்தேன். என்னுடன் என் மனைவியும் என் பெண்ணும் இருந்தனர். அவர் என் மனைவியை அப்போதுதான் முதல் முறையாக பார்க்கிறார். நீதான், அர்ச்சனாவாம்மா, முதலில் உன் கையைக் கொடு என்று சொல்லி விட்டு அவள் கையைப் பிடித்து ஒரு 5 நிமிடம் குலுக்கினார். என் மனைவிக்கோ ஒன்றும் புரியவில்லை. குழப்பத்துடன் “ நான் என்னங்க சாதித்து விட்டேன், என்னை எதற்கு இப்படிப் பாராட்டுகிறீர்கள்” என்றாள் தன்னடக்கத்துடன். ஏம்மா, இவனைக் கல்யாணம் பண்ணி Already 15 வருடம் குடும்பத்தை நடத்தி இருக்கிறாயே, அதுவே ஒரு பெரிய சாதனை இல்லையாம்மா என்றார் ( எனக்கு இப்படி பல்பு கொடுக்க ஒரு பெரிய கோஷ்டியே காத்துக் கொண்டிருக்கு).


Flash Back over…


கண் விழித்துப் பார்த்த எனக்கு மகாக் குழப்பம்- நான் நல்லவனா கெட்டவனா என்று.


நீங்க சொல்லுங்க மக்காஸ்  - நான் நல்லவனா கெட்டவனா? 


(சொந்தச் செலவுல சூன்யம் வெச்சுக்கிறது என்பது இதுதானோ?)



வெ.பாலமுரளி

Saturday 3 August 2013

முள்றியின் டைரி 15: சில நினைவுகள்......


கனவுகளே கனவுகளே காலமெல்லாம் வாரீரோ...
நினைவுகளே நினைவுகளே நின்று போக மாட்டீரோ ....
நிம்மதியைத் தாரீரோ....


என்று கண்ணதாசனின் ஒரு பாடல் உண்டு - உத்தமன் படத்தில். எனக்கு  அந்த வரிகளோடு உடன்பாடில்லை. என்னைப் பொறுத்த வரையில் எல்லா கனவுகளுமே சுகமாக இருப்பதுமில்லை, எல்லா நினைவுகளுமே சுமையாக இருப்பதுமில்லை. அது சரி...நம்மில் எத்தனை பேர் பழைய நினைவுகளை அடிக்கடி அசை போடுகின்றோம் ? என்னைக் கேட்டால் , நம்மில் பல பேர் நம் நினைவுகளையே  ரசிப்பதில்லை. ஏதோ ஒரு விரக்தி, ஒரு சலிப்பு... நம்ம என்னத்த கண்ணையா  போல...


எனக்கு மனச்சோர்வு ஏற்படும்போதெல்லாம் , சில இனிய ( அல்லது Interesting) நினைவுகளை நினைத்துப் பார்க்க ஆரம்பித்து  விடுவேன். சில நிமிடத்துக்குள்ளேயே மனசு உற்சாகமடைந்து விடும். அதிலும், சில இடங்களுடன்  சில பாடல்களும் அல்லது சில இடங்களுடன்  சில நினைவுகளும் கை கோர்த்து வரும் பாருங்கள். சுகமாக இருக்கும்.  அந்த மாதிரி சில இனிய நினைவுகளை உங்களுடன் பகிர்ந்து கொள்ளவே இந்த டைரி.


1985 ம் வருடம் நண்பர்களுடன் வைகை அணைக்கு சென்றிருந்தேன். சூரிய அஸ்தமனத்தை புகைப்படம் எடுக்க நான் மட்டும் மேலேயே நிற்க, என்னுடன் வந்த அனைவரும் கீழே சென்று விட்டார்கள். தனிமை என்றால் அப்ப்ப்ப்ப்ப்ப்படி  ஒரு தனிமை. அப்போதுதான் இதயக்கோயில் படம் வந்த புதிது. அதில் வரும் "வானுயர்ந்த சோலையிலே" பாடலை கீழே ஒரு ஸ்பீக்கர்  செட்டில் போட, நான்  என்னை மறந்து கேட்டுக் கொண்டிருந்தேன். நான் மட்டுமே அணையின் மேலே நின்றிருந்தேன். மிகச் சரியாக சூரியனும் அதே நேரத்தில் மறைய....Believe me...Just an amazing experience. அதில் இருந்து எப்போது நான் அந்தப் பாட்டைக் கேட்டாலும் என் மனசு இறக்கை கட்டி வைகை அணைக்குப் பறந்து விடும் - என் கேமராவுடன்.


