Thursday 1 December 2011

முள்றியின் டைரி - 11 ஐயோ பாவம் யாரு பெத்த புள்ளயோ……

எனக்கு கடந்த 2 மாதமாக ஒரு வினோதமான உபாதைங்க. கண்ணு பயங்கரமாக பொங்கி பொங்கிக் கண்ணீராகக் கொட்டித்தள்ளுகிறது.உடம்பு ஹீட்டாகி இருக்கிறதுக்கும் சான்ஸ் இல்லை. ஏனென்றால், நான் குளிர்காலத்தில் கூட தினமும் குளிர்ந்த தண்ணீரில் தலைக்கு குளிக்கும் கோஷ்டி….வேற எப்படி??? தெரியலை.

ஆஃபிஸில் எனக்குத் தனி கேபின். So, பகல் நேரத்தில் மனசு விட்டு அழுது கொட்டி ஈஸியாக சமாளித்து விடுவேன். எப்போ பிரச்சினைன்னு கேட்டிங்கன்னா - Evening வாக்கிங் போகும்போதுதான். மாலை 6 மணிக்கு Ramco Court- இல் உள்ள அனைத்துத் தாய்குலங்களும் கம்பாக வாக்கிங் போவார்கள் ( இப்படி மாங்கு மாங்குனு நடக்குறதுக்குப் பதிலாக பகலில் வேலைக்காரிகளை நிறுத்தி விட்டு ஒழுங்காக வீட்டில் வேலையைப் பார்க்கலாம்ல? சொல்லிட்டு யாரு தப்பிக்கிறது?).

நமக்கோ Prestige Issue. அவர்களுக்கு முன்னால எப்படி கண்ணீரும் கம்பலையுமாக நடப்பது….ராமன் கண் பார்க்க சீதையோ மண் பார்த்தாள்னு கம்பர் சொன்னது போல நான் பாட்டுக்கு ஒரு MP3 – யைக் காதில் மாட்டிக் கொண்டு குனிந்த தலை நிமிராமல் கையில் ஒரு கர்ச்சீப்பை வைத்துக் கொண்டு அவர்களை Cross செய்து விடுவேன் ( அது சரி…இதுக்கு ஏண்டா கம்பனை இழுக்குற? உனக்கே கொஞ்சம் ஓவராகத் தெரியல?). அவர்கள் யாரும் பார்க்காத சமயத்தில் கர்ச்சீப்பை வைத்து கண்ணைத் துடைத்து விட்டு வாக்கிங்கை Continue பண்ணுவது வழக்கமாகி விட்டது (சில சமயம் இரண்டு கர்ச்சீப் வைத்துக் கொள்வதும் உண்டு. அவ்வளவு கண்ணீருங்க).

என்னுடைய இந்த சங்கடத்தை இதுவரை யாரும் பார்த்ததில்லை (ம்க்கும்…நேற்று வரை அப்படித்தான் நினைத்துக் கொண்டிருந்தேன்).நேற்று சாயாந்திரம் பாருங்க, வழக்கம் போல என்னுடைய நாடகத்தை நடத்திக் கொண்டு நான் பாட்டுக்குப் போய்க் கொண்டிருந்தேன். MP3 வேறு வேலை செய்யவில்லை. ஒரு வயசான தமிழ்க்கார அம்மாங்க…அப்பத்தான் முதல் தடவைப் பார்க்கிறேன். ஆனா அவங்க நைரோபி வந்து 2 மாதம் ஆச்சாம் ( கடந்த 2 மாதமாக நான் யார் முகத்தைப் பார்த்தேன்…????). பக்கத்தில் இருந்த ஒரு பெரியவரிடம் ரொம்ப - ரொம்பன்னா ரொம்ப ரொம்ப ரகசியமாக சொல்லிக்கொண்டிருந்தது (ஆனா நமக்குத்தான் பாம்புக் காதாச்சே) " நான் சொன்னேன்ல, அது இந்தப் பையன்தான். பாவம் , யாரு பெத்த புள்ளையோ. டெய்லி பார்க்கிறேன். குமுறி குமுறி அழுதுகிட்டே நடக்குது”.

கடன் பட்டார் நெஞ்சம் போல கலங்கினான் இலங்கை வேந்தன்னு கம்பன் சொன்னது போல நானும் கலங்கி விட்டேன் ( எலேய், திரும்ப திரும்ப ஏண்டா கம்பனை வம்புக்கு இழுக்குறே?). நான் கலங்கியது இரண்டு விஷயத்துக்காக.
1.       குமுறி, குமுறியா?
2.       “நான் சொன்னேன்ல” என்றால் என்ன அர்த்தம்? இந்த அம்மா ரொம்ப நாளா நம்ம சோகத்தைக் கவனிக்குது போல.

ஆக மொத்தம்....நம்ம கதை ஊருக்கே தெரிஞ்சிருக்குது.
நாளைக்கு முதல் காரியமாக போய் கண் டாக்டரைப்  பார்க்கணும்.

வெ.பாலமுரளி.

முள்றியின் டைரி 10 - இது நம்பிக்கையா, மூட நம்பிக்கையா இல்லை குருட்டு நம்பிக்கையா?

நான் என் தொழிற்சாலைக்கு ஒரு Store Keeper – ஐத் தேடிக்கொண்டிருந்தேன் (தொழிற்சாலை என்ன வெங்காயத் தொழிற்சாலை.  50 பேர் பணி புரியும் ஒரு எவர் சில்வர் பட்டறை). நான் மணல் கயிறு S.Ve. சேகர் போல எட்டு கண்டிஷனெல்லாம் போடவில்லை. மூணே மூணுதான் போட்டேன். Basic Accounting &, Computer Knowledge மற்றும் கற்றுக்கொள்ள வேண்டுமென்ற நெர்ர்ர்ர்ர்ர்ர்ர்றைய ஆர்வம். அவ்வளவுதான் (ம்க்கும்….இது போதாதாக்கும்?).

என்னுடன் வேலை செய்யும் ஒரு பொறியாளன் தன்னுடைய நண்பன் கடந்த 2 வருடங்களாக வேலை இல்லாமல் சிரமப்படுவதாகவும் அவனுக்கு திருமணமாகி குழந்தைகள் இருப்பதாகவும் கூறினான். “திருமணமாகி அந்த மனைவி” மூலமாகக் குழந்தைகள் இருக்கிறதா” என்று நம்ப முடியாமல் கேட்டேன் ( Yes. ஆப்பிரிக்காவில் குழந்தை பெற்றுக் கொள்வது பெரிய விஷயமில்லை. ஆனால் “திருமணம்” செய்து கொண்டு குழந்தைகள் பெற்றுக் கொள்வது அசாதாரண விஷயம்). என் கேள்வியைப் புரிந்து கொண்ட என் பொறியாளன் தன் நண்பன் ஒரு நல்ல குடும்பஸ்தன் என்றும் ரொம்பப் பொறுப்பானவன் என்றும் சான்றிதழ் கொடுத்தான். இரண்டுமே இங்கு பெரிய விஷயம் என்பதால் அவனை உடனே Interview- விற்கு வரச் சொன்னேன்.

அவனும் வந்தான். சிறிது நேரம் பேசினோம்.  நான் எதிர்பார்த்த எல்லா விஷயமும் அவனிடம் இருந்ததாகத் தோன்றியது. சினிமா படங்களில் வரும் MD போல (ம்க்கும்….அது வேறயா?) குரலை வைத்துக் கொண்டு You are appointed Gentle Man என்று சொல்லி விட்டு அவன் முகத்தில் சந்தோஷ ரேகையைத் தேடினேன்.

அவன் மிகவும்  Casual –ஆக, Sir, நான் உங்கள் கம்பெனியில் சேர வேண்டுமென்றால் ஒரு கண்டிஷன் என்றான். “இதென்ன கலாட்டா” என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு, சொல் என்றேன். நான் மிகவும் மதப் பற்றுள்ளவன் என்றான். Good என்றேன். எங்கள் சர்ச்சில் உள்ள சர்வீஸ் கமிட்டியில் நான்தான் Leader என்றான். Very good என்றேன். எந்த ஒரு சனிக் கிழமையும் என்னால் கடவுளைப் பிரார்த்திக்காமல் இருக்க முடியாது என்றான். நான் கண்கள் கலங்கி உணர்ச்சிவசப்பட்டு சனிக்கிழமை பிரார்த்தனைதானே, நன்றாகப் பிரார்த்தியப்பா. எனக்கும் சேர்த்து வேண்டிக்கொள் என்றேன். இதில் என்ன பிரச்சினை என்றேன். அவன் உடனே லலிதா ஜூவல்லரி விளம்பரத்தில் வரும் பிரகாஷ்ராஜ் போல அதுதான் விஷயம் அதில்தான் விஷயம் என்றான். அவனைக் குழப்பத்தோடு பார்த்தேன். சனிக்கிழமை நான் காலை 8 மணிக்கெல்லாம் சர்ச்சுக்குப் போய்விடுவேன் என்றான். நான் பரிதாபமாக அப்போ வேலை….. என்று இழுத்தேன்.

நான் சனிக்கிழமை வேலைக்கு வரமுடியாது. நீங்கள்தான் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றான். எனக்கு தேவர் மகன் கமல் சொன்னது போல உள்ளே இருக்கும் மிருகம் லேசாக எட்டிப் பார்த்தது. ஏம்பா கடவுளுக்குச் சமமாக கடமையும் முக்கியமில்லையாப்பா என்று சொல்லி விட்டு நம்ம “கொக்கென நினைத்தாயா கொங்கனவா” கதையை எனக்குத் தெரிந்த ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துக் கூறினேன். அவனுக்கு என்ன புரிந்ததோ….சாரி சார் எனக்கு சர்ச் ரொம்ப முக்கியம் என்றான் (ஒரு வேளை நம்ம கதையைக் கேட்டு பயந்து விட்டானோ?).

நான் முகத்தைக் கடுமையாக வைத்துக் கொண்டு, ஒருவேளை நான் உன் கண்டிஷனுக்கு ஒத்துக் கொள்ளவில்லையென்றால் என்ன செய்வாய் என்றேன். அவன் சிறிதும் அசராமல் உங்கள் வேலையே வேண்டாமென்று போய்விடுவேன் என்கிறான். நான் பொறுமையிழந்து, எலேய் கடவுள் பெயரைச் சொல்லி நீ வேண்டுமானாலும் பசியோடு இருக்க உனக்கு உரிமை இருக்கலாம். ஆனால் அந்த கடவுள் பெயரைச் சொல்லிக் கொண்டு உன் மனைவியையும் குழந்தைகளையும் பட்டினி போட யாரடா உனக்கு அந்த உரிமையைத்தந்தது மானிடப் பதரே என்றேன் மனோகரா கண்ணாம்பாள் ஸ்டைலில்(நெஜ்ம்மாகவே டென்ஷன் ஆயிருச்சுங்க).

அவன் கொஞ்சம் கூட அசராமல் உங்களுக்குக் கூட (?????????) தெரிந்த இந்த அல்ப விஷயம் ஜீசஸுக்குத் தெரியாதா…..அவர் பார்த்துக் கொள்வார் என்று சொல்லி விட்டு என் கையை குலுக்கி விட்டுப் போய் விட்டான்.
அன்று இரவு எனக்குக் கொஞ்சம் கூடத் தூக்கம் வரவில்லை. நல்ல ஒரு  Candidate –ஐ விட்டு விடோமே என்பதற்காக அல்ல. மஜா படத்தில் விக்ரம் பேசுவதாக ஒரு வசனம் வரும் “இது என்ன ஜென்மம்டா” என்று- அதை நினைத்து.

நண்பர்களே….இப்போது இந்தக் கதையின் தலைப்பை மீண்டும் ஒரு முறை படித்துப் பார்த்து விட்டு எனக்கு உங்கள் பதிலைச் சொல்லுங்கள்.

வெ.பாலமுரளி.