2005 என்று ஞாபகம். எஸ். ராமகிருஷ்ணனின் "தேசாந்திரி" படித்து விட்டு கங்கை கொண்ட சோழபுரம் செல்ல முடிவெடுத்தேன். போறதுதான் போறோம், ஒரு வித்தியாசமான முறையில் போவோமே  என்று முடிவெடுத்தேன்.


கையில் கொஞ்சூண்டு பணம் மட்டும் எடுத்துக் கொண்டு என் கேமரா மற்றும் Tripod  சகிதம் கிளம்பிவிட்டேன். எந்தக் காரணம் கொண்டும் காரில் செல்வதோ, நல்ல ஒரு ஹோட்டலில் தங்குவதோ ,  பெரிய உணவகங்களில் சாப்பிடுவதோ கூடாது என்று முடிவெடுத்தேன். ஒரு Typical நாடோடி போல சென்று வருவதே என் பயணத்தின்  நோக்கம். 


அங்கு செல்வதற்கு முதல் நாள் வரை கங்கை கொண்ட சோழபுரம் எங்கு இருக்கிறது என்று ஐடியாவே இல்லை. என் சகோதரி Dr அகிலாவின்  உதவியால், மதுரையில் இருந்து திருச்சி சென்று, திருச்சியில் இருந்து ஜெயங்கொண்டம் போய் அங்கிருந்து சிதம்பரம் பஸ்ஸில் ஏறினால் க.கொ. சோ. புரம் போய் விடலாம் என்று தெரிந்து கொண்டேன். மதுரையில் பஸ்ஸில் ஏறிய முதலே நல்ல மழை. காலை 7 மணிக்கு கிளம்பிய நான், க.கொ.சோ.புரம் பொய் இறங்கிய போது மணி மதியம் 4. சிலு சிலுவென்று மழை தூறிக் கொண்டிருந்தது.  கோயிலுக்கு  எதிரில்  4 டீக்கடைகள் மட்டுமே  இருந்தன. க.கொ.சோ.புரம் கிராமம் 4 கி.மீ. தள்ளி உள்ளே இருக்கிறது.  எனக்கோ செம பசி.. அதில் ஒரு கடையில்  ஏறி சாப்பிட எதாவது உள்ளதா என்றேன். அவர் கடையில் இது போல யாருமே கேட்டது இல்லை போலிருக்கிறது. என்னை ஒரு மாதிரி வித்தியாசமாக பார்த்து விட்டு டீ, காப்பி மட்டும்தான் சார் இருக்கு என்றார். நான் ரொம்ப சோர்வாக , சரி ஒரு டீ போடுங்கள் என்றேன். அவருக்கு என்ன தோன்றியதோ , சார்,  வீட்டில் எங்களுக்காக பண்ணிய லெமன் ரைஸ் இருக்கு சாபிடுவீர்களா  என்றார். என் கண்ணில் 1000 வாட்ஸ் பல்பின் வெளிச்சம். சரி என்றேன். அந்த மழை நேரத்தில், அந்தக் காட்டுக் கோயிலைப் பார்த்துக் கொண்டே , அந்த சிறிய டீக்கடையில் லெமன் ரைஸ் சாப்பிட்ட அனுபவம் இருக்கிறதே,ஆஹா.... அது எந்த ஒரு  5 நட்சத்திர ஹோட்டலிலும் கிடைக்காத ஒரு சுகானுபவம். 


அன்று சும்மா சுற்றி  மட்டும் பார்த்து விட்டு களைப்பின் மிகுதியால், அருகில் இருந்த ஜெயங்கொண்டம் கிளம்பி விட்டேன். அங்கும் சரியான மழை. அங்கிருந்த ஒரு ஆட்டோக்காரரிடம் தங்குவதற்கு ஏதேனும் ஹோட்டல் இருக்கிறதா என விசாரித்தேன். அவர் ஒரு லாட்ஜின் பெயரைச் சொல்லி ( கிருஷ்ணவேணி என்று ஞாபகம்) அந்த லாட்ஜ்தான்  சார் இந்த ஊரிலேயே சூப்பராக இருக்கும் என்றார். அந்த அடை மழையில் எனக்கு பெரிதாக சாய்ஸ் ஒன்றும் இருப்பதாகத் தோன்றவில்லை. சரி என்று அந்த லாட்ஜூக்கே  சென்றேன்.  பாடாவதி என்றால் அதரப் பாடாவதி (இதற்குத்தான் ஆசைப்பட்டாயா பாலமுரளி?). சரி...நம் பயணத்தின் நோக்கமே அதுதானே என்று பொறுத்துக் கொண்டு அங்கிருந்த  ஒருவரிடம் போய் ஒரு ரூம் கிடைக்குமா என்றேன். எப்படிப்பட்ட ரூம் வேண்டும்? ஆர்டினரியா, டீலக்ஸா இல்லை சூப்பர் டீலக்ஸா என்றார். நான் ஒரு நிமிடம் ஆடிப் போய் விட்டேன்.


என்னங்க வித்தியாசம் என்றேன் அப்பாவியாக. ஆர்டினரி என்றால் ஸ்டீல் கட்டிலும் ஃபேனும்  மட்டும் இருக்கும் (அதில் ஸ்டீல் கட்டில் என்று சொல்லும்போது அவர் மூஞ்சியில் அப்படி ஒரு பெருமிதம். எல்லாம் நேரம்லேய்  என்று நினைத்துக் கொண்டேன்) , டீலக்ஸில் கொசுவர்த்திச் சுருளும் குளிப்பதற்கு வென்னீரும் வைத்துக் கொடுப்போம் என்றார். என்னால் ஆவலை அடக்க முடியாமல், அப்ப சூப்பர் டீலக்ஸ்? என்றேன். சூப்பர் டீலக்ஸில் டிவி யும்  இருக்கும் என்றார். அடக் கெரகமே என்று நினைத்துக் கொண்டு , சரி சூப்பர் டீலக்ஸே கொடுங்கள் என்றேன். கொஞ்சம் காஸ்ட்லியாக இருக்கும் பரவாயில்லையா என்றார் ( என்னை விட மாட்டாய்ங்கெ போலிருக்கே). எவ்வளவு என்றேன். நூத்தி நாற்பது ரூபாய் ஆகும் பரவாயில்லையா என்றார் ( நான் இருந்த கோலத்திற்கு , இவனால் 140 ரூபாயெல்லாம் கொடுக்க முடியாது என்று அவருக்கு தோணியிருக்க வேண்டும்). அதுசரி..சூப்பர் டீலக்ஸ் 140 என்றால் மத்த ரூமெல்லாம்   எவ்வளவு என்றேன். 100 மற்றும் 120 என்றார். (இனி  அந்த லாட்ஜின்  தரத்தை உங்களின் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்)....இந்த லட்சணத்தில் ரூம் சர்வீஸ் வேறு...அவ்வப்போது வந்து டீ வேண்டுமா காப்பி வேண்டுமா என்று. என் வாழ்க்கையில் அந்த இரவை மறக்கவே முடியாது.....அதிலிருந்து எப்போது மழை பெய்தாலும் எனக்கு கங்கை கொண்ட சோழபுரம், அங்கு சாப்பிட்ட லெமன் ரைஸ், கிருஷ்ணவேணி லாட்ஜ் மூன்றும் ஞாபகத்திற்கு  வந்து விடும்.