முள்றியின் டைரி 9 - எங்கே போகணும்னு தெளிவாச் சொல்லு மூதேவி

1989 - ம் வருடம். நான் ரஷ்யாவில் படித்துக் கொண்டிருந்தேன். என் அப்பா இறந்து 6 மாதமாகி இருந்தது. என் அம்மாவும் சின்ன அண்ணனும் காரைக்குடியில் தங்கியிருந்தார்கள்.

அப்போது என் அண்ணனிடம் இருந்து ஒரு கடிதம். கடிதம் வேண்டாம், லெட்டர்னு வெச்சுக்கலாமா? வேண்டாம், கடிதமே இருக்கட்டும் (அடச்சீ….விஷயத்துக்கு வா).

கடிதத்தின் சாராம்சம் இதுதான். " எனக்கு அரசாங்கத்தில் வேலை கிடைத்து விட்டதால் காரைக்குடியை காலி பண்ணி விட்டு நானும் அம்மாவும் சிவகங்கை செல்கிறோம். அடுத்த முறை நீ இந்தியா வரும்போது நேரே சிவகங்கை வந்து விடு. ----------------இதுதான் அட்ரஸ்". எனக்குக் கடிதத்தைப் பார்த்தவுடன் இரண்டு காரணங்களால் டென்ஜனோ டென்ஜன். ஒன்று, காரைக்குடி, தேவகோட்டையைத் தவிர வேறு எந்த ஊரிலும் குடியிருப்பதை நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை. இரண்டாவது, சிவகங்கை எங்கேயிருக்கிறது? அப்போதெல்லாம் எனக்கு பூளோகம் அவ்வளவாகத் தெரியாது. (இப்ப ரொம்பத் தெரியுமாக்கும் என்று கேட்க வேண்டாம். ஏன்னா இப்பவும் தெரியாது. ஹி..ஹி…ஹி..).

விரைவிலேயே எனக்கு இந்தியா செல்லும் வாய்ப்பு வந்தது. எப்படியோ சிவகங்கையும் போய் சேர்ந்து விட்டேன். சிவகங்கை, கிராமமும் இல்லாமல் டவுனும் இல்லாமல் சுஜாதா சொல்வது போல ஒரு மாதிரி கேணத்தனமாக இருந்தது. வீட்டில் டி.வி. இருந்தது. ஆனால், மேலே இருந்த ஆண்டெனாவை திருப்பித் திருப்பி ரூபவாஹினியைத் தேடும் விளையாட்டு ஏனோ எனக்குப் பிடிக்கவில்லை. So, எனக்கு சிவகங்கை ஓரிரு நாளிலேயே பிடிக்காமல் போனதில் ஆச்சரியம் ஏதும் இருக்கவில்லை. நான் பட்ட பாடைப் பார்த்து விட்டு என் அண்ணன் ( எம்.ஜி.ஆர் நடித்த படமில்லைங்க. My Brother) என்னை அவன் அலுவலகத்திற்கு அழைத்துப் போனான்.

அரசாங்க அலுவலகம் என்றவுடன் எல்லாம் பெரிசுகளாக இருக்கும் என்று நினைத்துச் சென்ற எனக்கு ஆச்சரியம். கிட்டத்தட்ட எல்லோருமே என் அண்ணன் வயதிலேயே இருந்தார்கள். எல்லோருக்கும் என்னை அறிமுகப்படுத்தினான்.  கை குலுக்க கை நீட்டிய என்னை ஒரு மாதிரி ஆச்சர்யமாகப் பார்த்தார்கள் (கும்பிடணுமோ?). “தம்பி என்ன பண்றான்?” ( டேய்... கொஞ்சம் மரியாதை கொடுங்கடா). இந்தக் கேள்வியை எப்படா கேட்பார்கள் என்று எதிர்பார்த்த மாதிரி இருந்த என் அண்ணன், உடனே, இவன் ரஷ்யாவில் Mechanical Engineeringபடிக்கிறான் என்றான் பெருமையாக. அவர்கள் யாரும் அதை ஒரு பொருட்டாகவே எடுத்த மாதிரி தெரியவில்லை. அங்கெல்லாம் என்ன பேசுவார்கள், தமிழ்தானா இல்ல ஹிந்தியா என்றது ஒரு பிரகஸ்பதி. நான் வெறுத்துப் போய் தெலுங்கும் கன்னடமும் மிக்ஸ் பண்ணி ஒரு மாதிரி பேசுவார்கள் என்றேன். அப்படியா, நமஸ்காரண்டி , பாகுன்னாரா.....எனக்கும் தெலுங்கு தெரியுமே,ஹி...ஹி...என்றது
(ஓட்டுராய்ங்கெளோ?).

எனக்கு அந்த இடம் ரொம்ப அந்நியமாகவும் Uneasy – யாகவும் இருந்த்து. சரி, மகேஷ் நான் கெளம்புறேன் என்றேன். சரி எப்படிப் போவ என்றான். என்னடா கேள்வி, நீதான் யாரையாவது அனுப்பி ட்ராப் பண்ணனும் என்றேன். அவன் சிரிக்காமல், இன்னும் என்னுடைய பைக்குக்கு டிரைவர் அப்பாய்ண்ட் பண்ணலையே என்றான் ( அய்யே...ஸோக்கு....). உடனே எல்லோரும் கெக்கே பிக்கே என்று சிரித்து என் எரிச்சலைக் கூட்டினார்கள். அப்ப எப்படிடா போவேன் என்றேன், என் பரிதாப வாய்ஸை காண்பித்துக் கொள்ளாமல். இந்தா நீயே ஓட்டிக் கொண்டு போய் விடு என்று அவன் பைக் சாவியைக் கொடுத்தான். நானா????? என்றேன் அதிர்ச்சியில். ஏன் உனக்கு பைக் ஓட்டத் தெரியாதா என்றது இன்னொரு பிரகஸ்பதி ( சனியன், எப்படிக் கண்டுபிடிச்சுச்சுனு தெரியல). என் அண்ணனுக்கு அந்தக் கேள்வி மானப் பிரச்சினையாகப் போய்விட்டது (டேய்.. டேய்... நானே சும்மா இருக்கேன். நீ ஏண்டா உணர்ச்சிவசப்படுற என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்). அவன் ஃபாரின்ல ஜாவால்லாம் ஓட்டிருக்கான் தெரியும்ல என்றான் மிகுந்த கோபத்துடன் ( ஜாவாவா?????? டேய் போதும்டா....நான் நடந்தே போயிக்கிறேன்....). அவன் சொன்னதை அங்கிருந்த ஒரு பய புள்ளயும் நம்பவில்லை என்பதை அவர்கள் மூஞ்சியே தெளிவாகச் சொன்னது. முரளி கெளம்புடா என்றான். அவர்களுக்கு முன்னால் நான் பைக் ஓட்டி அவர்களை மூக்குடையச் செய்ய வேண்டும் என்ற அவனது ஆசை எனக்குத் தெரியாமல் இல்லை ( அதுக்கு நானா கெடச்சேன்). சரி மகேஷ், ஒரு டீ குடிச்சுட்டு கெளம்புறேன் என்றேன். சத்தியமாக அதை அவன் ரசிக்கவில்லை. அங்கிருந்த கிரகங்கள் நக்கலாக சிரித்துக் கொண்டன (அதுக்கு நம்ம என்ன செய்ய முடியும்). நான் அந்த டீயை எவ்வளவு மெதுவாக குடிக்க முடியுமோ, அவ்வளவு மெதுவாகக் குடிக்க ஆரம்பித்தேன். (நான் கடவுளை வேண்டிக் கொண்டபடியே) அந்த நேரம் பார்த்து அவர்களின் Senior Officer அங்கு வர, எனக்குக் கட்டையைக் கொடுத்துக் கொண்டிருந்த அனைத்து கிரகங்களும் அவசர அவசரமாக அங்கிருந்து கிளம்பின. அப்பாடா....

சிறிதும் மனம் தளராத விக்கிரமாதித்தன் போல உடனே டீயை வீசி எறிந்து விட்டு தத்தக்கா பித்தக்கா என்று அந்த பைக்கை ஓட்டிக் கொண்டு ( கொஞ்சம் Gapகிடைத்தாலும் அந்தக் கிரகங்கள் வந்து விடுமோ என்ற பயத்தில்) அந்த இடத்தை உடனே காலி செய்தேன். அந்த ஆஃபிஸ் வளாகத்தை விட்டு வெளியே வந்தவுடன் எனக்கு ஒரு சின்ன (??????) சந்தேகம். கியர் வைத்த வண்டியை ஓட்டும் போது கியரைப் பார்த்து ஓட்டுவதா இல்லை ரோட்டைப் பார்த்து ஓட்டுவதா என்று......Yes…you are right ..கியரைப் பார்த்தே ஓட்டுவது என்று முடிவு செய்து விட்டேன்.

சொன்னா நம்ப மாட்டீங்க. முதல் தடவையே அவ்வளவு சூப்பராக ஓட்டினேங்க. ஆனா ஒரு சின்ன்ன்ன்ன மிஸ்டேக். நான் போக வேண்டிய திசைக்கு மிகச் சரியாக எதிர்த் திசையில் சென்று கொண்டிருந்தேன். என்னடா, இவ்வளவு தூரம் வந்து விட்டோம் ஆனால் ஆள் நட மாட்டத்தையே காணோமே என்று எனக்கு ஒரு சின்ன சந்தேகம் ( நான்தான் முன்னாலேயே சொல்லியிருக்கேனே, நாங்கல்லாம் ரொம்ப ப்ரைட்டுனு). என்ன....நான் அதை யோசிக்கும்போது கிட்டத்தட்ட 10 கி.மீ. தாண்டியிருந்தேன். 

Better late, than never என்று என்னை நானே சமாதானப் படுத்திக் கொண்டு யாரிடமாவது கேட்போம் என்று வண்டியை நிறுத்தினேன். ஒரு பெரியவர் வந்தார். நான் ரொம்ப Casual ஆக இருப்பதாக நினைத்துக் கொண்டு, தாத்தா பிள்ளையார் கோவில் தெரு எங்கே இருக்கு என்று கேட்டேன். அவர் ரொம்ப அசால்ட்டாக, எந்த பிள்ளையார் கோவில் தெரு என்றார் ( எந்த பிள்ளையார் கோவிலா??? எத்தனை பிள்ளையார் கோவில் தெரு இங்க இருக்கு???). நான் துபாய் மெயின் ரோடு மாதிரி, மெயின் ரோடுக்குப் பக்கத்தில் என்றேன். அவர் லேசாக எரிச்சலடைந்தார். வேற ஏதாவது அடையாளம் சொல்லு என்றார். நான் கொஞ்சம் புத்திசாலித்தனமாக இருப்பதாக நினைத்துக் கொண்டு (நினைத்துக் கொண்டு என்றுதான் சொல்கிறேன். Note the point) பக்கத்தில் ஒரு பிள்ளையார் கோவில் கூட இருக்குமே என்றேன். அவர் எரிச்சல் Stage –இல் இருந்து கோபம் Stage- க்குPromotion ஆகி, பிள்ளையார் கோவில் தெருவில் சிவன் கோவிலா இருக்கும், எங்கே போகணும்னு தெளிவாச் சொல்லு மூதேவி  என்றார். இந்த Sudden Attack – ஐ நான் சற்றும் எதிர் பார்க்கவில்லை. அது வரை யாரும் என்னை அந்த மாதிரி திட்டியதும் இல்லை ( சரி...சரி.....அதற்கு முன்னால ஓரிரு முறை யாரோ தெருப்போக்கர்கள் அந்த மாதிரி என்னை திட்டியது உண்டு).

Needless to say, உடனே எனக்கு கோபம் தலைக்கு மேலே ஏறி, கண்கள் சிவக்க, மூச்சுத்திணறி... என்னை அறியாமல் நான் அந்தக் காரியத்தைச் செய்தேன்.Yes…தடாலென்று அவர் காலில் விழுந்து, ஐயா, நான் இந்த ஊருக்குப் புதுசு, எனக்கு எங்க வீட்டுக்குப் போகணும், ரொம்ப பசிக்குதுனு சொன்னேன்.