அதேபோல் 2012 டிசம்பரில் திரும்ப ஒரு முறை க.கொ.சோ.புரம் சென்றிருந்தேன். இந்த முறை குடும்பத்தோடு. அன்று இரவு அபிஷேகத்திற்குச் சொல்லியிருந்தோம். நம் முதல்வர்(களின்) புண்ணியத்தால் கரண்ட்டும் இல்லை. அவ்வளவு பிரமாண்டமான கோயிலில் நாங்கள் மொத்தமே 8 பேர்தான் ( நாங்கள் 4 பேர் + 2 குருக்கள் + 2 வாத்தியக்காரர்கள் - நாதஸ்வரம் + மேளம்). மிகக் குறைவான வெளிச்சத்தில் அந்தப் பிரமாண்டமான லிங்கத்திற்கு அபிஷேகம் நடக்க, வாத்தியக்காரர்கள் " ஆயிரம் கண் போதாது வண்ணக் கிளியே ..." பாடலை நாதஸ்வரத்தில் வாசிக்க , அது அந்தக் கோயிலின் எல்லா திசையிலும் எதிரொலித்து ஒரு ஸ்பெஷல் எஃபெக்ட் கொடுத்தது பாருங்கள் ....செம த்ரில்லிங். இந்தியாவில் இருந்த மிச்ச சொச்ச  நாட்களில் ஒவ்வொரு முறை கரண்ட் போகும்போதும், எனக்கு க.கொ.சோ.புரத்தில் பார்த்த அபிஷேகமும் , ஆயிரம் கண் போதாது வண்ணக் கிளியே பாட்டும் ஞாபகத்துக்கு வந்து விடும்.


அதேபோல் என்னுடைய முதல் சென்னை விசிட். 1983 - இல் 10 -ம் வகுப்பு பொதுத் தேர்வு முடிந்து 2 மாத விடுமுறையில் இருந்தேன். என் அப்பாவிடம்  சண்டை போட்டு சென்னையில் இருக்கும் என் மாமா வீட்டிற்குச்  செல்ல அனுமதி வாங்கி விட்டேன்.முதல் முறையாக கடல் கடந்து ( ????????!!!!!!!!!) சென்னை செல்லப் போகிறோம் என்று ஒரே பர பரப்பு. என்னை விட என் அப்பாவிற்கு பயங்கர டென்ஷன். பையனை எப்படி தனியே அனுப்புவது என்று. நான் சென்ற பஸ்ஸில் தன் நண்பர் ஒருவரைப் பிடித்து விட்டார். என் அப்பாவின் முகத்தில் அப்படி ஒரு சந்தோசம். யோவ் கிருஷ்ணா, என் பையன் இப்போதான்யா  முதன் முதலாக மெட்ராஸ்  போகிறான். பார்த்துக்கய்யா. ...காலையில் எக்மோரில் வந்து இவன் மாமா இவனை அழைத்துக் கொண்டு போய் விடுவார் என்றார். கவலையே  படாதீங்க  சார். இவன் மாமா வரும்வரை நான் இவன் கூடவே இருந்து பார்த்துக் கொள்கிறேன் என்று அவர் 10 முறை Assurity கொடுத்த பிறகே என் அப்பா அந்த இடத்தை விட்டு நகன்றார். நான் ஏகப்பட்ட கனவுகளுடன் கொஞ்சம் கூட துங்காமல் கொட்ட கொட்ட முழித்துக் கொண்டே பயணம் செய்தேன். கிட்டத்தட்ட 4 மணியளவில் எக்மோரில் ரயில்வே ஸ்டேஷனுக்கு எதிரில் வந்து இறங்கினோம்.  