அவர் சத்தியமாக அந்த Anti Climax – ஐ எதிர்பார்க்கவில்லை. உடனே, சிரித்து விட்டு, இந்தக் காலத்து புள்ளைங்களுக்கு School –இல் என்னத்தைத்தான் சொல்லித்தாராய்ங்கெளோ என்று அலுத்துக் கொண்டே சரியான வழியைக் காண்பித்தார். நாம் College –இல் கட்டடித்த ஏதோவொரு Class – இல் தான் சிவகங்கையில் வழியைக் கண்டிபிடிப்பது எப்படி என்று சொல்லித் தந்திருப்பார்களோ என்று என்னை நானே நொந்து கொண்டு வீட்டிற்குத் திரும்பினேன்.

வெ. பாலமுரளி. 

முள்றியின் டைரி -8 நண்பர்களுக்கு ஒரு சந்தோஷமான செய்தி.

இன்று கொஞ்சம் கூட எதிர்பாராத ஒரு நேரத்தில் BBC-யில் இருந்து ஒரு ஃபோன்.

என் பெயர், முகவரி, என் Hobby எல்லாம் கேட்டு சரி பார்த்து விட்டு, நாங்கள் Masai Mara-வில் African Cats- Part II  Documentary Movie பண்ண வேண்டும், 3 மாதம் Project எங்களுடன் சேர்ந்து பணி புரிய இயலுமா என்று கேட்டார்கள். கரும்பு தின்ன கூலியா? யோசிக்காமல் சரி என்று சொல்லி விட்டேன். என் கேமரா மற்றும் லென்ஸ் Details கேட்டார்கள். சொன்னேன். அவர்களுக்கு திருப்தி போலத்தான் தோன்றியது.

 என்னை எப்படித் தெரியும் என்றேன். Flick r-இலும் Face Book-இலும் 
பார்த்தார்களாம். ரொம்ப சந்தோஷமாக இருந்தது. அவர்களே, உங்கள் Expenses
 போக இவ்வளவு தொகை தருகிறோம் என்றார்கள். கிட்டத்தட்ட மயக்கமே
 வந்து விட்டது. என்னை அறியாமலேயே எப்போது ஆரம்பிக்க வேண்டும் 
என்று பதட்டத்துடன் கேட்டேன்.” என்னத்த ஆரம்பிக்கப் போறீங்க? எந்திரிங்க…. மணி ஏழாச்சு.நேத்து பொறந்த புள்ள அழகா அதுவா எழுந்து 
School-க்குக் கிளம்பிருச்சு. இத (என்னைத்தான்) நாம வந்து எழுப்பி விட

 வேண்டியிருக்கு. எல்லாம் என் தலையெழுத்து” என்றாள் என் மனைவி….
வெ.பாலமுரளி

இந்த கனவு ஒரு நாள் நடக்குமா?

Wednesday 30 November 2011

முள்றியின் டைரி 7 - Cooking கொஞ்சம் சொல்லித் தாங்க பாலா சார்....

அப்போது நான் தாஷ்கெண்டில் படித்துக் கொண்டிருந்தேன். அன்று என் அறைத் தோழனுக்கு பிறந்தநாள். அங்கு நாங்கள் மிகவும் விமரிசையாகக் கொண்டாடுவது பிறந்தநாளும் ஆங்கிலப் புத்தாண்டும் மட்டும்தான்.

எனக்கு நன்றாக சமைக்கத் தெரியும். இதைப் படிக்கும் என் தாஷ்கெண்ட் நண்பர்கள் அதை உறுதி செய்வார்கள் ( இவனைப் போட்டுப் பார்க்க இதுதான் நல்ல சந்தர்ப்பம் என்று நினைத்துக் கொண்டு பாலாவா? சமையலா? என்று காமெண்ட் அடிக்காதீங்க ராசாக்களா…ப்ளீஸ்).

அன்று சமைத்த மெனு இன்றும் ஞாபகம் இருக்கிறது. அதிகம் Non Veg  Items தான். (So, Veg மக்கள் அடுத்த இரண்டு வரிகளை Skip பண்ணி விட்டு படிக்கவும்).

கோழிக் குழம்பு, கோழிக்கால் வறுவல், முயல் கறி பிரட்டல் ( சீனி நோ காமெண்ட் ப்ளீஸ்), முட்டை மசாலா + சாம்பார், ரசம் , சன்னா மசாலா, தயிர் + நானே செய்த பூண்டு ஊறுகாய் + சாதம் + Naan .

சமைத்துக் கொண்டிருக்கும் பொது, மல்லித் தளையோ என்னவோ ஒன்று தீர்ந்து விட்டது என்று அருகில் உள்ள காய்கறி மார்க்கெட்டிற்கு வாங்கி வரச் சென்றேன். அங்கேதாங்க அவனைப் பார்த்தேன். “ தஹி, Curd, Butter Milk” என்று ரஷ்ய மொழியைத் தவிர மற்ற அனைத்து மொழிகளிலேயும் அங்குள்ள ஒரு காய்கறிக்காரம்மாவிடம் நம்ம தருமி ரேஞ்சுக்கு சொற்போர் புரிந்து கொண்டிருந்தான். என்னைப் பார்த்தவுடன் அவன் முகத்தில் ஒரு 1000 Watts பல்பின் வெளிச்சம். வேக வேகமா என்னிடம் வந்து  “ Are you from India?” என்றான் ( ஏண்டா என் நிறத்தைப் பார்த்தா ஐரோப்பாக்காரன் மாதிரியாடா இருக்கு? ஏண்டா எங்கிட்டேயே வந்து எல்லோரும் வம்புக்கு இழுக்கிறீங்க? Wait a minute…. ஒருவேளை இந்தியாவா, ஆப்பிரிக்காவா என்னும் அர்த்தத்தில் கேட்டிருப்பானோ? இருக்கும்…இருக்கும்).

நான் உடனே தமிழில் “ என்ன தமிழா?” என்றேன். அவன் முகத்தில் அப்படி ஒரு சந்தோஷம். மடை திறந்த வெள்ளம் போல பேச ஆரம்பித்து விட்டான். தான் வந்து நாலு நாட்கள்தான் ஆகிறதென்றும், தமக்கு ரஷ்யனும் தெரியாமல் சமையலும் தெரியாமல் சாப்பாட்டுக்கு ரொம்ப கஷ்டப்படுவதாகவும் தெரிவித்தான். அவன் சாப்பாட்டுக்கே கஷ்டப்படுவதாகக் கூறியதும் நான் கண் கலங்கி விட்டேன். நமக்கு வேற மெல்ட்டிங்க் ஹார்ட்டாச்சா ( அதாங்க இளகிய மனசு), உடனே அவனை எங்கள் ரூமிற்கு அழைத்து வந்து விட்டேன். அங்கு நடந்த தட புடல் சமையலைப் பார்த்தவுடன் கொஞ்சம் பயந்து விட்டான் போலிருந்தது. என்ன சார் விசெஷம் என்றான். பயப்படாத ராசா, என் ரூம் மேட்டிற்கு பிறந்த நாள், இன்று மாலை பார்ட்டி. அதுதான் சமையல் போய்க் கொண்டிருக்கிறது என்று விளக்கி விட்டு , அது சரி நீ வெஜ்ஜா நான்-வெஜ்ஜா என்றேன். அவன் உடனே, நான்-வெஜ்ஜே போதும் சார் ( நான்-வெஜ்ஜே போதுமா….அது சரி…என்று நினைத்துக் கொண்டு) கொஞ்சம் பொறு ராசா Friends எல்லோரும் வந்து விடட்டும் என்று சொல்லி விட்டு அவனுக்கு டீயும் சாண்ட்விச்சும் பண்ணிக் கொடுத்தேன்.

இந்த இடைப்பட்ட நேரத்தில் அவன் பூர்வீகக் கதையெல்லாம் சொன்னான்.
மாலையில் நண்பர்கள் அனைவரும் வந்து Cake எல்லாம் வெட்டி, கோக், ஃபாண்டா எல்லாம் குடித்து முடித்தவுடன், சாப்பிட ஆரம்பித்தோம். ஓரக்கண்ணால் அவன் என்ன செய்கிறான் என்று பார்த்தேன். சும்மா சொல்லக் கூடாது….ரசித்து ருசித்து பொளந்து கட்டிக் கொண்டிருந்தான். வாழ்க்கையில் முதல் முறையாக ஒரு நல்ல காரியம் செய்கிறோமேயென்று எனக்கு அப்படி ஒரு சந்தோஷம். சாப்பிட்டு முடித்ததும் அவனை அறியாமலேயே ஒரு பெரிய ஏப்பம் வேறு வந்து விட்டது. கொஞ்சம் கூச்சப் பட்டுக்கொண்டே ஹி…ஹி…கொஞ்சம் அதிகமாகச் சாப்பிட்டு விட்டேன் ....அதுதான்...என்று வழிந்தான். நானும் பெருந்தன்மையுடன் ( ???) பரவாயில்லைப்பா என்றேன்.

 அப்பத்தாங்க அவன் வாழைப்பழத்துல ஊசி ஏத்துவது போல மெதுவாக அந்த குண்டைப் போட்டான். “ பாலா சார் எனக்குக் கொஞ்சம் Cooking சொல்லித்தாங்க சார். ரொம்பல்லாம் டேஸ்ட்டா இருக்கணும்னு அவசியமில்லை. இன்னைக்கு நீங்க சமைத்த மாதிரி சுமாராக இருந்தாக் கூடப் போதும் அட்ஜஸ்ட் பண்ணிக்கிறேன் ” என்றான்.. நான் இந்த Diplomatic Attack-ஐ சத்தியமாக எதிர்பார்க்கவில்லை. நான் பிறவியிலேயே ரொம்ப அப்பாவி வேறு என்பதால் என்ன Reaction கொடுக்க வேண்டும் என்று கூடத் தோணாமல் பக் பக் என்று முழித்துக் கொண்டிருந்தேன். என் அறைத்தோழன்தான் முதலில் சுதாரித்தான். “சரி சரி..நீ அடுத்த முறை வரும்போது சமையல் கற்றுக் கொள்ளலாம், இப்ப நீ கிளம்பு. வெளியில் இருட்டாயிடுச்சு பாரு என்றான். அவன் வெளியே கிளம்பியதுதான் தாமதம். மற்ற எல்லோரும் என்னை ஓட்டியே கொன்று விட்டார்கள்.
அங்கு இருந்த மீதி வருடங்களில் எத்தனையோ பார்ட்டிகள், எத்தனையோ கொண்டாட்டங்கள்…..ஆனால் அவனை மட்டும் தப்பித்தவறிக் கூட எதற்கும் கூப்பிடவேயில்லையே….

வெ.பாலமுரளி

முள்றியின் டைரி 6 - Excuse me..what did you say?

அப்போ நான் கென்யா வந்த புதுசு. A Typical Bachelor. அப்போது என்னிடம் ஒரு SUZUKI Sports Car இருந்தது – 4 Wheel Drive. கிட்டக்க வந்தா அறைஞ்சிருவேன் என்று சொல்கிற மாதிரி ஒரு வெறிக்கிற சிவப்புக் கலர். ஆனால் அதில் உள்ள Music System சூப்பராக இருக்கும். Technics Make. வெறும் Cassette Player தான். ஆனால், காரின் கண்ணாடியைத் திறந்து வைத்துக் கொண்டு மைக்கேல் ஜாக்ஸனின் த்ரில்லரை சத்தமாக கேட்டுக் கொண்டே காரை வேகமாக ஓட்டிக் கொண்டு போனால்…நம்ம தலைவர் பாஷையில் சொல்வதானால், சும்மா அதிரும்ல….அந்தக் கால கட்டத்தில் அது எனக்கு மிகவும் பிடித்த ஒரு பொழுதுபோக்கு ( ஆமா இவரு பெரிய Period Film எடுக்கிறாரு...).

ஒருநாள் காலையில் அந்த மாதிரி மியூஸிக்கைச் சத்தமாக வைத்துக் கொண்டு காரில் வேகமாக ஆஃபிஸிற்குச் சென்று கொண்டு இருந்தேன் ( சும்மா ஃபண்ட்டா….டயத்துக்கு ஆஃபிஸிற்குப் போக வேண்டும் என்றெல்லாம் இல்லை). மணி சுமார் 7.30 இருக்கும். அப்போது ஒரு இந்தியன், டிப் டாப்பாக கோட், சூட், டை எல்லாம் போட்டுக் கொண்டு ஒரு விலையுயர்ந்த காரில் ( BMW என்று ஞாபகம்) என்னுடைய காரை Overtake பண்ணி என்னைப் பார்த்து கையைக் காண்பித்து ஏதோ சத்தமாகச் சொல்லி விட்டு விரைந்து சென்று விட்டான். என் காரில் மியூஸிக் சத்தமாக இருந்ததால் அந்த ஆள் என்ன சொன்னான் என்று சுத்தமாகக் கேட்கவில்லை. ஆனால் அவன் வாயசைப்பை வைத்துப் பார்க்கையில், ஹிந்தியில் உள்ள “ பெஹன்………த்” என்ற ஒரு கெட்ட வார்த்தையைச் சொன்னது மிகத் தெளிவாகப் புரிந்தது. ஏன் அப்படி ஒரு வார்த்தையைச் சொன்னான் என்று புரியவில்லை. “ நமக்கே தெரியாமல் வழியில் ஒருவேளை அவனை ஏதாவது Irritate பண்ணி விட்டோமோ?”. அதற்கும் சான்ஸ் இல்லை. ஏனென்றால், கென்யாவில் சாலை விதிகளை மதித்து கார் ஓட்டும் மிகச் சிலரில் நானும் ஒருவன் ( இவன் விடுகின்ற பீலாக்களைத் தாங்க முடியலப்பா என்று சொல்வது கேட்கின்றது. சரி…சரி..குறைத்துக் கொள்கிறேன்).

வேறு காரணம் என்னவாக இருக்கும்? எதுவாக வேண்டுமானாலும் இருந்து விட்டுப் போகட்டுமே. எதற்குக் கெட்ட வார்த்தை? அதுவும், அதிகாலையில்… என்ன ஆனாலும் சரி…இவனை இன்று விடக் கூடாது என்று முடிவெடுத்தேன். காரை Sports Gear –இல் போட்டு விட்டு அவனை விரட்ட ஆரம்பித்தேன். ரோடு, சைடு பிளாட்ஃபாரம் என்றெல்லாம் பார்க்கவில்லை. ஒரு குத்துமதிப்பாக அவன் போன திசையில் பறந்தேன் ( அன்று நான் போன வேகத்திற்கு அதுதான் சரியான சொற்பதம்).

ஹா…..ஹா…….ஹா…… ….. அவன் காரைப் பார்த்துட்டோம்ல….நைரோபி சின்ன ஊருங்க….
ஆங்கிலப் படத்தில் வருவதுபோல, ஒரு வளைவில் அவன் காரை வழிமறித்து விட்டு இறங்கினேன். படு கடுப்பில் அவனை நெருங்கி “ EXCUSE ME….WHAT DID YOU SAY?” என்றேன். நான் பல்லைக் கடித்துக் கொண்டுக் கேட்ட விதத்தில் அவன் ஆடிப் போய் விடுவான் என்று எதிர்பார்த்தேன். ஆனால் அதற்குப் பதிலாக அவன் முகத்தில் ஒரு மாதிரியான குழப்பம்தான் தெரிந்தது. I SAID YOUR BACK WHEEL HAS A PUNCTURE என்றான். பேக் வீலு ..பஞ்சரா?????? அடக் கடவுளே…..அவன் பேக்குனு சொன்னதைத்தான் நான் பெஹன்…என்று புரிந்து கொண்டு விட்டேனா…….அட நாதாரி…. என்று என்னை நானே நொந்து கொண்டு என் பேக் வீலைப் பார்த்தேன். அவன் முதலில் சொல்லும்போதே பார்த்திருந்தால் வெறும் டியூபோடு போயிருக்கும். நான் பண்ணிய ஹீரோயிசத்தில் இப்போது டயரும் கிழிந்து ரொம்ப கேவலமாக தொங்கிக் கொண்டிருந்தது. இப்போது அவன் Turn. “ EXCUSE ME…ANY PROBLEM?” என்றான். உடனே சுதாரித்துக் கொண்ட நான்  “ NO. NOT AT ALL. I JUST CAME TO SAY THANK YOU. I REALLY APPRECIATE IT. HAVE A WONDERFUL DAY”  (ம்க்கும் இதுக்கு ஒண்ணும் குறைச்சல் இல்லை) என்று சொல்லி விட்டு அவன் காரை வழி விட்டேன். நான் வாழ்க்கையில் எத்தனையோ சந்தர்ப்பங்களில் வழிந்திருக்கிறேன். ஆனால் அன்று மாதிரி என்றும் வழிந்ததில்லை.

வெ. பாலமுரளி. 

முள்றியின் டைரி 5 - என் கன்னிச் சமையல்

அன்புள்ள அப்பா படத்தில் ஒரு பாடல் வரும் “ முதல் முத்தத்தையும் முதல் காதலையும் மறக்க முடியாது மகளே” என்று. அது போலத்தான் என்னுடைய முதல் சமையல் அனுபவமும் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு சம்பவமாக ஆகிப் போனது.

இது நடந்தது 1987 –ம் வருடம். ஒரு இனிய காலைப் பொழுதில் எனக்கு USSR  Embassy –யில் இருந்து ஒரு கடிதம் வந்தது.  “ உங்கள் அறிவை மெச்சி, உங்களை எங்கள் நாட்டில் பொறியியல் மேற் படிப்பு படிக்க அழைக்க விரும்புகிறோம். உங்களுக்கு விருப்பம் என்றால் உடனே வந்து விசாவுக்கு Apply பண்ணுமாறு கேட்டுக் கொள்கிறோம்” ( சரி..சரி…” உங்கள் அறிவை மெச்சி” Was not there). அவனுக்கு கால் தரையில் பாவாது என்று சொல்வதைக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? அன்று முழுவதும் நான் அந்த மன நிலையில்தான் இருந்தேன். காலை ஜப்பானில் காஃபி, மாலை நியூயார்க்கில் காபரே என்று ஒரு பாட்டு உண்டு. அதெல்லாம் கனவில் வர ஆரம்பித்து விட்டன. அது ஒரு கனாக் காலம்.

எங்கள் வீட்டில் முதலில் சுதாரித்தது எங்கள் அம்மாதான். அது சரி, சாப்பாட்டுக்கு என்னடா செய்வதாக உத்தேசம் என்று கேட்டார்கள். கொஞ்சம் கூட முன்னால் யோசித்திருக்கவில்லை. ரொம்ப casual –ஆக இருந்தேன். டேய், சமையல் கத்துத்தாரேன். கொஞ்சம் காது கொடுத்துக் கேளு ராசா என்று கெஞ்சினார்கள். ம்ஹூம்…யாருகிட்டே…..அட போம்மா, நான் ஹோட்டலில், இல்லாவிட்டால் காண்டீனில் சாப்பிட்டுக் கொள்வேன் என்றேன் எகத்தாளமாக.. அங்கு என்னவோ தெருவுக்குத் தெரு முனியாண்டி விலாஸூம், உடுப்பியும் இருக்கும் என்று நானாகவே கற்பனை செய்து கொண்டு ரொம்ப தெனாவெட்டாகத் திரிந்தேன் ( yes…அப்பவே தெனாவெட்டுத்தான்). நம்ம Friend Mr 7 ½ க்கு சிரிப்புத் தாங்கவில்லை. அங்கு வா நான் கற்றுத் தருகிறேன் என்று அவர் கிசு கிசுத்திருக்க வேண்டும். பத்தாததுக்கு என் பாட்டி வேற, “ அடேய் கட்டையில போறவனே (செல்லமாத்தான்) , உங்க அம்மா சொல்றதைக் கொஞ்சமாவது கேளுடா….சாம்பார், ரசம், டீ, காப்பி மட்டுமாவது கத்துக்கடா கருமம் புடிச்சவனே என்றார்கள். Me sambar Cooking? No chance பாட்டி? You come Moscow, I give  dinner என்று என் பாட்டிக்கும், எனக்கும்  தெரியாத இங்கிலீசில் உதார் விட்டேன் . என் பாட்டிக்கோ செம கோபம்“ இந்தக் கெரகம் புடிச்சவனை விடுங்க. அங்க போயி நல்லா காயட்டும் (ச்சே…. என்ன்ன்ன்ன ஒரு தீர்க்க தரிசனம்) என்று ஒருவழியாக என்னை கை கழுவினார்கள். (இந்தப் பாட்டி இருக்கே பாட்டி, பயங்கர Violent. இதோட நடந்த ஒரு சுவையான ( ????) நிகழ்ச்சியைப் பின்னால் எழுதுகிறேன்).

கிளம்புகிற சமயத்தில் திடீரென்று ஒரு ஞானோதயம் வந்து சில ரெடிமேட் மசாலாக்களை மட்டும் வாங்கிப் போட்டுக் கொண்டேன் ( ஈகிள் பிராண்டு என்று ஞாபகம்). செப்டம்பர் மாதம் 27 ம் தேதி மாஸ்கோ போய் இறங்கினோம். இறங்குமுன் ஃப்ளைட்டிலேயே ஒரு Trial காண்பித்து விட்டார்கள். காய்ந்து போன கட்லெட்டு, Grilled குதிரைக் கறி, மசிய வைத்த உ.கிழங்கு மற்றும் காய்ந்து கட்டையாகப் போன பிரெட். எதுவும் தொண்டை வைத்த Test –இல் பாஸ் பண்ணவில்லை. அந்த கட்லெட்டை மோந்து பார்த்ததால் மட்டுமே டெல்லியில் சாப்பிட்டதும் சேர்த்தே வாந்தி வடிவில் வெளியில் வந்து விட்டது. பசி மயக்கத்தில் காய்ஞ்சி போய் பாதி நினைவிழந்து மாஸ்கோவில் கால் வைத்தோம். University Hotel –இல் தங்க வைத்தார்கள். அங்கு கிடைத்த சாப்பாட்டிற்கு ஃபிளைட் சாப்பாடே தேவலை போலிருந்தது. பிளாக் டீயும் வாயில் Enter ஆக ரொம்பவும் Polite ஆக மறுத்து விட்டது. So, ரெண்டாவது நாளாகவும் கொலைப் பட்டினி. அப்போதுதான் விஜயகுமாரும் சீனிவாசனும் என்னை வந்து பார்த்தார்கள். என் Status அவர்களுக்கு ஆச்சரியம் ஒன்றும் தரவில்லை. இதுபோல ரொம்பப் பார்த்திருப்பார்கள் போல. அவர்கள், சகோதரி சாந்தி வீட்டிற்கு  அழைத்துப் போனார்கள். நானும் சாந்தியும் ஒரே ஊர்- காரைக்குடி. அந்தப் பாசத்தில் எனக்குத் தட புடலாக விருந்து வைத்தார்கள் ( அன்றைக்கு சாந்தியின் அப்பாவிற்கும் பிறந்தநாள் என்று நினைக்கிறேன்). நெல்லுக்குப் பாய்ந்தது புல்லுக்கும் நன்றாகவே பாய்ந்தது. காய்ஞ்ச மாடு கம்புல விழுந்த கதைதான். சாந்தியின் சமையலும் மிக நன்றாக இருக்கும். So, புகுந்து விளையாடி விட்டேன். மறுநாள் காலையில் எங்களில் ஒரு 10 பேரை செலக்ட் பண்ணி கை நிறைய பணம் கொடுத்து வோல்காகிராடு என்னும் நகரத்திற்கு அனுப்பி விட்டார்கள்.