அது ரயில்வே ஸ்டேஷன் என்று தெரியாமல் ரொம்ப ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். அது என்ன கட்டிடம் என்று அவரிடம் கேட்க ஆசை. ஆனாலும் எதோ ஒரு கூச்சம் வந்து தடுத்தது. பொறுத்துப் பொறுத்துப் பார்த்து " அண்ணே அது என்ன கட்டடம்ணே " என்றேன். அவர் ஒரு நிமிடம் யோசிப்பது போலத்  தெரிந்தது. பிறகு நிமிர்ந்து ஒரு முறை அந்தக் கட்டடத்தைப் பார்த்து விட்டு இதுதான் கவர்னர் பில்டிங் என்றார். எனக்கோ சந்தோஷத்தில் தலைகால் புரியவில்லை. பின்னே ...வந்து இறங்கிய சில நிமிடத்துக்குள்ளேயே கவர்னர் பில்டிங்கைப் பார்ப்பதென்றால் சும்மாவா. இருந்தாலும் ஒரு சந்தேகம் " ஏண்ணே, இந்த அதிகாலையிலேயே  இவ்வளவு மக்கள் உள்ளே போய்க்கொண்டும் வந்து கொண்டும் இருக்கிறார்கள்" என்றேன் அப்பாவியாக. அவர் சத்தியமாக அந்தக் கேள்வியை ரசிக்கவில்லை என்பது அவர் முகத்திலேயே தெரிந்தது. அவர் சற்று எரிச்சலுடன் " பின்ன ....கவர்னர்னா என்ன சாதாரணமான ஆளா  " என்றார். நானும் அவர் சொல்வது கரெக்ட்தானே என்று  சமாதானமாகி விட்டேன். அப்போதுதான் நான் தற்செயலாக நிமிர்ந்து அந்த கட்டடத்தின் மேலே மாட்டியிருந்த விளம்பரப்  பலகையைக் கவனித்தேன். " கவ்னர் பீடிகள்" என்று போட்டிருந்தது. சட்டென்று பொறி தட்டியது. "கவ்னர் பீடிகள்" பலகையைப் பார்த்து விட்டுத்தான் தலைவர் கவர்னர் பில்டிங் என்று என்னிடம் கதை விட்டிருக்கிறார் என்று புரிந்தது. அதையும் அவரிடமே கேட்டு விட்டேன். உடனே அவர் சுதாரித்துக் கொண்டு " ஹி...ஹி...ஹி...நானும் மெட்ராசுக்கு இப்போதுதான் முதல் முறையாக வருகிறேன்" என்றார். அதிலிருந்து நான் எப்போது சென்னைக்குப் போனாலும் கவர்னர் பில்டிங்கை  நினைக்காமல் இருந்ததில்லை.  


நான் ஜெர்மனி செல்லும் ஒவ்வொரு முறையும் ஹிட்லரின்  Cencentration Camp  சென்று வர வேண்டும் என நினைப்பேன். ஆனால் எதாவது ஒரு வேலை வந்து முடியாமல் போய் விடும். சென்ற  வருடம் ஏப்ரலில் ஒரு வாய்ப்பு வந்தது. இந்த முறை விட்டு விடக் கூடாது என்று முன்னாலேயே பிளான் பண்ணி அதற்கேற்றார்போல டிக்கெட்டும் புக் பண்ணி விட்டு கிளம்பினேன். நான் தங்கியிருந்தது கொலோன்  என்னும் நகரில். Concentration Camp  இருந்தது Buchenwald என்னும் ஊரில். அதை ப்யூஹன் வால்ட் என்றுதான்  உச்சரிக்கிறார்கள். கிட்டத்தட்ட 8 மணி நேரப் பயணம், ட்ரெயின் , பஸ் , கார் என்று மாறி மாறிப் பயணம் செல்ல வேண்டியிருந்தது. நான் அங்கு போய் இறங்கும்போது  மதியம் 2 மணியாகி விட்டது. குளிர் காற்றோடு தூறல் வேறு போட்டுக் கொண்டிருந்தது. ப்யூஹன் வால்ட் ஒரு மிக பிரமாண்டமான சிறைச்சாலை. இங்கு வைத்து ஏராளமான யூதர்களை சித்திரவதை செய்ததோடு, விஷ வாயு அறைகளில் ( Gas Chambers) வைத்து ஏராளமானோரை படுகொலையும்  செய்திருக்கிறார்கள். இதை ஹிட்லரே நேரில் வந்து அடிக்கடி பார்வையிடுவதும் உண்டு. அதில் பெரும்பாலான இடங்களை எந்த மாறுதலும் செய்யாமல் அப்படியே வைத்திருக்கிறார்கள். அப்போது நடந்த நிகழ்ச்சிகளின் புகைப்படங்களை காட்சிக்கு வைத்திருக்கிறார்கள்.   ஒரு நல்ல புகைப்பட  கலைஞனுக்கு அழகு அவன் எடுக்கும் இடங்களோடு அல்லது மக்களோடு  Detached ஆக இருப்பது. நான் ஒரு நல்ல புகைப்பட கலைஞனில்லை என்பது திரும்ப ஒரு முறை அங்கு  நிரூபணமாகியது.  அங்குள்ள குறுகலான அறைகளையும்,  விஷ வாயு அறைகளையும் புகைப்படம் எடுப்பதற்காக Tripod ஐ செட் பண்ணி விட்டு புகைப்படம் எடுக்க முடியாமல் திணறினேன். அங்கு நடந்திருந்த நிகழ்ச்சிகள் முகத்தில் அறைவது போல இருந்தன. அங்கு நின்றிருந்த வெள்ளைக்காரர் ஒருவர் என் நிலையைப் பார்த்து விட்டு என் முதுகில் ஆதரவாகத்  தடவிச் சென்றார். அதன் பிறகே நான் என் நிலை உணர்ந்து  சில படங்கள் மட்டும் எடுத்து விட்டு வெளியேறினேன். நான் கொலோன்   திரும்பும்போது நடு இரவு 2 ஆகி விட்டது. அதிலிருந்து நான் கலைஞர் டி.வி. யில்  சரித்திரம் தொடர் பார்க்கும்போதெல்லாம் என் மனம் ப்யூஹன்வால்ட் பறந்துவிடும்.