மாஸ்கோ TO வோல்கோகிராடு 24 மணி நேரப் பயணம். பயணம் என்னவோ சுகமாகத்தான் இருந்தது. இறங்கியவுடன்தான் தெரிந்தது. அவர்கள் எங்களை ஹாஸ்டலுக்கு அழைத்துச் செல்லவில்லை, ஹாஸ்பிட்டலுக்கு அழைத்துச் செல்கிறார்கள் என்று. அங்கு வரும் அனைத்து வெளிநாட்டு மாணவர்களையும் AIDS –இலிருந்து VD வரைக்கும் உலகத்தில் உள்ள அனைத்து கேவலமான வியாதிகளுக்கும் உண்டான டெஸ்ட்டும் பண்ணி, புள்ளைங்க ரொம்ப சுத்தம் என்று உறுதியான பிறகே யுனிவர்சிட்டிக்குள் விடுகிறார்கள் ( அதுக்காக, இந்தப் பால் வடியும் முகத்தைப் பார்த்த பிறகுமாடா “அந்த” மாதிரி டெஸ்ட்டெல்லாம் பண்ணனும்? கொஞ்சம் ஓவர்டா. அது சரி, அங்கே போனதுக்கப்புறம் அந்த மாதிரி வியாதியெல்லாம் வந்தா என்ன பண்ணுவீங்க? கேட்டோமா...........). மொத்தமாக 20 நாட்கள். கிட்டத்தட்ட சிறை வாழ்க்கைதான். மணி அடிச்சா சோறுங்குற மாதிரி, டாண் டாண் என்று சாப்பாடு மட்டும் போட்டார்கள். ஆனால் சாப்பாடுதான் எதுவுமே வாய்க்கு வெளங்கல. வந்தாச்சு உயிர் வாழணுமேனு ஏதோ ஒன்றைக் கொறித்து விட்டு பொழுதைப் போக்கினோம். நான் மட்டும் கிட்டத்தட்ட 8 கிலோ குறைந்து விட்டேன் அந்த 20 நாட்களில். வீட்டிற்கு ஒவ்வொரு நாளும் ஒரு கடிதம் வேறு – பேனாவைக் கண்ணீரில் தோய்த்து. அந்தக் கடிதங்கள் எல்லாம் தொலைந்து விட்டன. இருந்தால், நம்ம நேரு இந்திராகாந்திக்கு எழுதிய கடிதங்கள் ரேஞ்சுக்கு இருந்திருக்கும் (ம்க்கும்...). சரி..விஷயத்திற்கு வருகிறேன். 20 நாட்கள் கழித்து எங்களை “ரிலீஸ்” செய்தார்கள். Yes….ரிலீஸ்தான் சரியான வார்த்தைப் பிரயோகம். அந்த ஊரில் உள்ள Canteen எல்லாம் ரொம்ப வித்தியாசமாகவும் உனக்கு தில் இருந்தா சாப்பிட்டுப் பாருடா என்று சொல்வது போல ரொம்ப மோசமாகவும் இருந்தது.

எல்லோர் கையிலும் 90 ரூபிள் வேறு. அந்தக் காலத்தில் அது ரொம்பப் பெரிய தொகை. முதல் காரியமாக சமையல் செய்யும் பொருட்கள் அனைத்தும் போய் வாங்கினோம். 10 லிட்டர் (????) பிரஷர் குக்கர் (பின்ன....நம்ம சாப்பாட்டைப் பார்த்து எத்தனை நாளாச்சு), அரிசி, உ.கிழங்கு, கேரட், வெங்காயம் எல்லாம் வாங்கி விட்டு ஹாஸ்டலுக்கு வந்தோம். என் அறையில் நான் , சுந்தர், பிரவீன் என்ற 3 தமிழர்கள். இதில் பிரவீனுக்கு சிக்கன் மட்டும்தான் சமைக்கத் தெரியும். வேறு எதுவும் தெரியாது. எனக்கும் சுந்தருக்கும் அதுவும் தெரியாது. So, எங்களுக்கு பிரவீன்தான் “The Boss”. அறைக்கு வந்தபிறகுதான் தெரிந்தது சிக்கன் வாங்க மறந்து விட்டோமென்று. சரிVegetarian சமைக்கலாம் என்று முடிவு செய்து, யார் தொடங்குவது என்று விவாதித்தோம் ( ஆமா, இவரு பெரிய சாலமன் பாப்பையா......). வழக்கம்போல நானே களத்தில் குதித்தேன். அறுசுவை நடராஜன் போல மெனுவை அறிவித்தேன்- சாதம், சாம்பார் & ஊறுகாய் . எப்படிடா சாம்பார் பண்ணுவாய் என்று இருவரும் வாய் பிளக்கக் கேட்டார்கள். சஸ்பென்ஸ் என்றேன் ( ரெடிமேட் பவுடர் வெச்சிருக்கோம்ல...).

சரி..எவ்வளவு சாதம் வைப்பது? எல்லோருக்கும் பேய்ப் பசி. ஆளுக்கு இரண்டு கப் ( பெரிய்ய்ய்ய்ய கப்பு) அரிசி என்று கணக்கு பண்ணி, 6 கப் அரிசி வைத்து 12 கப் தண்ணீர் ஊற்றினேன் ( எதுக்கு 10 லிட்டர் குக்கர் வாங்கினோம் என்று இப்போது புரிந்ததா? எதப் பண்ணினாலும் ப்ப்ப்ப்ப்ப்ளான் பண்ணிப் பண்ணனும்). ஒரு சின்ன ப்ராப்ளம். மேற்கண்ட அளவு அரிசியையும் தண்ணீரையும் ஊற்றிய பிறகு குக்கர் நிரம்பி விட்டது. பிரவீன்தான் அந்தக் கேள்வியைக் கேட்டான். டேய், கொஞ்சம் கூட Gap –பே இல்லையே எப்படிடா விசில் வரும்? ( ரொம்பக் கேள்வி கேட்கிறான். இவனிடத்தில் கொஞ்சம் ஜாக்கிரதையாக இருக்கணும்). அதெல்லாம் வரும்டா என்று அவனை Off  பண்ணி விட்டு, சாம்பார் பண்ணும் காரியத்தில் இறங்கினேன். இன்னொரு 10 லிட்டர் குக்கரை எடுத்து முக்கால்வாசி தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து விட்டு, ஈகிள் கவரை எடுத்து செய்முறை பக்குவத்தைப் படித்தேன். கொதிக்கும் நீரில் ஈகிள் பொடியைப் போட்டு இறக்கினால் சுவையும் மணமும் மிக்க சாம்பார் ரெடி. சுவையை அதிகரிக்க தக்காளியையும் சேர்க்கலாம். சத்தியமாகச் சொல்கிறேன் அதில் வேற ஒண்ணுமே எழுதலீங்க. எனக்கோ ஆச்சரியமான ஆச்சரியம். ப்பூ....சாம்பார்னா இவ்வளவுதானா? ( பருப்பு, புளி, காய்கறி, மல்லித்தளை, பெருங்காயம் எல்லாம்  Basic & Common sense என்று விட்டு விட்டார்கள் போலிருக்கு. நமக்குத்தான் அது எப்பவுமே இல்லையே). சந்தோஷமாக கொதிக்கும் நீரில் ஈகிள் பொடியையும், ( அதில் உப்பு சேர்த்திருப்பார்களா மாட்டார்களா என்ற சந்தேகத்துடன்) உப்பையும் போட்டு விட்டு அறைக்குள் வந்து உட்கார்ந்து விசில் சத்ததுக்காக காத்திருந்தோம். நாங்கள் எங்கள் Cooking Exercise –ஐ  ஆரம்பிக்கும்போது மணி மாலை ஆறு. ஏகப்பட்ட Discussions & Analysis  ( நாஙகல்லாம் Engineers தெரியும்ல..........) எல்லாம் முடிந்து நாங்கள் அறைக்கு வந்து காத்திருக்க ஆரம்பித்தபோது மணி 8. “ஓடுமீன் ஓட...உருமீன் வரும்வரை காத்திருக்குமாம் கொக்கு” என்று சொல்கிற மாதிரி, ஒரே ஃபோக்கஸூடன்  Wait பண்ணிக் கொண்டிருந்தோம். அவ்வப்போது போய் குக்கரை Monitor பண்ணிக் கொண்டிருந்தோம் (Constant Monitoring is very important while testing any new equipment – படிச்சிருக்கோம்ல.....).

கிட்டத்தட்ட 11 மணி வரைக்கும் ஒரு பொட்டு சத்தத்தையும் காணோம். சுந்தரும், பிரவீனும் பசி மயக்கத்தில் தூங்கியே போய் விட்டார்கள். Something is not right என்று வழக்கம்போல் (லேட்டாக) பட்சி சொன்னது.
வருவது வரட்டும் என்று குக்கரைத் திறந்து பார்த்தேன். சொன்னா நம்ப மாட்டீங்கங்க...ஒரு பருக்கையைக் கூட காணோம். வடிகஞ்சி போல ஏதோ ஒரு திரவம் மட்டுமே பாக்கி இருந்த்து. சரி, சாம்பார் என்ன ஆச்சுனு அதைத் திறந்து பார்த்தால், ஒரு மஞ்சள் நிறத் திரவம் மட்டும் எனக்கென்ன உனக்கென்ன என்று கொதித்துக் கொண்டிருந்தது. பசிக் கொடுமையில் எனக்குப் பின்னாலேயே வந்து எட்டிப் பார்த்த சுந்தரும் பிரவீனும் என்னை ஒரு கொலை வெறி பார்வை பார்த்தார்கள். Ofcourse they had the right to do so….

நாம் எங்கே தவறு செய்தோம் என்று அவர்களிடம் Discuss செய்வோமா என்று நினைத்து ஒரு நொடியில் அந்த எண்ணத்தை மாற்றிக் கொண்டேன். பசியில் என்ன செய்வது என்று தெரியாமல் அந்த இரண்டு திரவங்களையும் ஒரு பாத்திரத்தில் ஊற்றி மிக்ஸ் பண்ணி ஆளுக்கு ஒரு டம்ளர் குடித்து விட்டு படுத்து உறங்கினோம்.



வெ.பாலமுரளி

முள்றியின் டைரி -4 படித்ததும் ரசித்ததும்.

நான் புத்தகங்கள் வாசிக்க ஆரம்பித்தது ..….  4-வது படிக்கும்போது என்று ஞாபகம். அப்போது அணில், முயல் என்ற சிறுவர் புத்தகங்கள் வரும். நானும் என் அண்ணனும் வீட்டில் தின்பண்டம் வாங்க கொடுக்கும் காசை சேர்த்து வைத்து அந்த புத்தகங்களை வாங்குவோம் (படம் பார்ப்பது எல்லாம் படித்தது ஆகாது ராசா…).

அப்போது ஆரம்பித்த பழக்கம். பின்னால் முத்து காமிக்ஸ், இளவரசன் ஏழு கடல் ஏழு மலைகளை தாண்டி ஒரு சிறிய கூண்டில் இருக்கும் அப்பாவி பறவையை கொல்வதின் மூலமாக ஒரு மந்திரவாதியை கொல்லும் கதைகள் (அது என்னங்க லாஜிக்?), தமிழ்வாணன் கதைகள், மணியனின் பயணக்கட்டுரைகள், அசோகன் ஆரம்பித்த பாக்கெட் நாவல்கள், சுஜாதா,  ராஜேஷ்குமார், ராஜேந்திரகுமார், என் அம்மா படித்ததைப் பார்த்துப் படித்த லக்ஷ்மி, அனுராதா ரமணன், சிவசங்கரி, இந்துமதி என்று என் பள்ளிப் பருவத்தில் கன்னா பின்னா என்று படித்திருக்கிறேன் (என் பாடங்களைத் தவிர).

தமிழில் இல்லாததா ஆங்கிலத்தில் உள்ளது என்று ஆங்கிலப் புத்தகங்களை மட்டும் படிப்பதில்லை (ஆங்கிலம் தெரியாது என்பதை இப்படிக் கூட சொல்லிக் கொள்ளலாமோ).

ஓரளவிற்கு சீரியஸான புத்தகங்கள் படிக்க ஆரம்பித்தது கல்லூரி போக ஆரம்பித்த பிறகுதான். கல்கியின் சரித்திர நாவல்கள், மீ.ப.சோமு, அகிலன், ஜெயகாந்தன், ராகுல சாங்கிருத்யாயன், டால்ஸ்டாய் , ரஷ்ய நாட்டுக் கதைகள், கண்ணதாசன், சாண்டில்யன், எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், மீ.ரா, அப்துல் ரஹ்மான் என்று என் “இலக்கிய அறிவு” விரிந்தது அப்போதுதான் (ஹி....ஹி…ச்சும்மா சொல்லிப் பார்த்துக்கொண்டேன். தப்பா நினைச்சுக்காதீங்க).

நைரோபி வந்த பிறகு திரு. சண்முகசுந்தரத்தின் நட்பு கிடைத்தது. ஷான் ஒரு அற்புதமான நண்பர். நானும் அவரும் பேச ஆரம்பித்தால் நேரம் போவதே தெரியாது (இந்த ஜென்மங்களைத் திருத்தவே முடியாது என்று எங்கள் இருவரின் மனைவிமார்களும் கிச்சன் பக்கம் போய் விடுவார்கள்). அவர் மூலமாக தி.ஜானகிராமன் மற்றும் முத்துலிங்கம் அறிமுகமானர் (அவர்கள் புத்தகங்களைச் சொன்னேங்க). அப்போது ஷான், நான், இளங்கோ மூவரும் சேர்ந்து பேசி ஆரம்பித்ததுதான் நைரோபியின் தமிழ் நூலகம் (அப்பாடா…எப்படிடா தம்பட்டம் அடித்துக்கொள்வது என்று யோசித்துக்கொண்டிருந்தேன். சான்ஸ் கிடைத்து விட்டது). பின்னாளில் ஷான் இடத்தை நண்பர் பாலா நிரப்பிவிட்டார் ( அதெல்லாம் சரி…நீ என்ன சொல்ல வருகிறாய் ராசா?).

படிப்பதில் உள்ள சுகம் அதை நாலு பேரிடம் பகிர்ந்து கொள்வதில்தான் நிறைவு பெறும் என்று எங்கோ படித்ததாக ஞாபகம் (அதை நான்தான் சொன்னேன் என்றால் நம்ப மாட்டீர்கள்). இந்தக் கட்டுரை எழுத முடிவு செய்தது அப்படித்தான்.

ஜெயகாந்தன் என்றாலே….”நீ ஜெயகாந்தன் புத்தகம் எல்லாம் படிப்பாயா?” என்று ஆச்சர்யம் கலந்த அதிர்ச்சியுடன் சிலர் சொல்ல (அலற)க் கேட்டிருக்கிறேன் (yes…அதே “காந்தி செத்துட்டாரா?” டோனில்). மிகவும் தவறான  ஒரு Perception. அவருடைய “ ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம்” படித்துப் பாருங்கள். ஹென்றியும், துரைக்கண்ணும் உங்களை ஏதோ ஒரு உலகத்திற்கு அழைத்துச் சென்று விடுவார்கள். ஒரு அற்புதமான நாவல்.
அதேபோல் அவருடைய சிறுகதைத் தொகுப்புகள். ஜெயகாந்தன் அளவிற்கு வேறு யாரும் மனிதர்களுடைய எண்ண ஓட்டங்களை சொல்லியிருக்கிறார்களா என்பது சந்தேகமே.

ஜெயகாந்தன் அளவிற்கு என்னை வெகுவாக பாதித்த இன்னொரு எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன். ஒரு விஷயத்தை இப்படிக்கூட யோசிக்கலாமோ, இப்படிக்கூட ரசிக்கலாமோ என்று எண்ண வைத்தவர். அவருடைய “தேசாந்திரி” படித்து விட்டு கங்கை கொண்ட சோழபுரம் சென்றேன். கையில் ஒரு கேமராவும் வழிச் செலவிற்கு கொஞ்சமே கொஞ்சமாக பணத்தையும் தவிர ஒன்றுமே கொண்டு செல்லவில்லை. மாற்று உடை கூட இல்லாமல் உண்மையான  ஒரு தேசாந்திரியாக மேற்கொண்ட ஒரு பயணம். “ அமைதியைத் தேடி எங்கெங்கோ அலைந்தேன். கால்கள் வலித்தன. ஓரிடத்தில் அமர்ந்தேன். அமைதி அங்கேயே இருப்பது அப்போதுதான் தெரிந்தது” என்ற கண்ணதாசனின் வரிகளுக்கு அர்த்தம் அங்கேதான் புரிந்தது. எஸ்.ராமகிருஷ்ணனுக்கு நன்றிகள். என்னுடைய அடுத்த இந்தியப் பயணத்தில் புத்த கயாவும், ஹம்பேயும், நாளந்தாவும் அதே முறையில் சென்று வர ஆசை. மீனாட்சி அன்னை என்ன நினைத்திருக்கிறாளோ …தெரியவில்லை.

சரித்திர நாவல்களை எடுத்துக் கொண்டால் அகிலனின் “வெற்றித் திருநகர்” மற்றும் மீ.ப.சோமுவின் “கடல் கண்ட கனவுகள்” என்னை மிகவும் கவர்ந்த நாவல்கள். பொன்னியின் செல்வனுக்கு சமமான விறு விறுப்புடனும் சுவையுடனும் எழுதப்பட்ட நூல்கள். இன்றும் நான் மதுரைக்கு செல்லும்போதெல்லாம் “விசுவநாத நாயக்கரை” நினைக்காமல் நான் திரும்பியதில்லை. அதேபோல் மதனின் “ வந்தார்கள்….வென்றார்கள்” ஒரு எளிய நடையில் எழுதப்பட்ட அமர்க்களமான சரித்திரப் புத்தகம். சுஜாதா கூறியதைப் போல், எனக்கு மதனைப்போல ஒரு சரித்திர ஆசிரியர் வாய்த்திருந்தால் நான் ஒழுங்காக பாஸ் பண்ணியிருப்பேன். 

நான் மொழி பெயர்ப்பு புத்தகங்கள் அவ்வளவாகப் படிப்பதில்லை. மொழிபெயர்த்தல் என்பது ஒரு கலை. அது யாருக்கும் சரியாகத் தெரிவதில்லை என்பது என்னுடைய நீண்ட நாளைய கருத்து. “ பட்டாம்பூச்சி” என்னும் ரா.கி.ரங்கராஜனுடைய நாவலைப் படித்தவுடன் என்னுடைய கருத்தை மாற்றிக் கொண்டேன். இது “Papillon” என்ற ஃபிரெஞ்சு கதையை தழுவிய நாவல். வாழ்க்கையில் பிரச்சினைகள் வரலாம். ஆனால் பிரிச்சினைகளே வாழ்க்கையானால்? பட்டாம்பூச்சி படியுங்கள்.

வாழும் கலைகள் பற்றி இன்று எவ்வளவோ பேர் எழுதி விட்டார்கள். அவற்றில் எனக்கு மிகவும் பிடித்தவை: சுகி சிவத்தின் வெற்றி நிச்சயமும், சுகபோதானந்தாவின் மனசே ரிலாக்ஸ் ப்ளீஸும். மிகவும் அருமையான புத்தகங்கள் (சுவாமி சுகபோதானந்தாவிற்கு ஒரு சிறிய வேண்டுகோள். தங்கள் பெயரை மாற்றி வைத்துக்கொண்டால் நாங்கள் அனைவரும் மகிழ்ச்சியடைவோம். ஆனந்தா என்று பெயர் முடிந்தாலே மக்கள் ஒரு மாதிரியாக பார்க்கிறார்கள்).

சுஜாதாவைப் பற்றி சொல்லவே வேண்டாம். எளிய நடைக்கும், நக்கல், நையாண்டிக்கும் தலைவரே ஏக போக உரிமையாளர் (நான் இரண்டு முறை காந்தியைப் பார்த்திருக்கிறேன். ஏனோ இரண்டு முறையுமே அவரால் என்னை அடையாளம் காண முடியவில்லை. அப்போது எனக்கு வயது 5). அவருடைய புத்தகங்களில் நான் மிகவும் ரசித்தவை “நம்ப முடியாத கதைகளும்” , “ ஏன் எதற்கு எப்படி” யும்.

நான் படித்த மிகச் சில ஆங்கிலப் புத்தகங்களில் என்னை மிகவும் மாற்றிய புத்தகம் Rhonda Byrne  எழுதிய “ The Secret”. நேரம் கிடைத்தால் படியுங்கள். உங்கள் வாழ்க்கையும் மாற்றி எழுதப்படலாம்.
இப்போது எனக்கு எஸ். ராமகிருஷ்ணனைப்போல் உங்களிடம் சில கேள்விகள் கேட்க வேண்டும்.
  1. நமது நண்பர்கள் சில பேர் சந்தித்துக்கொண்டால் நமது வேலையைப் பற்றிப் பேசி அலுத்துக் கொள்கிறோம், உடல் நிலையைப் பற்றிப் பேசிக்கொள்கிறோம், அரசியல் பேசுகிறோம், பஞ்சு பஞ்சாக இட்லி சுடும் கலையைப் பற்றி தகவல் பறிமாறிக்கொள்கிறோம், ஆனால் என்றாவது புத்தகங்களைப் பற்றிப் பேசிக்கொள்கிறோமா? (இங்கு எனக்கு ஒரு நண்பர் இருக்கிறார். பிஸினஸ் எப்படிங்க என்று எப்பக் கேட்டாலும்  ரொம்பக் கேவலாமா இருக்குங்க என்பார்).
  2. நம்மில் எத்தனை பேருக்கு நைரோபியில் தமிழ் நூலகம் இயங்குவது தெரியும்?( ஆனால் என்ன புதுப்படம் CD வந்தாலும் காட்டுத் தீயைப் போல் விஷயம் எல்லோருக்கும் பரவி விடுகிறது)
  3. நமது பெரியார்தாசன் சொன்னது போல  திருக்குறள் என்பது நான்கு வேதங்களுக்கும், பைபிளுக்கும், திருக்குரானுக்கும் சமமானது. ஆனால் நமது அனைத்து வீடுகளிலும் திருக்குறள் உள்ளதா? நமது குழந்தைகளுக்கு அதன் சிறப்பை சொல்லிக் கொடுக்கிறோமா?
  4. நாங்கள் கனடாவில் இருக்கும்போது, எங்கள் நண்பர்களில் பல பேர் தங்கள் குழந்தைகளுக்குத் தமிழ் தெரியாது என்பதை மிகவும் பெருமையாகச் சொல்லிக் கொள்வார்கள். இது ஒரு வருத்தமான விஷயமில்லையா? இதில் பெருமைப்பட என்ன இருக்கிறது? பேசவே தெரியாது என்னும்போது தமிழ் படிக்கும் பழக்கத்தை எப்படிக் கொண்டு வரப் போகிறோம்?
  5. நாம் இண்டர்நெட்டிற்கும், டிவிக்கும் செலவிடும் நேரத்தில் எவ்வளவு நேரம் புத்தகம் படிப்பதிற்காகச் செலவிடுகின்றோம்?
நான் யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் இதை எழுதவில்லை. நமது படிக்கும் பழக்கம் குறைந்து வருகிறதே என்ற ஆதங்கத்தில் மட்டுமே எழுதுகிறேன். இந்தக் கட்டுரை பிடித்து இருந்தாலும் சரி, பிடிதிருக்காவிட்டாலும் சரி, ஒரு மின்னஞ்சல் அனுப்புங்கள்….விவாதிப்போம் (ஆஃபிஸில் ரொம்ப போரடிகுதுங்க).


வெ.பாலமுரளி.

Tuesday 29 November 2011

முள்றியின் டைரி -3 தொண்டைக்குள் சிக்கிய மீன் முள்

இது நடந்தது 1993 –ம் வருடம். அப்போது நான் சென்னையில் எங்கள் மாமா வீட்டில் தங்கி பட்டர்ஃபிளை ஹோம் அப்ளையன்ஸஸில் வேலை பார்த்துக் கொண்டிருந்தேன்.ஏதோ ஒரு லீவு என்று நானும் எங்க மாமாவும் காரைக்குடி சென்றோம்- அம்மாவைப் பார்த்து வர ( Hallo…நான் எங்கள் அம்மாவைச் சொன்னேங்க).