இது போன்ற ஏராளமான நிகழ்ச்சிகள் என் வாழ்வில். அதற்காக எனக்குப் பிரச்சினைகளே இல்லை என்று அர்த்தமில்லை. எனக்கும் 1008 தலைவலிகள் உண்டு. ஆனால் அது வேறு இது வேறு என்று பிரித்து விடுவேன். 


கண்ணதாசனின் கதை ஒன்று உண்டு. கானகத்தில் புலிக்குப் பயந்து ஓடிய ஒருவன் ஒரு பாழுங்கிணற்றில் விழுந்து விட்டான். கீழே விழுவதற்குள் அங்கு தொங்கிக் கொண்டிருந்த ஒரு விழுதினைப் பற்றிக் கொண்டான். மேலே புலி அவனுக்காக காத்துக் கொண்டிருந்தது கீழேயோ விஷ நாகங்கள் நெளிந்து கொண்டிருந்தன. பத்தாததற்கு அவன் பிடித்திருந்த விழுதை வேறு ஒரு எலி கருமிக் கொண்டிருந்தது. அப்போது அங்கிருந்த மரத்தில் இருந்த தேன் அடை ஒன்று உடைந்து அங்கிருந்த தேன் அவன் வாயில் வந்து விழுந்ததாம். அப்போது அவன் சொன்னானாம் “ ஆகா..தேன் என்ன சுவை” என்று. எப்பேற்பட்ட உண்மை.... என்னதான் பிரச்சினை என்றாலும் தேன் என்ன கசக்கவா செய்யும்?   


நம் வாழ்வில் நடக்கும் சின்ன சின்ன நிகழ்ச்சிகளையும் ரசிப்பதுதானே வாழ்க்கை, இல்லையா?


நண்பர்களே...இப்போது ஒரு சின்ன Request. எனக்காக ஒரு ஐந்தே ஐந்து நிமிடம் கண்ணை மூடி யோசித்துப் பாருங்கள். நீங்களே அதிசயப்படும் அளவிற்கு உங்கள் வாழ்வில் அவ்வளவு இனிமையான  சம்பவங்கள் நடந்திருக்கும் – I bet.அதை அடிக்கடி நினைவு கூர்ந்து சந்தோஷப் படுங்கள்....வாழ்வு இனிக்கும்.


வெ. பாலமுரளி.


பி.கு: தான் உயிரோடு இருக்கும் வரை என் எழுத்திற்கு முதல் ரசிகையாயிருந்து என்னை ஊக்குவித்த என் அம்மாவிற்கு இந்த டைரிக் குறிப்பை காணிக்கையாக்குகிறேன்.