எனக்கும் எங்கள் மாமாவுக்கும் மீன் என்றால் ரொம்ப இஷ்டம். எங்கள் அம்மா வாழை மீன் குழம்பு வைத்து செந்நகரை ( Red Snappers) வறுத்து வைத்திருந்தார்கள். இன்னும் ஞாபகம் இருக்கு ( மறக்க முடியுமா….?).

இரண்டு பேரும் ரசித்துச் சாப்பிட்டோம். கரெக்டாக சாப்பிட்டு முடிக்கின்ற நேரத்தில் எனக்கு ஒரு முள் போய் தொண்டைக்குள் மாட்டிக்கொண்டது. இது ரொம்பப் பேருக்கு சகஜமாக நடக்கும் என்பதால் நான் ரொம்ப சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை. எங்கள் அம்மா கொஞ்சம் வெறும் சாதத்தை உருட்டி வேகமாக முழுங்கச் சொன்னார்கள். இந்தா போயிரும் அந்தா போயிரும் என்று நானும் கிட்டத்தட்ட 10 உருண்டைக்கு மேல் முழுங்கி விட்டேன். ம்ஹூம்…பயனில்லை.  பக்கத்து வீட்டு பாட்டி வந்து ஒரு வாழைப் பழத்தை டமாலென்று முழுங்கச் சொன்னது. நான் கொஞ்சம் ஸ்பீடாக முழுங்கிட்டேன்னு நினைக்கிறேன். முள்ளு வெளியில வர்றதுக்குப் பதிலாக என் கண்ணு வெளியில வந்துருச்சு. படா அவஸ்தை. முன்னாலேயே வயிறு Full. அதுக்கு மேல வெறும் சாதத்தையும் வாழைப் பழத்தையும் வேறு எக்குத்தப்பாக முழுங்கி மூச்சு முட்ட ஆரம்பித்து விட்டது. கிட்டத்தட்ட மேலுலகம் சென்று விட்டேன். அரக்கர்கள் எல்லாம் என் கண்ணுக்குத் தெரிய ஆரம்பித்து விட்டார்கள் ( பின்ன…? நம்ம பண்ணிய பாவங்களுக்கு தேவர்களா காட்சி தருவார்கள்?).

வெறும் சாதமும் வாழைப் பழமும் பண்ணிய வேலையில், முள் எசகுபிசகாகப் போய் மாட்டிக் கொண்டு ஒரு மரண வலியைத் தர ஆரம்பித்தது. பாரதிராஜா படத்தில் வருவது போல அந்தத் தெருவில் உள்ள பெண்மணிகள் எல்லோரும் வேறு எங்கள் வீட்டில் கூடி விட்டார்கள். அதில் யாரோ ஒரு பொம்பளை “ வெளி ஊருல படிச்சிருக்குன்னு பேருதான். ஒரு மீனைக் கூடச் சாப்பிடத்தெரியலை, என்ன புள்ளையோ” என்று காமெண்ட் வேறு ( ஏண்டா ஆ ஊன்னா படிப்பை படிப்பை இழுக்கறீங்க?  நான் என்ன 30 நாட்களில் மீன் சாப்பிடுவது எப்படின்னு படிக்கவா அங்க போனேன்? ச்சே…).

எனக்கு அன்றே சென்னை திரும்ப வேண்டிய ஒரு சூழ்நிலை வேறு. எச்சில் முழுங்கவோ துப்பவோ முடியவில்லை. தலையை லேசாகத் திருப்பினால் கூட வலி உயிர் போனது. எப்படியோ சமாளித்து சென்னை வந்து விட்டேன். முதல் காரியமாக வீட்டிற்கு அருகில் உள்ள VHS ஹாஸ்பிட்டலுக்குச் சென்றேன். வழக்கம் போல் அழையா விருந்தாளியாக Mr 7 ½ -யும் கூடவே அன்போட என்னுடன் வந்தார். அன்று Duty – யில் இருந்தவர் பெயர் Dr. வாசுதேவன். நான் பட்ட பாட்டைப் பார்த்து விட்டு, உடனே என்னை Operation Theatre –க்கு (????????) அழைத்துச் சென்றார். P.C. ஸ்ரீராம் ரேஞ்சுக்கு ஏகப்பட்ட ஸ்பெஷல் லைட்டிங் வைத்து என்னைச் சோதித்தவர் முகத்தில் அதிர்ச்சி + சந்தோஷம் கலந்த ஒரு Reaction. எனக்கோ ஒண்ணுமே புரியலை. எனக்குத் தொண்டையில முள் குத்திருச்சுன்னா இவர் ஏன் சந்தோஷப்படணும்னு ஒரே குழப்பம். வேக வேகமா பக்கத்து அறைக்குப் போனார். சரி, ஏதோ ஒரு டூல் எடுத்து வந்து நம்மை ரட்சிக்கப் போனாருன்னு நானும் காத்திருந்தேன். பார்த்தா, அங்க போய் Dr. ஃபரூக்குன்னு ஒருத்தர்கிட்ட ஃபோன்ல பேசிறாரு. “ Dr. ஃபரூக், இங்க ஒரு வினோதமான கேஸ் வந்திருக்கு ( கே……..ஸா………??????????????). MMC –யில Practicals பண்ணிக்கிட்டிருக்கிற நம்ம 3rd Year Students –எல்லோரையும் உடனே இங்க வரச் சொல்லுங்க” என்றார். ஆஹா…நம்மளை வெச்சு இன்னிக்கு கிளாஸ் எடுக்கப் போறாய்ங்கெ. முரளி பறந்துறு என்று நம் ஏழாம் அறிவு நமக்கு ஒரு இன்ஃபர்மேஷன் பாஸ் பண்ணியது. நான் சுதாரித்து கிளம்புவதற்குள் Dr வாசுதேவன் திரும்ப வந்து விட்டார்.

எனக்கு ஒரு லோக்கல் அனஸ்தீஸியாவைக் கொடுத்து விட்டு வாய்க்குள் ஒரு இடுக்கியை வேறு போட்டு விட்டு கொஞ்சம் வெயிட் பண்ணுங்க இதோ வந்துர்றேன் என்று ஒரு Sister –ஐ காவலுக்கு (????) வைத்து விட்டு வெளியே போய் விட்டார். நான், ஒரே ஓட்டமாக ஓடி விடலாம் என்று சந்தர்ப்பத்திற்காகக் காத்திருந்தேன். Bad luck. MMC –யில் இருந்த பக்கிகள் அதற்குள் வந்து விட்டார்கள். என்னை அந்தத் தியேட்டரில் படுக்க வைத்து விட்டு ஏறத்தாழ 20 பேர்கள் என்னைச் சுற்றி நின்று கொண்டார்கள். எனக்கோ பயத்தில் தலை சுற்றி மயக்கமே வந்து விட்டது. Dr. வாசுதேவன் மெதுவாகச் சூழ்நிலையை விளக்க ஆரம்பித்தார். கத்தி மாதிரி ஒரு சாதனத்தை வைத்து அந்த முள்ளை அந்தப் பக்கம் இந்தப் பக்கம் இடறி எப்படியெல்லாம் அது மூவ் ஆகியிருக்கிறது என்று Explain பண்ணினார். எனக்கு சுளீரென்று ஒரு வலி வலித்தது. கூண்டுக்குள் அடை பட்ட பறவையைப் போல கையைப் பட படவென்று அடித்தேன் ( அதான், வாயை இடுக்கி வைத்துக் கட்டிப் போட்டு விட்டார்களே). டாக்டர் ரொம்ப கேஷூவலாக, லோக்கல் அனஸ்தீசியா டயம் முடிஞ்சி போச்சுன்னு நினைக்கிறேன். கொஞ்சம் Add பண்ணலாம், அந்த Bracket –ஐ எடுங்க இந்தா வந்திர்றேன் என்று சொல்லி விட்டு அகன்றார். அதை அகற்றி விட்டு ஒரு Student பிரகஸ்பதி “ என்ன சார் சாப்பிட்டீங்க, இப்படிப் போய் வகையாக மாட்டியிருக்கு?” என்றான். எனக்கோ அப்ப்ப்ப்ப்ப்ப்படி ஒரு எரிச்சல். என் சக்தியை எல்லாம் திரட்டி எச்சிலை முழுங்கி விட்டு, ம்ம்ம்…. சிக்கன் சாப்பிட்டேன், மீன் முள் மாட்டிருச்சு மூஞ்சியைப் பாரு என்றேன் High Pitch- இல். அட… ஒரு பெரிய Relief…தொண்டையில் வலி இல்லை. முள்ளு உள்ளே போயிருச்சு போலிருக்கு (ச்சே..இந்த சூட்சுமம் முன்னாலேயே தெரிந்திருந்தால் நாலு பேரைக் கட்டு ஏறு என்று ஏறியிருக்கலாமே…).

வந்து பார்த்த டாக்டருக்குப் பெரிய ஏமாற்றம். படங்களில் வரும் வசனத்தைப் போல “ It is a medical miracle. நாம் ஒண்ணுமே செய்யாமல் முள்ளு உள்ளே போய் விட்டது” என்றார் ( ஆமா…வேற எப்படித்தான் சமாளிப்பது? ). வயிற்றில் ஏதும் வலி வந்தால் உடனே வந்து விடுங்கள் என்று எனக்கு Warning வேறு. திரும்ப வர்றதுக்கு எனக்கு என்ன கிறுக்கா பிடிச்சிறுக்கு என்று மனதுக்குள் நினைத்துக் கொண்டு சரி சரி என்று தலையை மட்டும் ஆட்டி விட்டு சிட்டாகப் பறந்து விட்டேன்.

வெ.பாலமுரளி.

Monday 28 November 2011

முள்றியின் டைரி -2 அ.....து....தமிழன்னா அந்தப் பயம் இருக்கணும்.

இது நடந்தது 1998 – ம் வருடம் – நைரோபியில். என் மனைவிக்கு உடல் நலம் சரியில்லை என்று டாக்டரிடம் போய் காண்பித்து விட்டு திரும்பிக் கொண்டிருந்தோம். ஏகப்பட்ட ட்ராஃபிக். ஏதோ ஒரு விஜய் படத்தில் விஜய்யும் விவேக்கும் Road Diversion என்று அங்கே போய் இங்கே போய் கடைசியில் திருப்பதியில் போய் நிற்பார்களே, அதுபோல நாங்களும் அங்கே போய் இங்கே போய் கடைசியில் Kikomba Market – க்குள் புகுந்தோம். நைரோபி தெரிந்த மக்களுக்கு Kikomba Market என்றால் தெரியும். Famous for Notorious activities & Muggings. என் டிரைவர் சைமன் அப்போதே மெதுவாகச் சொன்னான் ( என்னை விட வயதில் சிறியவன். அதனால்தான் அவன் இவன் என்கிறேன். தப்பா நினைச்சுக்காதீங்க) முரளி சார் வேண்டாம் இது மோசமான Area என்று. டே….…போடா…எல்லாம் தெரியும் என்றேன் ( நம்ம என்னைக்கு மத்தவங்க பேச்சைக் கேட்டிருக்கோம்..). எல்லோருக்கும் Mr ஏழரை வெறும் ஏழரை ஆண்டுகள் மட்டும்தான் இருந்து விட்டுப் போவார். ஆனால் எனக்கு மட்டும் Life Long- ஆக கூடவே அன்பாக வந்து  கொண்டிருக்கிறார். கொஞ்சம் யோசித்துப் பார்த்தால் இப்பொழுதுதான் புரிகிறது.
சரி….விஷயத்திற்கு வருகிறேன்….Kikomba-விலும் போய் நல்ல Traffic இல் மாட்டிக் கொண்டோம். ஆச்சரியமாக நைரோபியில் அன்று நல்ல வெயில் வேற. நம்ம பங்காளி Mr 7 ½ புண்ணியத்தில் A/C –யும் வேலை செய்யவில்லை. So, எல்லா ஜன்னலையும் நன்றாகத் திறந்து வேறு வைத்திருந்தோம் ( வா…வா..என்று கூப்பிடுகிற மாதிரியே இருந்தது என்று நினைக்கிறேன்). அப்போது என் பக்க ஜன்னலை யாரோ பட படவென்று தட்டினார்கள். நாங்கள் எல்லோரும் அந்தப் பக்கம் பார்க்கையில், மறு பக்கத்தில் ஒருவன் வந்து என் மனைவியின் கழுத்தில் இருந்த 10 பவுன் செயினை அறுத்துக் கொண்டு ஓடி விட்டான். ஒரு நொடிக்குள் எல்லாம் நடந்து விட்டது. நான் கொஞ்சம் கூட யோசிக்காமல், அவனைத் துரத்துவதற்காக இறங்கினேன். சைமன் அப்போதும் சொன்னான். Mr முரளி, போனால் போகட்டும் இறங்காதீர்கள் என்று. டேய் பாவி, 10 பவுண்டா என்று சொல்லி விட்டு அவன் பின்னாலேயே ஓடினேன். உசைன் போல்ட் ரேஞ்சுக்கு ஒரு அசுரத்தனமான Chasing. என் கூடவே மற்றும் ஒரு 10 பேர் துரத்தினார்கள் ( அதில் முக்கால் வாசி பேர் அதே கூட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்பது பின்னால்தான் தெரிந்தது)…அது ஒரு Professional (???) Chasing. கிட்டத்தட்ட அவனை இரண்டு முறை  மிக அருகில் நெருங்கி விட்டேன்…Just –ல மிஸ். அப்போதுதான் அந்த மதில்சுவரைக் கவனித்தேன். நல்ல உயரம். முன்னால் ஓடிக் கொண்டிருந்த நண்பன் ரொம்ப கெச்சலாக நம்ம ஓமக்குச்சி நரசிம்மன் மாதிரி இருந்தான். போல்வால்ட் இல்லாமலேயே சர்வ சாதாரணமாகத் தாண்டுவான் போலிருந்தது. நமக்கோ SINGLE PACK ( அதாங்க தொப்பை)….ரொம்ப யோசிக்க வேண்டிய விஷயம். ஆனால் அவகாசமில்லை. அப்போதுதான் அவன் திரும்பி என்னைக் கண்ணோடு கண் பார்த்தான். Very Powerful சந்திப்பு. ஒரு நொடிக்கும் குறைவான அந்த நேரத்தில் அவன் கண்ணுக்குள் தெரிந்த அந்த மரண பயத்தைப் பார்த்தேன். ஏனோ என்னைக் கண்டு அவன் நடுங்கியதை உணர்ந்தேன். கண்ணிமைக்கும் நேரத்திற்குள் அந்தச் செயினை என்னைப் பார்த்து வீசி விட்டு அந்த சுவரைத் தாண்டிக் குதித்து சிட்டாகப் பறந்து விட்டான். எனக்கோ மனதிற்குள் பெருமிதமான பெருமிதம். அ……து….தமிழன்னா அந்தப் பயம் வேணும்டா என்று நினைத்துக் கொண்டே அந்தச் செயினை எடுத்துக் கொண்டு திரும்பினேன். அப்போதுதான் கூட ஓடி வந்தவர்களைக் கவனித்தேன். எனக்கு மிகவும் அருகில் ஓடி வந்த ஒரே ஒருவரைத் தவிர மற்ற எல்லோரும் மாயமாக மறைந்திருந்தனர். அந்த ஒருவரும், அந்த ஏரியா இன்ஸ்பெக்டராம் - மஃப்டியில். கையில் பிஸ்டலை தூக்கிப் பிடித்துக் கொண்டே வந்திருக்கிறார். நம்ம திருடர் Friend அதைப் பார்த்துத்தான் வெல வெலத்துப் போயிருக்கிறார். சகோதரி உத்ரா கிருஷ்ணன் பாஷையில் சொல்வதானால், செம பல்பு போங்க….
அது சரி, வாழ்க்கையில் பல்பு வாங்கலாம். ஆனால், பல்பே வாழ்க்கையானால் அதுக்குப் பெயர் என்னங்க?

வெ. பாலமுரளி…..

Sunday 27 November 2011

முள்றியின் டைரி -1 - அடச்சே...டம்மி பீஸ்.....

நான் 3 வருடங்களுக்கு முன்னால், என் வேலை விஷயமாக துருக்கி ( Turkey) செல்ல நேர்ந்தது ( எனக்கு ஏழரை நாட்டுச் சனி உச்சத்தில் இருந்த நேரம்).
என் அலுவல் எல்லாம் முடிந்தவுடன், வழக்கம்போல் என் கேமராவை எடுத்துக் கொண்டு அங்குள்ள கோட்டை கொத்தளங்களை புகைப்படம் எடுக்கக் கிளம்பினேன். ஏதோ ஒரு காரணத்தால் இஸ்தான்புல்லில் இருந்த அரண்மனையை அன்று மூடியிருந்தார்கள். பொதுவாக, என்னுடைய  வெளிநாட்டு பயணங்களில் எனக்கு Shopping  பண்ணப் பிடிக்காது
( இப்படித்தான் என் மனைவியிடம் வெகு நாளாக சொல்லிக் கொண்டிருக்கிறேன்).
அன்று எனக்கு வேறு வேலை எதுவும் இல்லாதலால், வினையே (??????) என்று அருகில் இருந்த ஒரு பழம்பொருள் அங்காடி ( ச்சே...தமிழ் என்னமாய் வருகிறது) ஒன்றுக்குள் நுழைந்தேன். Mr. ஏழரையும் கண்ணுக்குத் தெரியாமல் என்னை புன்னகையுடன் வரவேற்றார். சும்மா பொழுது போக்க நுழைந்த என்னை, தந்தத்தால் செய்த கைத்துப்பாக்கி ஒன்று கண்ணடித்து அழைத்தது ( அதுவா அழைத்தது?????? நேரம்.....).
மிகவும் அழகான வேலைப்பாடு. கிட்டத்தட்ட 100 வருடத்தைய துப்பாக்கி. அதன் கலை அழகில் மயங்கி அதன் விலை என்ன என்று கேட்டு விட்டு அவன் பதிலை எதிர்பார்க்காமலேயே என் Credit Card – ஐ எடுத்து நீட்டி விட்டேன். அவனும் விலையைச் சொல்லாமலேயே US$ 450 – ஐ charge பண்ணி விட்டான் ( Supply & Demand principle அவனுக்கு நன்றாகத் தெரிந்திருக்கிறது). அந்தத் துப்பாக்கியின் அழகில் அவனுடன் எனக்குப் பேரம் பேசக் கூடத் தோணவில்லை. அதை வாங்கி விட்டு நேரே ஹோட்டலுக்கு வந்து விட்டேன். அன்று இரவு எனக்கு நைரோபி திரும்புவதற்கு ஃபிளைட்.
அன்று இரவு உணவை முடித்துக் கொண்டு ஏர்போர்ட்டிற்குக் கிளம்பினேன். நான் ஏர்போர்ட் வாசலை மிதிப்பதற்கும் இஸ்தான்புல்லின் Shopping Complex ஒன்றில் குண்டு ஒன்று வெடிப்பதற்கும் மிகச் சரியாக இருந்தது ( ஏழரையின் போது இது எல்லாம் சாத்தியம் என்று பின்னால்தான் புரிந்தது).
இது எதுவும் தெரியாமல் நான் அப்பாவியாக (நெசம்மாலுமே நான் அப்பாவிதாங்க), என் சூட்கேஸை Scanner-இல் போட்டு விட்டு அந்த Security Lady – யைப் பார்த்தேன். ஒரு செகண்டில் அந்த அம்மணியின் முகத்தில் அதிர்ச்சியான ஒரு ஒளிக் கீற்று. வாத் இஸ் திஸ் என்றாள். அவர்களுக்கு “T”  சொல்ல வராது (ஆமா ரொம்ப முக்கியம்....). நான் உடனே அவளை கிண்டல் செய்யும் நோக்கத்தில் ஒரு கண்ணை மூடிக் கொண்டு ஆள்காட்டி விரலை அவளைக் காண்பித்து கட்டை விரலை மேல் நோக்கி வைத்து ‘”திஷ்யூம்” என்றேன். என் கிரகம் கேவலமாக வேலை செய்ய ஆரம்பித்தது அந்த நிமிடம்தான். அவள் என்னிடம் லைசென்ஸ் இருக்கா என்று அமைதியாகக் கேட்டுக் கொண்டே வாக்கி டாக்கியை எடுத்து சில பேரை பதட்டத்துடன் கூப்பிட்டாள். Something Wrong என்று உடனே பட்சி சொன்னது (நாங்க செம ப்ரைட்டுல...).
சில நிமிடங்களில் ஒரு பெரிய போலிஸ் பட்டாளமே வந்திறங்கி Mr. Ali , please come with us என்றது. Mr அலியா?????? அடக் கடவுளே..... (BALAMUR “ALI” – யில் உள்ள கடைசி மூன்று எழுத்துக்களை மட்டும் வசதியாக எடுத்துக் கொண்டார்கள்). என் அப்பா மட்டும் உயிரோடு இருந்தால் வெறுத்துப் போயிருப்பார். வேறு வழியில்லாமல், ஆஹா..இப்படி மாட்டிக் கொண்டோமே என்று என்னை நானே நொந்து கொண்டு அவர்கள் பின்னாலேயே சென்றேன் (Yes...வெற்றிக் கொடி கட்டு படத்தில் வரும் அதே பலிகடா, அருவா Situation).
நான் என் கம்பெனியில் யார் யாருக்கோ Barbeque Grill பண்ணிக் கொடுத்திருக்கிறேன். ஆனால் Grilling  இன் Real Meaning  புரிந்ததில்லை. அன்று தெள்ளந்தெளிவாக புரிந்தது. அவர்கள் அனைவருக்கும் ஏதோ அல் கொய்தா வின் ஒரு பெரிய புள்ளியை பிடித்து விட்ட மாதிரி ஒரு பெருமிதம். கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் என் புண்ணியத்தில் அந்த ஏர்போர்ட்டே ஸ்தம்பித்து விட்டது. ஏதேதோ கேள்விகள்....

அந்தக் கடுமையான Interragation முடிந்த பிறகு அங்கு இருந்த அதிகாரிகள் அனைவரும் இந்த கட்டுரையின் தலைப்பை முணு முணுத்துக் கொண்டே சென்றார்கள். அவர்கள் அந்தத் துப்பாக்கியைச் சொன்னார்களா இல்லை என்னைச் சொன்னார்களா என்று தெரியவில்லை.

வெ.பாலமுரளி.

வணக்கம்........

அன்புள்ள நட்பு சொந்தங்களே.....

உங்கள் அனைவரையும் என்னுடைய சொந்த Blog -இல் சந்திப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன்.

இது நாள் வரையிலும், நான் எடுத்த, எடுக்கின்ற புகைப் படங்களையும், நான் எழுதி வருகின்ற  முள்றியின் டைரியையும், என்னுடைய Face Book -இல் பார்த்து ரசித்து என்னை ஊக்குவித்து வருகின்ற உங்கள் அனைவருக்கும் என் கோடான கோடி நன்றிகள். உயர்திரு. ராமகிருஷ்ணன் ( Hyderabad), திரு. ஸ்ரீனிவாசன் ( மாஸ்கோ), நண்பன் சதீஷ் ( கனடா) - உங்கள் மூவருக்கும் என் Special Thanks.

உங்கள் அனைவரின் ஒத்துழைப்பு இல்லாமல் நான் இவ்வளவு தூரம் வந்திருப்பது சிரமமே. நான் இன்னும் தத்தித் தவழ்கின்ற Stage -இல் தான் இருக்கிறேன். என்னை எழுந்து நடக்க வைக்கவேண்டியது நண்பர்களான உங்கள் அனைவரின் கடமை.

திரும்ப ஒரு முறை உங்கள் அனைவருக்கும் என் நன்றியைத் தெரிவித்துக் கொண்டு அன்னை மீனாட்சியின் ஆசியுடன் இந்த Website -ஐ த் தொடங்குகிறேன்.

வெ. பாலமுரளி